இலங்கையில் பௌத்தத்தை பின்பற்றுபவர்கள் சிங்களவர்களேயாவர். ஆகவே பௌத்தத்திற்கு முதலிடம் கோருபவர்கள் சிங்களவருக்கு முதலிடத்தைக் கோருகின்றனர். பௌத்தம் முதலிடம் பெற்றால் சிங்கள ஆதிக்கம் நிலைக்கும். தமிழர்கள், முஸ்லிம்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக மாற்றப்பட்டுவிடுவார்கள். இதனால் பௌத்தத்திற்கான முன்னுரிமையை ஏற்க முடியாது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உண்மையான அதிகாரப்பகிர்வே தீர்வாக அமையும். அவ்வாறான தீர்வு சமஷ்டி அரசியல் யாப்பு ஒன்றின் கீழேயே ஏற்படுத்தப்படவேண்டும். மதத்தைக் காரணம் காட்டி சிறுபான்மையினரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு முயற்சி இடம்பெறுகின்றது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வு என்பது தமிழ் மக்களின் துயரங்களை துடைக்க உதவாது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரப்பகிர்வு விடயத்தினை உடனடியாக அரசாங்கம் கைவிடவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளமை குறித்து கேள்வி எழுப்பியபோதே முதலமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
ஆங்கிலேயர் வெளியேறும் போது சிறுபான்மையினரை நீதியாக, நேர்மையாக, சுய கௌரவத்துடன் அவர்கள் வாழ வழி வகுப்பார்கள் என்று கருதியே சிங்கள அரசியல் தலைவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றார்கள். வௌ்ளையர்கள் செல்லும் வரையில் நல்லவர்கள் போல் நடித்து அதிகாரம் அவர்கள் கைகளுக்கு வந்தவுடன் சிங்கள மக்கள் தலைவர்கள் தமது சுய ரூபத்தை வெளிக்காட்டி விட்டார்கள். சோல்பெரி பிரபு சுதந்திரம் அளித்து பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்குப் பின்னர் டீ.ர்.ஃபார்மர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சிங்கள மக்களின் தலைவர்கள் இவ்வாறு சிறுபான்மையினருக்கு எதிராக நடப்பார்கள் என்று அறிந்திருந்தால் ஒரு சம‘்டி அரசையே தந்துவிட்டுச் சென்றிருக்கலாம் என்று அங்கலாய்த்தார்.
எமது நாட்டின் இன முரண்பாட்டுக்கான காரணம் சிங்கள அரசியல் வாதிகள் நாடு முழுவதற்குமான அரசியல் அதிகாரங்களைத் தம் வசம் ஆக்கிரமித்துக் கொண்டதே. உதாரணத்திற்கு வட கிழக்கில் தமிழ் மொழி காலாதி காலமாகப் பேசப்பட்டு வந்த போதும் 1956ஆம் ஆண்டில் சிங்களம் மட்டும் சட்டமானது வடக்கையும் கிழக்கையும் மற்றைய ஏழு மாகாணங்களுடன் இணைத்து முழு நாட்டுக்கும் ஒரே மொழி என்று சட்டம் இயற்றியது. தமிழ் மக்கள் தலைவர்கள் இதனை எதிர்க்கப் போக அவர்களுடன் உடன்பாடுகள் செய்து வட கிழக்கில் உள்ளவர்கள் பெறவேண்டிய உரித்துக்களைக் கையளிப்பதாகக் கூறிவிட்டு உடன்படிக்கைகளைச் செல்லாக் காசாக்கினர். இன்று இந்த நாட்டில் நிலவும் ஒரேயொரு பிரச்சினை பெரும்பான்மையினர் தாம் ஏதோ வழியில் ஆங்கிலேயரிடம் இருந்து பெற்றுக் கொண்ட அதிகாரங்களை மற்றைய இனங்களுடன், குறிப்பாகத் தமிழ்ப் பேசும் மக்களுடன் பகிர்ந்து கொள்ள மறுத்து வருவதே. எல்லாப் பெரும்பான்மையினக் கட்சிகளின் சிங்களத் தலைவர்களும் கட்சி பேதமின்றி சிங்களப் பெரும்பான்மையினர் பெற்றுக் கொண்ட அதிகாரம் வேறெவருடனும் பகிர்ந்து கொள்ளப்படாது என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டே உள்ளனர்.
விடுதலைப்புலிகளின் கை ஓங்கியிருந்த போது விட்டுக் கொடுக்க முன்வந்தவர்கள் புலிகள் அழிந்ததும் பழைய நிலைக்கே மாறிவிட்டார்கள். எனவே ராஜபக்ஷ அவர்கள் புதிதாக எதையும் கூற வரவில்லை. பிரச்சனைகள் வரும் போது அதிகாரப் பகிர்வுகள் பற்றிப் பேசும் சிங்கள அரசியல் தலைவர்கள் பிரச்சனைகள் ஓரளவு தணிந்ததும் பழைய நிலைக்கே சென்று விடுகின்றார்கள். அதிகாரப் பகிர்வு பற்றி எந்த வித மனமாற்றமும் அவர்களிடையே ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.
அதிகாரப் பகிர்வு பற்றி ராஜபக்ஷ கூறிவருகின்றார். அதாவது அவர் குறிப்பிடுவது ஒற்றையாட்சியின் கீழான அதிகாரப்பகிர்வே. கிட்டத்தட்ட 13வது திருத்தச்சட்டத்தை ஒட்டிய மீளாய்வு செய்யப்பட்ட அதிகாரப் பகிர்வையே அவர் எதிர்க்கின்றார். இவர்தான் போர் முடிந்ததும் 13 பிளஸ் என்று கூறியிருந்தார். இப்பொழுது அதிகாரப்பகிர்வு வேண்டாம் என்கின்றார். இந்தியாவில் சென்று இலங்கையில் பௌத்தம் முதலிடம் பெறாவிட்டால் பௌத்தம் அழிந்துவிடும் என்ற விதத்தில் பேசியுள்ளார். அவர் கூறுவது பௌத்தம் பற்றியல்ல. சிங்கள ஆதிக்கம் பற்றியே என்பதை நாம் உணர வேண்டும். இலங்கையில் பௌத்தத்தைப் பின்பற்றுபவர்கள் சிங்களவரே. ஆகவே பௌத்தத்திற்கு முதலிடம் கோருபவர்கள் சிங்களவருக்கே முதலிடம் கோருகின்றார்கள். அதாவது பௌத்தம் முதலிடம் பெற்றால் சிங்கள ஆதிக்கம் நிலைக்கும். தமிழர்கள், முஸ்லீம்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக மாற்றப்பட்டு விடுவார்கள் என்பதே எதிர்பார்ப்பு. இந்து, கிறிஸ்தவத் தமிழரும், முஸ்லீம்களும் எக்காலத்திலும் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவதை ஏற்கக்கூடாது. ஏற்றால் நாம் இரண்டாந்தரப் பிரஜைகள் ஆகி விடுவோம். பெரும்பான்மையினர் அரசாளும் போது பெரும்பான்மையினர் மதத்திற்கு முன்னுரிமை கேட்பது மதத்திற்குப் பங்கம் வரும் என்பதற்காக அல்ல. மதத்தைக் காரணம் காட்டி சிறுபான்மையினரைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான்.
ராஜபக்ச கூறிய கருத்தைப் பற்றி என்னுடைய கருத்தைக் கேட்டீர்களானால் நானும் ராஜபக்ச செப்புவதையே கூறுவேன். அதாவது ஒற்றை ஆட்சியின் கீழான அதிகாரப் பகிர்வைக் கைவிட வேண்டும் என்று அவரோடு சேர்ந்து கூறி விட்டு அதே மூச்சில் சமஷ்டி அரசியல் யாப்பே எமக்கு அவசியம் என்பேன். ஒற்றை ஆட்சியின் கீழான அதிகாரப்பகிர்வு தமிழ் மக்களின் துயரங்களைத் துடைக்க உதவாது. மீண்டும் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தின் கீழ் நாம் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து போராட வேண்டிய நிலையே ஏற்படும். சுய கௌரவத்துடன் வாழத்துடிக்கும் எந்த ஒரு இனமும் இன்னொரு இனத்தின் ஆதிக்கக் கெடுபிடிகளுக்கு அடிமைப்பட்டு வாழ அனுமதி தெரிவிக்க மாட்டார்கள். ஒரே விதமான மக்கட் கூட்டங்கள் இடையேதான் ஜனநாயகம் பெரும்பான்மையினரின் கருத்தை ஏற்றுக் கொள்கின்றது. பல்லின, பல்மத, பன் மொழி மக்களைப் பொறுத்த வரையில் யாவரும் சம உரித்துக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் யாவரதும் அடிப்படை உரிமைகளை வழங்கிய பின்னரே மற்றவற்றைப் பற்றிச் சிந்திக்கின்றது.
தற்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் தமது குற்றமுள்ள நெஞ்சை ஆசுவாசப்படுத்த தமிழர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்து முன்மொழிவுகளை முன்வைக்கக் கூடும். அவர்கள் தருவதானது அவர்களால் தருவதாக அமையட்டும். எம்மைப் பொறுத்த வரையில் இந் நாட்டின் இனப் பிரச்சினை நிரந்தரமாகத் தீர வேண்டுமானால் 1949ஆம் ஆண்டிலிருந்து எமது அரசியல்த் தலைவர்கள் வலியுறுத்தி வரும் சமஷ்டி அரசியல் யாப்பே எமக்கு ஓரளவாவது நன்மை பயப்பதாய் அமையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM