வித்தியா கொலை வழக்கை கொலை அச்சுறுத்தலுக்கு மத்தி யிலும் யாழ்.மேல் நீதிமன்றில் விசாரணை செய்ய முடியும் என் றால், அரசியல் கைதிகளுடைய வழக்குகளை ஏன் வவுனியா நீதிமன்றில் விசாரணை செய்ய முடியாது? என கேள்வியெழுப்பியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுசெயலாளர் செல்வராஜா கஜேந்திரன், நாளை நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக அனைத்து தரப்பினரும் ஒன்று கூடவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளான ம.சுலக்சன், க.தர்சன் இ.திருவருள் ஆகியோரின் வழக்குகள் வவுனியா நீதிமன்றிலிருந்து அனுராதபுரம் நீதிமன்றுக்கு உரிய காரணங்களின்றி மாற்றப்பட்டுள்ளன. இதனால் அரசியல் கைதிகளும் அவர்களது குடும்பத்தினரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த வழக்கு விசாரணைகளை மறுபடியும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்ற கோரி கடந்த 16 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு உண்ணாவிரதம் இருப்பவர்களின் உடல் நிலை மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளன. கைதிகளின் உடல் நிலை ஆபத்தான நிலைக்கு சென்ற பின்னரும் கூட மனிதநேயமற்ற முறையில். சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றனர். தமிழர்கள் தானே உயிரழந்து போகட்டும் என்ற நிலையில் தான் அவர்கள் இருப்பதாக தோன்றுகின்றது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உண்ணாவிரதம் இருந்த போது அவரது கோரிக்கைகள் எதோ ஒரு வகையில் நிறைவேற்றப்பட்டு உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
ஆனால் குற்றங்கள் எதுவுமே செய்யாத அல்லது தமக்கு மக்களுக்காக சிலவற்றை செய்த இந்த அப்பாவிகளுடைய கோரிக்கைகளை இந்த அரசாங்கம் கண்டும் காணாதது போல் இருந்து வருகின்றது. உண்ணாவிரதம் இருக்கின்ற அரசியல் கைதிகளுடைய குடும்பங்களும் மிக மோசமான நிலையில் மனதளவில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களது பிள்ளைகள் சிறைகளில் உணவு உண்ணாமல் இருக்க அவர்களது தாய்மார்களும் உறவுகளும் உணவை தவிர்த்தே வருகின்றனர். இதனால் அவர்களுடைய குடும்பங்களும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றன.
சாட்சிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என கூறுகின்றார்கள். ஆனால் யுத்தம் முடிந்துவிட்டது பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என இதே அரசாங்கம் தான் பிரச்சாரம் செய்தும் வருகின்றது. ஏன் பாதுகாப்பு அச்சுறுத்தல். யாரால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பதனை சட்டமா அதிபர் திணைகள் வெளிப்படுத்த வேண்டும். வித்தியா கொலை வழக்கின் போது விசாரணையில் ஈடுபட்ட நீதிபதி இளஞ்செழியன் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் கொழும்புக்கு செல்லவில்லை. வழக்கும் வேறு இடங்களுக்கு மாற்றப்படவில்லை. அதே போல் இந்த கைதிகள் விடயத்தில் ஏன் செய்ய முடியாது. இலங்கையின் நீதிமன்றங்கள் மீது எமக்கு நம்பிக்கை இல்லை என்றாலும். அவர்களது வழக்கு விசாரணை மீளவும் வவுனியா நீதிமன்றில் நடைபெற வேண்டும்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு அச்சுறுத்தல் என கூறி அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பாதுகாப்பு வழங்க முடியும் என்றால் அரசியல் கைதிகளின் வழக்கின் சாட்சியாளர்களுக்கு ஏன் பாதுகாப்பு வழங்க முடியாது?
அரசியல் கைதிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற வெறியோடு தான் சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்டு வருகின்றது. இதற்காக தான் அவர்களது வழக்கு விசாரணைகளை அனுராதபுரம் நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் மாற்றியுள்ளது. இவர்களின் நியாயமான கோரிக்கை தொடர்பில் ஆக்கபூர்வமான முடிவெடுத்து அவர்களது வழக்குகளை உடனடியாக வவுனியா நீதிமன்றுக்கு மீண்டும் மாற்றுமாறும் அது தொடர்பான அறிவித்தலை அவ் அரசியல் கைதிகள் மூவருக்கும் உடனடியாக அறிவிக்குமாறும் வேண்டுகோள்விடுக்கின்றோம்.
மேலும் அனைத்து அரசியல் கைதிகள் தொடர்பாகவும் அரசு அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுக்கின்றோம். இம்மாதம் 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் அரசியல் கைதிகளது கோரிக்கைகள் தொடர்பில் நியாயமான தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டும். அவ்வாறு அரசியல் கைதிகளுடைய பிரச்சனைகளுக்கு தீர்வை காணாமல் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வர முடியாது. இம்மாதம் 13 ஆம் திகதி வடக்கு மாகாணம் தழுவிய ஹர்த்தால் நடைபெறவுள்ளது. அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும். அன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முற்றுகையிடப்படவுள்ளதால் அனைவரும் ஆளுநர் அலுவலகம் முன்பாக ஒன்று கூடுமாறு கேட்டு கொள்கின்றோம்.
ஆகவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தருவதற்கு முன்னர் அரசியல் கைதிகள் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை தர வேண்டும். அவ்வாறு தீர்வை முன்வைக்காமல் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தந்தால் அவருக்கு எதிராக போராடுவோம். அரசியல் கைதிகள் பிரச்சனை அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. தமிழ் மக்களுடைய விடிவுக்காக போராடியதாலேயே அவர்கள் சிறையில் உள்ளார்கள். எனவே இதனை உணர்ந்து ஒவ்வொரு தமிழ் மகனும் போராட முன்வர வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM