பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கடந்த வருடம் நாங்கள் இலங்கைக்கு வந்தபோது பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் உறுதியளித்தனர். ஆனால் இவ்வருடம் இலங்கை வரும் போதும் பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் நீக்கப்படாமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கடும் அதிருப்தியை வெளியிடுகின்றது என்று இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் மதிப்பீடு செய்ய வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவின் தலைவி ஜீன் லெம்பட் தெரிவித்தார்.
இதேவேளை நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் பாரிய தாமதம் நிலவுகிறது. பொறுப்புக்கூறலில் இதுவரை எந்த அடைவுமட்டமும் இல்லை. இதனால் அரசாங்கத்திற்கு நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களின் நம்பிக்கை இன்று படிப்படியாக குறைவடைந்து செல்வதை அவதானிக்கின்றோம். அரசாங்கம் அந்த நம்பிக்கையை இழந்திருக்கின்றது எனவும் இலங்கைக்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவின் தலைவி ஜீன் லெம்பட் சுட்டிக்காட்டினார்.
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்பட்டதன் பின்னர் 27 சர்வதேச சாசனங்களை இலங்கை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது தொடர்பில் மதிப்பீடு செய்வதற்கு இலங்கைக்கு வருகை தந்த ஜீன் லெம்பட் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத் தூதுக்குழுவினர் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த விடயங்கள் வெளியிடப்பட்டன. ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவின் தலைவி ஜின் லெம்பட் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
யாழில் சிவில் சமூகத்துடன் சந்திப்பு
எமது குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அங்கு வடமாகாண ஆளுநரையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் இடம்பெறும் மீள்குடியேற்ற செயற்பாடுகளையும் பார்வையிட்டோம். கொழும்பில் நிதி அமைச்சர் சர்வதேச வர்த்தக அமைச்சர், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், சுற்றாடல் அமைச்சர், தொழில் உறவுகள் அமைச்சர், தேசிய நல்லிணக்க அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடினோம். நாளைய தினம் (இன்றைய தினம்) எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றோம்.
ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை
நாங்கள் கடந்த முறை இலங்கைக்கு வந்ததன் பின்னர் இலங்கையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை வரவேற்கின்றோம். இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை கிடைத்திருக்கின்றது. அத்துடன் மீன் ஏற்றுமதி தடையும் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு புதிய வருமான மூலங்கள் கிடைப்பதுடன் தொழில்வாய்ப்புக்களை உருவாக்க முடியும். எவ்வாறெனினும் இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டது. இலங்கை எவ்வாறு 27 சர்வதேச சாசனங்களை மதிக்கிறது என்பதை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
கடும் தாமதத்தை அவதானித்தோம்
மிக முக்கியமாக இங்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் யுத்தத்திற்குப் பின்னரான நாட்டின் நிலைமையிலான முன்னேற்றங்கள் மிகவும் தாமதமான மந்தகதியில் இடம்பெறுவதைக் கண்டு எமது கவலையை வெளியிடுகின்றோம். எதிர்பார்த்ததைவிட மிகவும் தாமதமாக முன்னேற்றம் காணப்படுகின்றது. எனினும் முன்னேற்றத்திற்கான அத்திவாரங்கள் சரியான இடங்களில் இடப்பட்டுள்ளதை காண்கின்றோம். அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாட்டை பலப்படுத்துமாறும் மனித உரிமையை பாதுகாக்குமாறும் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சிப்படுத்தலையும் உறுதிப்படுத்துமாறும் தேசிய நல்லிணக்கத்தை வலுவாக முன்னெடுக்குமாறும் நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
பல விடயங்கள் செய்யப்படவில்லை
இங்கு முக்கியமான சில விடயங்கள் இன்னும் நிலுவையிலேயே இருப்பதை காண்கின்றோம். குறிப்பாக நாம் கடந்த முறை இலங்கைக்கு வந்தபோது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக சர்வதேச தரத்தையுடைய புதிய சட்டம் ஒன்றை கொண்டுவருவதாக பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர்கள் எமக்கு தனிப்பட்ட ரீதியில் உறுதியளித்தனர்.
கடும் அதிருப்தி
ஆனால் அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படாமை குறித்து அதிருப்தி அடைகின்றோம். அதாவது பயங்கரவாத தடைச்சட்டத்தை இதுவரை நீக்காமல் இருக்கின்றமை தொடர்பில் நாங்கள் அதிருப்தியும் கவலையும் கொள்கின்றோம். தற்போது இந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் செயற்பாடு இல்லாவிடினும் இந்த சட்டத்தின் கீழ் முன்னர் கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பலர் நீதிமன்றத்தையே காணாமல் குற்றப்பத்திரிகை முன்வைக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். பலர் பலவருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.
காணி விடுவிப்பில் தாமதம்
இதேவேளை வடக்கில் காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் மிகவும் எதிர்பார்த்ததைவிட மந்த கதியில் தாமதமாக இடம்பெறுவதை அவதானிக்கின்றோம். காணிகள் விடுவிக்கப்படவில்லையென்பதுடன் அவற்றுக்கான நட்டஈடுகளும் வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம். இந்த விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலையடைந்திருக்கின்றனர். காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை வரவேற்கின்றோம்.
பொறுப்புக்கூறல் இல்லை
ஆனால் தேசிய நல்லிணக்க செயற்பாட்டிலும் பொறுப்புக்கூறல் பொறிமுறையிலும் எந்தவிதமான முன்னேற்றமும் அடையப்படவில்லை என்பது தொடர்பில் எமது கவலையை வெளிப்படுத்துகின்றோம். அரசாங்கம் வாக்குறுதி அளித்தவாறு இந்த வெற்றியை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமென ஊக்குவிக்கின்றோம். எனினும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் இலங்கையுடன் உறவைப் பலப்படுத்தவேண்டும் என்றும் ஈடுபாட்டுடன் செயற்படவேண்டும் என்றும் பரிந்துரை செய்கின்றோம்.
மக்கள் நம்பிக்கையிழப்பு
அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாட்டில் அரசாங்கத்தின் முன்னேற்றத்தை காண்கின்றோம். மேலும் இந்த விடயத்தில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம். சர்வதேச சாசனங்கள் விடயத்திலும் தாமதம் நிலவுவதை காண்கின்றோம். இந்த நிலைமை மாறவேண்டும். குறிப்பாக மாற்றங்கள் மிகவும் தாமதமாக இடம்பெறுவதை அவதானிக்கின்றோம். இது மக்களின் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழக்க செய்திருக்கின்றது. அரசாங்கம் அந்த நம்பிக்கையை இழந்திருக்கின்றது.
கேள்வி: ஜி.எஸ்.பி.பிளஸ் வழங்கப்பட்ட பின்னர் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?
பதில்: பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூற முடியாது. ஆனால் ஒருசில ஆரோக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும் அடுத்தவருடம் ஜனவரி மாதம் இலங்கை எவ்வாறு இந்த சர்வதேச சாசனங்களில் செயற்படுகிறது என்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிடவிருக்கிறது. அந்த அறிக்கையில் என்ன கூறப்படப்போகின்றது என்பதை பார்க்கின்றோம். நாங்கள் இலங்கையின் அதிகாரிகளை சந்தித்தபோது அவர் பல செயற்பாட்டுத் திட்டங்களை எமக்கு காட்டினர்.
கேள்வி: எந்த விடயத்தில் அதிருப்தி காண்கின்றீர்கள்?
பதில்: ஒருவருடத்திற்கு முன்பு வாக்குறுதியளித்த சில விடயங்கள் இடம்பெறவில்லை. இது கவலையை ஏற்படுத்துகிறது. நாங்கள் இது தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்துவோம். இந்த விடயங்களில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம்.
கேள்வி: பயங்கரவாத தடைச்சட்ட விவகாரம் குறித்து?
பதில்: இது தொடர்பில் கவலை அடைகின்றோம். அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது. அதன்படி அர்ப்பணிப்புடன் அரசாங்கம் செயற்படும் என நம்புகிறோம். சிவில் மற்றும் அரசியல் உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும். இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடன் ஈடுபாட்டுடன் செயற்படுகின்றது. அவை ஒரு பக்கத்தில் நடைபெறும். எமது ஈடுபாடும் தொடரும்.
கேள்வி: பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க 2019 ஆம் ஆண்டுவரை கால அவகாசம் வழங்கப்போகின்றீர்களா?
பதில்: பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க அவ்வளவு காலம் வழங்குவதா? அரசாங்கம் இதனை விரைவில் நீக்கி புதிய சட்டமூலத்தை சர்வதேச தரங்களுக்கு அமைய கொண்டுவரும் என எதிர்பார்க்கின்றோம். ஏனைய நல்லிணக்க செயற்பாடுகளுக்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் எம்மைப் பொறுத்தவரையில் பயங்கரவாத தடைச்சட்டம் விரைவாக நீக்கப்படவேண்டும்.
கேள்வி: பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாவிடின் என்ன செய்வீர்கள்?
பதில்: அரசாங்கம் அதனை நீக்கும் என நம்புகின்றோம். இலங்கை மக்கள் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையின் நன்மையைப் பெறவேண்டுமென்பதே எமது விருப்பம். நாம் நிலைமையை பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அதுமட்டுமன்றி ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை வெளிவரவிருக்கின்றது.
கேள்வி: காணி விடுவிப்பு தொடர்பில் ?
பதில்: இந்த விடயத்தில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக்குழு கவலையடைந்திருக்கின்றது. காணி விடுவிப்பு கடும் தாமதத்தை அடைந்திருக்கின்றது. அதுமட்டுமன்றி நட்டஈடும் வழங்கப்படாமல் இருக்கின்றது.
கேள்வி: இலங்கை வந்த ஐ.நா. நிபுணர் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் இல்லை என அதிருப்தி வெளியிட்டிருந்தார். அது தொடர்பில் உங்கள் பார்வை எவ்வாறு இருந்தது?
பதில்: ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு நேர அட்டவணையுடன் கால அவகாசத்தை வழங்கியிருக்கிறது. அதற்கேற்றவகையில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புகிறோம். ஆனால் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையே நாம் காண்கின்றோம். நல்லிணக்க படிமுறைகளில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பொறுப்புக்கூறலில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது தெரிகிறது.
கேள்வி:2016 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் எவ்வாறு உறுதியை அரசாங்கம் அளித்தது?
பதில்: பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதிய சட்டமூலத்தை சர்வதேச தரத்துடன் கொண்டுவருவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சர்வதேச தரத்துடன் புதிய சட்டமூலம் கொண்டுவரப்பட்டு தற்போது நடைமுறையில் இருக்கின்ற பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என நம்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM