புதிய அரசியல் அமைப்பு நாட்டினை பிரிப்பதாக கூறுவதுடன் மக்கள் விடுதலை முன்னணி நாட்டினை பிரிக்கும் அணியில் உள்ளதாக கூறுகின்றனர். தைரியம் இருந்தால் அரசியல் அமைப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக் ஷ என்னுடன் விவாதத்திற்கு வரவேண்டும் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக சவால் விடுத்தார்.
மக்கள் முன்னிலையில் இவர்களின் ஊழல் குற்றங்களை வெளிப்படுத்தி நிர்வாணப்படுத்தவும் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் இயக்கக் கூட்டம் அம்பாந்தோட்டை தங்கல்லை பிரதேசத்தல் இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இந்த நாட்டினை புதிய பாதையில் மாற்றி செல்ல இன்று மக்கள் மாற்று சக்தி ஒன்றினை எதிர்பார்க்கின்றனர். நாம் சரியான பாதையினை மக்களுக்கு காண்பிக்க முடியும் ஆனால் மக்களே மாற்றத்தினை உருவாக்க வேண்டும். இன்று நாடு முகங்கொடுத்து வரும் பிரச்சினைகளில் இருந்து விடுபட வேண்டும் என்றால் மக்கள் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும். அதற்கான தலையீடுகளை மக்கள் கையில் எடுக்க வேண்டும். மேலும் ஊடகங்களில் இன்று ஆழமான அரசியல் கொள்கை ஒன்று தேவைப்படுகின்றது. மக்களை குழப்பும் அல்லது தொடர் நாடகத்தினை போல் ஊடகங்கள் செயற்படுவது வெறுக்கத்தக்கதாகும்.
வேடிக்கையான அரசியல் காட்சிகளை காட்டி மக்களை போலியான அரசியலின் பக்கம் திருப்பவே முயற்சிக்கின்றனர். தொலைக்காட்சியில் ஒரு மணிநேரம் ஆழமான அரசியல் கலந்துரையாடல் செய்ய வேண்டும். பத்திரிகைகளும் மக்கள் மத்தியில் சென்றடையும் அரசியல் பத்திகளை வெளிப்படுத்த வேண்டும். ஊடகங்களில் சிறிது காலமாக தொடர்ச்சியாக ரவி கருணாநாயகவை மட்டும் தலைப்பு செய்தியாக வைத்திருந்தனர். அதன் பின்னர் விஜயதாச ராஜபக் ஷவை பிடித்துக்கொண்டனர். இப்போது அரசியல் அமைப்பு பற்றி பேசுகின்றனர்.
எமது நாடு இன்று பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது என்றால் வேலைவாய்ப்புகள் கிடைக்கும், சுகாதாரம், விவசாயம், கல்வி அனைத்தும் வளர்ச்சி காணும். ஆனால் இவை அனைத்தும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டில் 40 வீதமான இளம் பராயத்தினர் தொழில் இல்லாது உள்ளனர், அல்லது படிக்காது உள்ளனர். ஏனெனில் எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது.
எமது நாட்டின் மிக முக்கிய நெருக்கடி நாம் வாங்கிய கடன்களில் தான் தங்கியுள்ளது. நாடு பாரிய கடன் நெருக்கடியில் உள்ளது. முன்னைய ஆட்சியின் போது வாங்கிய கடன்களின் தொகை மிக அதிகமாக உள்ளதாக இந்த அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் ஆட்சியை பிடிக்கும் போது சர்வதேச நிதிகள் குவிகின்றன, நன்கொடைகள் வருகின்றன என இவர்கள் கூறினர். அவை அனைத்தும் எங்கே? எவரும் எமக்கு கடன் தருவதில்லை, முழுமையான நிதி கடன் அடிப்படியிலேயே தருகின்றனர். ஆனால் இந்த ஆட்சியாளர்கள் மக்களுக்கு பொய்களை கூறி ஏமாற்றியே ஆட்சி செய்து வருகின்றனர். இப்போது மட்டும் அல்ல, கடந்த காலங்களிலும் இதே பொய்யை கூறியே ஆட்சி செய்கின்றனர்.
நாம் ஜப்பான், சீனா, குவைத், இந்தியா, டென்மார்க், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் மற்றும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கை வங்கி, செலான் வங்கியில் கூட அரசாங்கம் கடனாளியாக உள்ளது. இதன் காரணமாக தான் இலங்கையின் நிலங்களை அவர்கள் சொந்தம் கொண்டாடுகின்றனர். அரசாங்கமும் இலங்கையின் வளங்களை விற்றாவது மேலும் கொஞ்சம் பணத்தை பெற்றுக்கொள்ள முடியுமா என்றே பார்க்கின்றனர்.
ஆகவே இந்த நிலைமையினை தடுக்க வேண்டும். எமது முழு நாட்டையும் நாட்டு மக்களையும் அடிமையாக்க முன்னர் இந்த மோசமான ஆட்சியாளர்களை விரட்டியடிக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும். இலங்கைக்கான பொருட்களை இறக்குமதி செய்ய ஒரு ஆண்டுக்கு 2000 கோடி டொலர் தேவைப்படுகின்றது, ஆனால் ஏற்றுமதி மூலம் எமக்கு 1000 கோடியே கிடைக்கின்றது. ஆகவே எமது பொருளாதார முகாமைத்துவம் மிகவும் மோசமானதாக உள்ளது. உள்நாட்டு உற்பத்தி எவ்வாறு முன்னெடுப்பது என்பது தெரியவில்லை. இதன் காரணமாகவே டொலர் பெறுமதி இன்று அதிகரித்துள்ளது.
எமது நாட்டின் ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளமையே இதற்குக் காரணம். இது எமது மொத்த பொருளாதாரத்திலும் தாக்கத்தை செலுத்தும். இதனால் எமது கடன் தொகை மேலும் அதிகரிக்கும். இருக்கும் கடன் தொகையை விடவும் 28 கோடி ரூபாவால் எமது கடன் அதிகரிக்கும். அம்பாந்தோட்டை, மத்தள, திருகோணமலை திட்டங்களை முன்னெடுக்க நாம் வாங்கிய கடன் 40 ஆயிரம் கோடிகளாகும் . ஆனால் இன்று நாட்டின் ரூபாயின் வீழ்ச்சி கண்டுள்ளது அடுத்து 47 ஆயிரம் கோடியாக எமது கடன் தொகை அதிகரித்துள்ளது.
இதுவா நாட்டின் பொருளாதார வளர்ச்சி? 30 வீதமாக எமது ஏற்றுமதி இன்று 14 வீதமாக குறைவடைந்துள்ளது. இது நாட்டுக்கு ஒருபோதும் நல்லதல்ல. இன்று எம்மை விட பின்தங்கிய நாடுகள் அனைத்தும் பொருளாதரத்தில் வளர்ச்சி கண்டு வருகின்றன. ஆனால் எமது ஆட்சியாளர்கள் இன்றுவரையில் கொள்ளையடித்து வாழ்ந்து வருகின்றனர்.
ஏழைகள் போல் வாழ்வதால், வெள்ளைக்காரர் போல் வாழ்வதாலோ , சர்வதேச நாடுகளின் நண்பன் என்று கூறும் எவரும் தலைவர்கள் அல்ல. நாட்டின் பொருளாதரத்தை சரியான முறையில் கொண்டுசென்று மக்களை பாதுகாக்கும் நபர்களே தலைவர்கள். மக்கள் கடனாளியாக்கி, நாட்டினை சர்வதேசத்திற்கு விற்று, சொத்துக்களை கொள்ளையடிக்கும் இவர்கள் எவரும் மக்கள் தலைவர்கள் அல்ல.
இன்று மக்கள் நோயாளிகளாக மாறி வருகின்றனர். கல்வியற்ற சமூகம் உருவாகி வருகின்றது, ஊழல், குற்றங்கள் அதிகரித்து வருகின்றது, இந்த தலைவர்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள சமூகம் இவ்வாறே அமைந்துள்ளது. ஆனால் இவற்றை எல்லாம் விட்டு வெறுமனே நாடக அரசியலில் அனைவரும் மூழ்கியுள்ளனர். புதிய அரசியல் அமைப்பு நாட்டினை பிரிப்பதாகவும், இனவாதத்திற்கு வாய்ப்புகளை கொடுப்பதாகவும் கூறுவதுடன் மக்கள் விடுதலை முன்னணி அதற்கு துணை போவதாகவும் கூறுகின்றனர்.
எம்மை பிரிவினைவாதிகள் என்று கூறிக்கொண்டு மஹிந்த, விமல் போன்றவர்களே பிரிவினைவாதிகளின் பக்கம் சேர்ந்துள்ளனர். அரசியல் அமைப்பு குறித்து விவாதத்திற்கு எம்மை அழைக்கின்றனர்.
அரசியல் அமைப்பு குறித்து விவாதம் செய்ய நான் தயார், ஆனால் அவர்களின் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ என்னுடன் விவாதத்திற்கு வரவேண்டும். அவர்களின் தலைவர் மஹிந்தவும் ஜே. வி.பி யின் தலைவராக நானும் விவாதம் செய்யலாம். அதற்கான தைரியம் இருக்கும் என்றால் அவர் என்னுடன் விவாதத்திற்கு வரவேண்டும். தேசப்பற்றாளர்கள் என கூறிக்கொண்டு இந்த நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்து நாட்டினை நாசமாக்கிய அனைத்துமே எமக்கு நன்றாகத் தெரியும்.
கொலைகள், கொள்ளைகள் இவர்கள் செய்த அனைத்துமே எமக்கு நன்றாகத் தெரியும். இவை அனைத்தையும் வெளிப்படுத்தி இவர்களை மக்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி இவர்களின் முகமூடிகளை கிழித்தெறிய நாம் தயார். அதற்கான எந்த மேடையிலும் இவர்களுடன் நாம் விவாதிக்க தயாராக உள்ளதாக என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM