சி.எஸ்.என். தொலைக்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷ வெலிக்கடை சிறைவளாகத்தில் உள்ள கொழும்பு விளக்கமறியல் சிறையின் ஜே பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரை சி.எஸ்.என். நிதிமோசடி தொடர்பில் விளக்க மறியலில் வைக்குமாறு கடுவலை பிரதான நீதிவான் தம்மிக ஹேமபால உத்தரவிட்டதை தொடர்ந்தே, அவர்கள் குறித்த சிறையில் அடைக்கப்பட்டனர்.
நேற்று முன் தினம் மாலை நிதிக் குற் றப் புலனாய்வுப் பிரிவினர் கடுவலை நீதிவான் முன்னிலையில் சந்தேக நபர்களான யோஷித்த உள்ளிட்ட ஐவரையும் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் கடுவலை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து சிறைச் சாலையின் விஷேட பஸ் வண்டி ஊடாக அவர்கள் வெலிக்கடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன் போது விஷேடமாக பயிற்றப்பட்ட 6 சிறைச் சாலை உத்தியோகத்தர்கள் பஸ் வண்டியினுள் யோஷித்த உள்லிட்டவர்களுக்கு பாதுகபபு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கடமையில் ஈடுபடுத்தப்ப்ட்டிருந்தனர். அத்துடன் இரவு 8.00 மணியளவில் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட குறித்த ஐவர் தொடர்பிலுமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் பொறுப்பும் இந்த ஆறு விஷேட அதிகாரிகளுக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யோஷித்த உள்ளிட்டோரை சிறைக்கு அழைத்துச் செல்லும் போதும் மன்றில் ஆஜர்படுத்திய போதும் விஷேட அதிரடிப் படையினதும் பொலிஸாரினதும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் நேற்று முன் தினம் இரவு முதல் வெலிக்கடை சிறை வளாகத்தின் பாதுகாப்பும் மேலதிக பொலிஸாரின் உதவியுடனும் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடனும் பலப்படுத்தப்ப்ட்டது.
சிறை வளாகத்துக்குள் உள் நுழையும் வாகனங்கள் நபர்கள் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதுடன் யோஷித்த உள்ளிட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு விஷேடமாக பணிக்கமர்த்தப்பட்ட சிறை அதிகாரிகளைத் தவிர ஏனையோர் செல்வதும் தடுக்கப்பட்டுள்ளதாக சிறைச் சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன் தினம் இரவு 8.00 மணியளவில் கொழும்பு விளக்கமறியல் சிறையில் அடைக்கப்பட்ட லெப்டினன் யோஷித்த ராஜபக்ஷ இரவு வெகு நேரமாக நித்திரைகொள்ளவில்லை என சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவித்தன. இவ்வாறு தூங்காமல் இருந்த யோஷித்த ராஜபக்ஷ தனது சிறைப் பாதுகாப்புக்கு என இருந்த சிறப்பு அதிகாரிகளுடன் வெகு நேரமாக உரையாடிக் கொண்டிருந்ததாக சிறைச்சாலை உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
முன்னதாக நேற்று முன் தினம் காலை வேளையில் கோட்டையில் உள்ள நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து சென்ற விஷேட பொலிஸ் குழு, சி.எஸ்.என். தொலைக்காட்சி அலைவரிசை பிரதானியான முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்டவை அவரது வீட்டில் வைத்து கைது செய்தது. அதன் பின்னர் விசாரணைகளுக்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த சி.எஸ்.என். தொலைக்காட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஷாந்த ரணதுங்க மற்றும் பணிப்பாளர்களான கவிஷான் திஸாநாயக்க மற்றும் அஷான் பெர்ணான்டோ ஆகியோரையும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையின் பின்னர் கைது செய்தனர்.
இந் நிலையில் நேற்று முன் தினம் காலை 10.00 மணிக்கு கடற்படை தலைமையத்தில் ஆஜராகுமாறு மஹிந்த ராஜபக்ஷவின் மகனான கடற்படை வீரர் லெப்டினன் யோஷித்த ராஜபக்ஷவுக்கு கடற்படை தலைமையகம் அறிவித்தல் விடுத்திருந்தது. அதன்படி யோஷித்த ராஜபக்ஷவும் கடற்படை தலைமையகத்தில் ஆஜராகவே, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான விஷேட பொலிஸ் விசாரணைக் குழுவும் கடற்படை தலைமையகத்துக்கு சென்றது. இதனையடுத்து கடற்படை தலைமையக அதிகாரிகளின் முன்னிலையில் யோஷித்த ராஜபக்ஷவிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு சி.எஸ்.என்.விவகாரம் தொடர்பில் சுமார் 6 மணித்தியாளங்களும் 20 நிமிடங்களும் விசாரணை நடத்தி வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்தனர். இதனையடுத்து மாலை 4.20 மணிக்கு யோஷித்த ராஜபக்ஷவை கடற்படை தலைமையகத்தில் வைத்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
சி.எஸ்.என். தொலைக்காட்சியின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு அரசாங்க சொத்துக்களை பயன்படுத்தியமை மற்றும் காரணிகளை வெளிப்படுத்த முடியாத முதலீட்டு மூலங்களைக் கொண்டு சி.எஸ்.என்.தொலைக்காட்சியை ஆரம்பித்தமை ஆகிய குற்றச் சாட்டுக்களின் கீழ் கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் பிரகாரம் யோஷித்தவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். ஏனைய நால்வருக்கு எதிராகவும் கூட இதே குற்றச் சாட்டுக்களே சுமத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ஷ கடற்படை தலைமையகத்திலிருந்து கோட்டை நிதிக் குற்றப் புல்னாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து ஏனைய சந்தேக நபர்கள் நால்வருடனும் சேர்த்து விஷேட வேனில் கடுவலை நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன் போது கடுவலை நீதிவான் நீதிமன்றுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. யோஷித்த உள்ளிட்ட சந்தேக நபர்கள் கடுவலை நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்டும் போதும் அங்கு பெரும் தொகையான மக்கள் ஒன்று கூடியிருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவர் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ , முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, பாராலுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தின் பலர் நீதிமன்ற வளாகத்தில் ஒன்று கூடினர்.
இவர்களைவிட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ரோஹித்த அபேகுணவர்தன, டி.வி.சானக, லொஹான் ரத்வத்த உள்ளிட்டோருடன் மஹிந்த ஆதரவாளர்களும் நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்திருந்தனர்.
இதன் போது யோஷித்த உள்ளிட்டவர்கள் நீதிவான் தம்மிக ஹேமபால முன்னிலையில் ஆஜர்படுத்திய நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர், சந்தேக நபர்கள் கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகவும் அரச சொத்துக்களை தவறாக தமது தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். அத்துடன் குறித்த ஐவரும் விசாரணைகளுக்கு கூடுதலான ஒத்துழைப்பை வழங்கவில்லை எனவும் அதனால் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸார் நீதிவானைக் கோரினர். இந்த கோரிக்கையினை ஆராய்ந்த நீதிவான் தம்மிக ஹேமபால சந்தேக நபர்கள் ஐவரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்தே யோஷித்த உள்ளிட்ட ஐவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். ற்று முன் தினம் மாலை கடுவலை நீதிவான் நீதிமன்றுகு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்திருந்த நிலையில் விளக்கமறியல் உத்தரவின் பின்னர் அவரது கண்கள் கலங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
எவ்வாறாயினும் நீதிமன்ற வாயிலுக்கு வெளியே ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, எந்த ஒரு குற்றச் செயலும் செய்யாத சிலரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் இது தன்னை பழிவாங்குவதற்காக அவர்கள் செய்துள்ள நடவடிக்கை எனவும் தெரிவித்தார். அத்துடன் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்டோர் எதிர்வரும் 4ஆம் திகதிக்குள் ராஜபக்ஷ குடும்பத்தின் ஒருவரையோ இருவரையோ கைது செய்வதாக ஊடகங்களிடம் குறிப்பிட்டதாகவும் அதன் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ள நிலையில் இது அரசியல் பழிவாங்கல் என்பது உறுதியாவதாகவும் தெரிவித்தார். எனினும் நீதிமன்றில் தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, இந்த அரசாங்கம் ஹிட்லரை விட மோசமாக நடந்துகொள்வதாகவும் 25 வயதான ஒரு இளைஞரை அரசியல் பழி வாங்களுக்காக கைது செய்வதென்பது மிக ஆபத்தானது எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து நாமல் ராஜபக்ஷவும் கருத்து வெளியிடுகையில் . தனது குடும்பத்தில் அத்தனை பேரையும் கைது செய்தாலும் பொது மக்கள் தொடர்பில் குரல் கொடுப்பதை தாம் நிறுத்தப் போவதில்லை எனதெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM