10 ஆயிரம் வீடு­களை வழங்­கிய நரேந்திர மோடி.!

Published By: Robert

30 Oct, 2017 | 10:24 AM
image

மலை­யக மக்க­ளுக்­கான வீட­மைப்புத் திட்டத்தை அமைச்சர் திகாம்­பரம் சிறந்த முறையில் மேற்­கொண்டு வரு­கின் றார். அதில் திருப்தி கண்­டதால் தான் இந்­தியப் பிர­தமர் நரேந்திர மோடி மேலும் 10 ஆயிரம் வீடு­களை வழங்க முன்­வந்­துள்ளார் என ஐ.தே.க. தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று அட்டன் டன்பார் மைதா­னத்தில் இடம்­பெற்ற காணி உறுதிப்பத்­தி­ரங்கள் வழங்கும் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரி­வித்தார். 

மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சின் ஊடாக பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு தலா ஏழு பேர்ச் காணியில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் தனி வீடு­க­ளுக்­கான காணி உறுதிப் பத்­தி­ரங்கள் வழங்கும் நிகழ்வு அமைச்சர் பழனி திகாம்­பரம் தலை­மையில் “எங்கள் நிலத்தில் – எங்கள் வீடு” என்னும் தொனிப் பொருளில் இடம்­பெற்­றது. நிகழ்வில் காணி மற்றும் பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக, கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வீ. இரா­தா­கி­ருஸ்ணன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எம். தில­கராஜ், வடிவேல் சுரேஷ், வேலு குமார், கே.கே. பிய­தாஸ, சுஜித் பெரேரா, அமைச்சின் செய­லாளர் திரு­மதி ரஞ்­சினி நட­ரா­ஜ­பிள்ளை, மத்­திய மாகாண சபை உறுப்­பி­னர்கள் சோ. ஸ்ரீதரன், எம் உத­ய­குமார், சிங். பொன்­னையா, சரஸ்­வதி சிவ­குரு, எம். ராம். ஆர். இரா­ஜாராம்  “ட்ரஸ்ட்” நிறு­வனத் தலைவர் வீ. புத்­தி­ர­சி­கா­மணி உற்­பட பலர் கலந்து கொண்­டார்கள்.

   பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொடர்ந்து பேசு­கையில், 

1993 ஆம் ஆண்டில் டி.பி. விஜ­ய­துங்க ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது, பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு வீட­மைப்புத் திட்­டத்தை ஆரம்­பித்தேன், எனினும் முடி­யாமற் போய் விட்­டது. இன்று 20 வரு­டங்­களின் பின்னர் அந்தத் திட்டம் நிறை­வேறி வரு­கின்­றது. எமது நல்­லாட்சி அர­சாங்­கத்தில் மலை­ய­கத்தில் புதிய கிரா­மங்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான அமைச்சு உரு­வாக்­கப்­பட்டு அதற்கு திகாம்­பரம் அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டு தலா ஏழு பேர்ச் காணியில் தனி வீடு­களை அமைத்து வரு­கின்றார். அதில் 2864 குடும்­பங்­க­ளுக்கு இன்று காணி உறுதிப் பத்­தி­ரங்கள் வழங்கப் படு­வது மகிழ்ச்­சி­யான விடயம் ஆகும்.

எத்­த­னையோ அர­சாங்­கங்கள், அமைச்­சர்கள் வீடு­களைக் கட்டித் தரு­வ­தா­கவும், காணி­களைப் பெற்றுக் கொடுப்­ப­தா­கவும் கூறி­னார்கள். ஆனால், யார் பெற்றுக் கொடுத்­தார்கள்? திகாம்­பரம் அமைச்­ச­ரான பிறகு அதை நடை­மு­றையில் செய்து காட்டி வரு­கிறார். எமது வீட­மைப்புத் திட்டம் சிறந்த முறையில் இடம்­பெற்று வரு­வதை மலை­ய­கத்­துக்கு விஜயம் செய்திருந்த இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் கவ­னத்­துக்குக் கொண்டு வந்தோம். அதன் பய­னாக மேலும் 10 ஆயிரம் வீடு­களை இந்­தியப் பிர­தமர் வழங்­கி­யுள்ளார்.

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சத்­தியக் கட­தாசி மூலம் 1986 இல் பிர­ஜா­வு­ரிமை வழங்­கப்­பட்­டது. ஸ்ரீமா – சாஸ்­திரி ஒப்­பந்­தத்தின் மூலம் தாயகம் திரும்­பியோர் போக எஞ்­சி­யி­ருந்­த­வர்­க­ளுக்கும் பிர­ஜா­வு­ரிமை கிடைத்­தது. எனவே, இலங்கைப் பிர­ஜைகள் என்ற ரீதியில் அவர்­க­ளுக்கு காணி பெறு­கின்ற உரிமை இருக்­கின்­றது. இந்த நாட்டில் ஏனைய மக்­க­ளுக்கு இணை­யாக அவர்­களும் வாழ வேண்டும். அவர்­களின் வாழ்க்கை மேம்­பாடு காண வேண்டும்.

இந்த நாட்டில் அனை­வரும் ஒற்­று­மை­யாக வாழ்­வ­தற்கு  2015 இல்  தமிழ், சிங்­கள, முஸ்லிம், பறங்­கியர் மக்கள் ஆணை வழங்­கி­யுள்­ளர்கள். அதன் அடிப்­ப­டையில் ஐ.தே.கட்­சியும், ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்த நல்­லாட்சி மலர்ந்­துள்­ளது. மகிந்த ஆட்­சியை நீக்கி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாகக் கொண்டு வந்­துள்­ளார்கள் இந்த இரண்டு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்­தது போல, மக்­களும் ஒன்­று­பட்டு நாட்டை முன்­னேற்றி அபி­வி­ருத்திப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். நாட்டில் இடம்­பெற்று வந்த 30 ஆண்டு கால யுத்தம் முடி­வுகுக் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. மக்கள் அனை­வரும் சமா­தா­னத்­துடன் அமை­தி­யாக வாழ வேண்டும்.

உல­கத்தில் உள்ள ஒரே­யொரு பௌத்த நாடு இலங்கை ஆகும். நாம் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்­தவ வணக்க­த­லங்­களை அபி­வி­ருத்தி செய்து வரு­கின்றோம் ஒவ்­வொ­ரு­வ­ரது கலை கலா­சார விழு­மி­யங்­களை பேணிப் பாது­காக்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். மொழிப் பிரச்­சினை பிரி­வி­னைக்கு வழி வகுத்து விடக் கூடாது. இன்­றைய அர­சியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க பொது மக்கள் வழங்கிய வரத்தினை கொண்டு இம்மக்களின் உரிமைகளுக்கு பாதகம் விளைவிக்காத நிலையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது அவசியமான தேவையாகவும், நல்ல சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது.

அன்று மொழி பிரச்சினை இருந்ததால் தனிநாடு பிரச்சினை உருவாகியது. இதனால் 30 வருட யுத்தத்திற்கும் நாம் முகம்கொடுத்தோம். பல துன்பகரமான நிகழ்வுகளிலிருந்து தற்பொழுது மீண்டுள்ளோம். புதிய அரசியல் யாப்பு ஊடாக இந்த நாட்டில் ஒருமித்த மக்களாக மட்டுமன்றி உரிமை பெற்ற மக்களாக அனைவரையும் வழிநடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இந்த நாட்டில் இரண்டு பிரதான கட்சிகள் முதல் முதலாக ஒன்றிணைந்து அரசியல் யாப்பை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருக்கும் இந்த வேளையில் வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கின்றன.

இந்த உயர்வான நிலை நாம் வரவேற்கின்றோம். கிடைத்திருக்கும் மக்களின் ஆணைக்கேற்ப அரசியல் யாப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும். சந்தர்ப்பங்களை பிரயோசனப்படுத்தவேண்டும்.

புதிய அரசியல் அமைப்பு பற்றி பலவாறு விமர்சனம் செய்து வருகின்றார்கள். யாரும் நாட்டைப் பிரிக்க முயலவில்லை. புதிய அரசியலமைப்பு நாட்டை பிரிக்கும் அரசியலமைப்பு அல்ல. நாம் அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்லவே விரும்புகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்