பியர் மற்றும் வைன் ஆகியவற்றுக்கு விலை குறைக்கப்பட்டமையை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சுகாதாரத்திற்கு பாதிப்பான எந்தவொரு திட்டத்தையும் அத்துறைக்கான அமைச்சர் என்ற வகையில் ஆதரிக்க மாட்டேன். ஆகவே வரவு–செலவுத்திட்டம் இறுதி வாக்கெடுப்பில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் பியர், வைன் ஆகியவற்றுக்கு வழங்கிய சலுகைகளை நிதியமைச்சர் மீளபெற வேண்டும் என சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை 2018 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நிதி அமைச்சர் மங்கள சமவீரவின் நீல பசுமை திட்டத்தை நான் பாராட்டுகின்றேன். இந்த திட்டத்தை சர்வதேசம் ஏற்றுக்கொண்டமையினால் சர்வதேச தரம் வாய்ந்த பட்ஜட்டாக இதனை கருத முடியும். நாட்டின் பொருளாதாரத்தை தூர நோக்குடன் அவதானித்தே வரவு–செலவுத்திட்டத்தை அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.
இம்முறை வரவு–செலவுத்திட்டத்திலும் சுகாதாரத்துறைக்கு ஆரோக்கியமான முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் சீனி நுகர்வினை குறைப்பதற்கு அமைச்சர் என்ற வகையில் கடந்த காலங்களில் பல நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன். இந்த திட்டத்தினால் கடந்த காலங்களில் மென்பான தயாரிப்பினை முன்னெடுக்கும் பல்தேசிய நிறுவனங்கள் பாரிய நஷ்டத்தை சந்தித்தது. இதன்போது பல்தேசிய நிறுவனங்கள் என்னிடம் இந்த திட்டத்தை கைவிடுமாறு கோரின. எனினும் அதற்கு நாம் அடிபணியாது இம்முறை வரவு–செலவுத்திட்டத்தில் மென்பானங்களுக்கான சீனி அளவுக்கு கட்டுப்பாட்டினை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சரிடம் கோரினோம். இந்நிலையில் தற்போது பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நிதியமைச்சர் மென்பானங்களில் உள்ள சீனி ஒரு கிராமிற்கு 50 சதம் வரி விதித்தமை பாராட்டத்தக்கது.
அத்துடன் கராப்பிட்டிய, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் புற்றுநோய் பிரிவினை நிர்மாணிக்க நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்று சிறுநீரக வைத்தியசாலைகளை நிர்மாணிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சுகாதாரத்துறைக்கு முன்னேற்றகரமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சுதேச வைத்தியத்துறையை கட்டியெழுப்புவதற்கு சுதேச வைத்திய கற்றல் நிறுவனமொன்றினை நிர்மாணிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே சுகாதாரத்துறைக்கு இவ்வாறான நிதி ஒதுக்கீடுகள் பாராட்டத்தக்கவை. இதன்படி சுகாதார அமைச்சினால் முன்வைக்கப்பட்ட பல யோசனைகள் வரவு–செலவுத்திட்டத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
எனினும் பியர் மற்றும் வைன் ஆகியவற்றுக்கு விலை குறைப்பு செய்தமையை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டின் மதுபாவனை தொடர்பான நிதியமைச்சருக்கு கிடைத்த புள்ளிவிபரம் முற்றிலும் பிழையானது. தற்போது சட்டவிரோத மதுபாவனை குறைவாகவுள்ளது. ஐரோப்பாவில் பியர் பாவனையை முன்னுதாரணமாக எடுத்துக்காட்டுவது தவறாகும். ஏனெனில் ஐரோப்பிய நாடுகளுக்கான பியர் பாவனைக்கும் இலங்கையின் பியர் பாவனைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. எனவே ஆசியாவிற்கு ஐரோப்பிய நாடுகளின் புள்ளிவிபரங்கள் சரிவராது. இலங்கையை பொறுத்தவரையில் 35 சதவீதத்திற்குட்பட்ட வகையிலேயே மதுபாவனை உள்ளது. அத்துடன் சட்டவிரோத மதுபாவனை 6 சதவீதமே உள்ளது. எனவே பியருக்கும் வைனுக்கும் சலுகை வழங்கினால் எமது நாட்டு இளைஞர்கள் அதிகளவில் புதிதாக பாதிக்கப்படுவர்.
அத்துடன் வீதிவிபத்துகளுக்கு மதுபாவனை பிரதான காரணமாக உள்ளது. மதுவுக்கான வரித்தொகையை அதிகரிப்பதனை விடுத்து குறைக்க கூடாது. சவூதி அரேபியாவை போன்று முழுமையாக இல்லாமல் செய்யுமாறு கோரவில்லை. ஏனெனில் இலங்கையின் சுகாதாரம் சர்வதேச தரமிக்கதாகும். அனைவரினாலும் போற்றப்படுகின்றது. அத்துடன் சர்வதேச அளவில் சுகாதாரத்துறைக்கான பல விருதுகளை நாம் பெற்றுள்ளோம். எனவே அதனை இல்லாமல் செய்ய வேண்டாம்.
எனவே பியர், வைன் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டமையை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சுகாதாரத்திற்கு பாதிப்பான எந்தவொரு திட்டங்களையும் அத்துறைக்கான அமைச்சர் என்ற வகையில் ஆதரிக்க மாட்டேன். ஆகவே வரவு–செலவுத்திட்டம் இறுதி வாக்கெடுப்பில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் பியர், வைன் ஆகியவற்றிற்கு வழங்கிய சலுகைகளை நிதியமைச்சர் மீளபெற வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM