பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, தொடர் வெற்றியையும் தாரை வார்த்தது. ஏழு விக்கட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இலங்கை அணி, தொடர்ச்சியாகப் பத்து போட்டிகளில் தோல்வியைப் பதிவுசெய்தது.
பாகிஸ்தான் அணிக்கெதிரான ஐந்து ஒரு நாள் போட்டிகள் அடங்கிய தொடரின் மூன்றாவது போட்டி, நேற்று (18) அபுதாபியின் ஷேக் ஸயீத் மைதானத்தில் நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பாடக் களமிறங்கியது இலங்கை அணி. ஆனால், பாகிஸ்தான் வீரர்களின் துல்லியமான பந்து வீச்சில் ஓட்டங்களைக் குவிக்கத் தடுமாறியதுடன், விக்கட்களையும் சீரான இடைவெளியில் இழக்க ஆரம்பித்தது இலங்கை அணி.
ஆரம்ப வீரர்களாகக் களமிறங்கிய உபுல் தரங்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் 65 பந்துகளில் 59 ஓட்டங்களைச் சேர்த்து சிறப்பான துவக்கத்தைப் பெற்றுத் தந்தனர்.
எனினும், பதினெட்டு ஓட்டங்களோடு ‘போல்ட்’ முறையில் திக்வெல்ல ஆட்டமிழந்தார். ஒருபுறம் தரங்க நிதானமாக ஆட்டத்தைத் தொடர, மறுபுறம் குறைவான ஓட்டங்களுக்கு விக்கட்கள் சரிய ஆரம்பித்தன. தினேஷ் சந்திமல், சாமர கபுகெதர ஆகியோர் முறையே 19, 18 ஓட்டங்களுக்கு ஓய்வறை திரும்பினர்.
தரங்க 61, திரிமான்னே 28, பெரேரா 38 ஆகியோரைத் தவிர ஏனையவர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு விக்கட்டைப் பறிகொடுக்க, 48.2 ஓவர்களில் அனைத்து விக்கட்களையும் இழந்து 208 மட்டுமே பெற்றது.
பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 10 ஓவர்கள் சிறப்பாகப் பந்து வீசி 34 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஐந்து விக்கட்களைப் பறித்தார்.
209 என்ற ஓட்ட இலக்கை அடையும் முனைப்பில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 42.3 ஓவர்களில் மூன்றே விக்கட்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அந்த அணி சார்பில் ஆரம்ப வீரராகக் களமிறங்கிய அறிமுக வீரர் இமாம்-உல்-ஹக், அதிரடி ஜாலம் நடத்தி நூறு ஓட்டங்களைப் பெற்றார். மேலும், கன்னிப் போட்டியில் சதம் பதித்த இளம் வீரர்கள் வரிசையில் மூன்றாவது வீரராகத் தன்னை இணைத்தும் கொண்டார்.
இவரது பெயரை முன்னெப்போதோ கேட்டதுபோல் இருக்கும். ஆம். இவர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்ஸமாம்-உல்-ஹக்கின் மருமகன்.
பத்தாவது ஓவரின்போது, இலங்கை அணியின் விக்கட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல வீசிய பந்து, தவறுதலாக சாமர கப்புகெதரவின் வலது பக்கத் தாடையில் பட்டதால் அவர் களத்தை விட்டு வெளியேற நேர்ந்தது.
இறுதியில், மூன்று விக்கட்களை மட்டுமே இழந்த பாகிஸ்தான் அணி 209 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
இலங்கை சார்பில் கமகே, வெண்டர்சே மற்றும் பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கட்டை வீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் ஒருநாள் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது. அதேவேளை, ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியான பத்தாவது தோல்வியை இலங்கை பதிவுசெய்தது.
நான்காவது போட்டி நாளை (20) நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM