என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக எனது குடும்பத்தை தண்டிக்க வேண் டாம். என்னை கைது செய்து சிறையில் அடைத்திருக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று எனது மகனுக்கு நடந்த அநியாயம் நாளை எனக்கும் எனது மனைவிக்கும் மற்றைய சகோதரர்களுக்கும் நடக்கும். எனினும் எனது குடும்பத்தை மட்டுமல்ல எனது பரம்பரையை தண்டித்தாலும் கூட எமது பயணத்தை தடுக்க முடியாது. இந்த அரசாங்கத்துக்கு எதிராக களமிறங்க நாம் தயாராகிவிட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவை பார்வையிட நேற்று மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
எனது குடும்பத்தை முழுமையாக பழிவாங்கும் நோக்கத்தில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. என்னை பழிவாங்க வேண்டும் என்றால் என்னை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதை விடுத்து எனது மகனை சிறையில் வைத்து என்னை தண்டிக்க வேண்டாம். நல்லாட்சி பற்றி கதைத்துக்கொண்டு ஆட்சியை கைப்பற்றியவர்கள் இன்று தனிப்பட்ட அராஜக ஆட்சியை நடத்தி வருகின்றனர். எம்மை ஹிட்லர் என வர்ணித்துவந்தவர்கள் இன்று ஹிட்லரை விடவும் மோசமான வகையில் தமது பழிவாங்கல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
என்மீதும் எனது குடும்பத்தின் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தவர்கள் இன்று எந்த வகையிலேனும் எனது குடும்பத்தை பழிவாங்கவே நினைக்கின்றனர். சர்வதேச வங்கிகளில் எமது தனிப்பட்ட பணம் கோடிக்கணக்கில் இருப்பதாக தெரிவித்தனர். இரகசிய மாளிகைகளில் நாம் சட்டவிரோதமாக பணம் சேர்த்து வைத்திருப்பதாக கூறினார்கள். ஆயுதக் கப்பல் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார்கள். ஆனால் இன்று வரையில் அவை தொடர்பில் ஆதார பூர்வமாக நிருபிக்க முடியவில்லை.
இப்போது எனது மகனை கைது செய்ததும் என்னை பழிவாங்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் மாத்திரமேயாகும். எனது அரசியல் பயணத்தை முடிவுகட்டவும் எம்மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இல்லாதொழிக்கவுமே இந்த அரசாங்கம் மிகவும் மோசமாக நடந்துகொள்கின்றது. இன்று எமது நிலைமை என்னவென்பதை மக்கள் நன்றாக உணரக்கூடியதாக உள்ளது. அதேபோல் இப்போது எனது எமது மகனின் கைதில் தெளிவான விளக்கம் எதையும் இவர்களால் முன்வைக்க முடியாது உள்ளது.
குற்றம் செய்திருந்தால் அதற்கான தண்டனை கிடைக்க வேண்டும். அது எனது மகனுக்கு ஒன்றாகவும் ஏனையவர்களுக்கு வேறொன்றாகவும் இருக்கக் கூடாது. ஆனால் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எம்மை தண்டிக்க முனைவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. எனினும் நான் நீதிமன்றத்தை நம்புகின்றேன். நீதிமன்ற சுயாதீனத்தின் மூலமாக எனது மகனுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகின்றேன்.
அதேபோல் இப்போதும் நாம் இந்த நாட்டை நேசிக்கும் எனது மக்களை நேசிக்கும் ஒரு சாதாரண நபராகவே மக்கள் மத்தியில் செயற்படுகின்றேன். மக்களின் ஆதரவும் அன்பும் இப்போதும் எமக்கு உள்ளது. அதன் மூலமாக எமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். எந்த சந்தர்பத்திலும் மக்களின் முழுமையான ஆதரவு எமக்கு அவசியம். மக்களை நம்பியே இன்றும் நாம் செயற்பட்டு வருகின்றோம்.
இன்று எனது மகனை தண்டித்ததை போலவே நாளை எனது மனைவியையும் மற்றைய சகோதரர்களையும் கைது செய்வார்கள், என்னையும் கைது செய்வார்கள். எனினும் எனது குடும்பத்தை மட்டுமல்ல எனது பரம்பரையே தண்டித்தாலும் கூட எமது பயணத்தை தடுக்க முடியாது. எமது ஜனநாயகப் பயணம் எந்த வழியிலேனும் தொடர்ந்துகொண்டிருக்கும். இந்த அரசாங்கத்துக்கு எதிராக களமிறங்க நாம் தயாராகிவிட்டோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM