அமெரிக்க நாடுகளில் இந்த வருடம் ஸிகா வைரஸால் 3 மில்லியனிலிருந்து 4 மில்லியன் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
நுளம்புகளால் பரப்பப்படும் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் பலருக்கு நோயறிகுறி எதுவும் தென்படாது என்ற போதும், இது குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறப்பதுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவானது இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அதேசமயம் பிரேசிலில் றியோ டி ஜெனிரோ நகரில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சபை கூறுகிறது.
மேற்படி வைரஸால் உலகில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலுக்கு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக வரும் விளையாட்டு வீரர்களும் பார்வையாளர்களும் எவ்வாறு தம்மை தற்காத்துக் கொள்வது என்பது தொடர்பில் ஆலோசனை வழங்கப்படவுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சபையின் தலைவரான தோமஸ் பச் தெரிவித்தார்.
ஸிகா வைரஸ் சிறிய அச்சுறுத்தல் நிலையிலிருந்து எச்சரிக்கைக் கட்டத்தை அடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மார்கரெட் சான் கூறுகிறார்.
அவர் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஸிகா வைரஸ் தொடர்பில் கலந்துரையாட உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசரக் கூட்டமொன்றைக் கூட்ட அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்படி கூட்டத்தில் ஸிகா வைரஸ் பரவலை உலகளாவிய ரீதியான அவசரகால நிலைமையாக பிரகடனப்படுத்துவதா என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இதற்கு முன் இத்தகைய உலகளாவிய அவசரகால நிலைமையானது மேற்கு ஆபிரிக்காவில் பரவிய எபோலா வைரஸ் தாக்கத்தின் போது பிரகடனப்படுத்தப்பட்டது.
மேற்படி வைரஸ் தாக்கத்தால் 11,000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.
1947 ஆம் ஆண்டு உகண்டாவில் குரங்கொன்றில் முதன் முதலாக ஸிகா வைரஸ் அடையாளம் காணப்பட்டது. தென் அமெரிக்காவில் பிரேசிலில் மேற்படி வைரஸ் தாக்கம் கடந்த ஆண்டு மே மாதம் முதன்முதலாக அடையாளம் காணப்பட்டது.
பல சந்தர்ப்பங்களில் எதுவித நோயறிகுறிகளையும் வெளிப்படுத்தாத இந்த வைரஸ் தொற்றை பரிசோதனை மேற்கொண்டு கண்டறிவதும் கடினமாகும்.
இந்நிலையில் பிரேசிலில் 500,000 க்கும் 1.5 மில்லியனுக்கும் இடைப்பட்ட தொகையானோர் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது அந்த வைரஸ் பிராந்தியத்தில் 20 க்கு மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
அமெரிக்காவில் இது வரை ஸிகா வைரஸ் தொற்றுக்குள்ளான 31 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களுக்கு பயணம் மேற்கொண்ட சமயம் இந்தத் தொற்றுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பான் அமெரிக்கன் சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்திய பணிப்பாளரான கலாநிதி கரிஸ்ஸா எதியன்னி விபரிக்கையில், குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதற்கும் ஸிகா வைரஸ் தாக்கத்துக்கும் தொடர்பிருப்பதாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார்.
ஆனாலும் இவ்வாறு குழந்தைகள் குறைபாட்டுடன் பிறப்பதை சகித்துக் கொண்டிருக்க முடியாது என அவர் மேலும் கூறினார்.
ஸிகா வைரஸ் தொற்றைத் தடுக்க இரு தடுப்பு மருந்துகளை உருவாக்கியுள்ளதாகவும் அவற்றில் ஒன்று இந்த ஆண்டு இறுதிக்குள் பரீட்சார்த்தமாக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அமெரிக்க தேசிய சுகாதார நிறுவகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கருக்கலைப்புக்கு அனுமதிக்க கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
இந்நிலையில் பிரேசிலைச் சேர்ந்த சட்டத்தரணிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவொன்று ஸிகா வைரஸ் தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் பிரேசிலியா பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் டெபோரா டினிஸ் விபரிக்கையில், இந்த வைரஸ் நோயால் வறிய மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் தருணத்தில் பெண்கள் பலரும் கர்ப்பமடைவது குறித்து அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
கனடாவிலும் ஸிகா வைரஸ்
கனடாவில் ஸிகா வைரஸால் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருவரும் அல்பேர்ட்டாவில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்ட வேளை தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சின் பேச்சாளர் கூறினார். அவர்களில் கர்ப்பிணிகள் எவரும் இல்லை எனவும் அவர்கள் தற்போது நோயிலிருந்து குணமடைந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM