புதிய அரசியலமைப்பில் பெளத்த மதத்திற்கு ஆபத்து என்று தெற்கில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதைப் போலவே வடகிழக்கு இணைப்பு நடக்கப்போகின்றது என வடக்கு-கிழக்கிலும் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இது இனவாதத்திற்கு தீனி போடும் மிகவும் திட்டமிட்டு செய்யும் நகர்வாகும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளில் முஸ்லிம் தலைமைகள் ஒருபோதும் குறுக்கே நிற்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் திருத்தங்களும் இடைக்கால அறிக்கையும்என்ற தெளிவூட்டல் செயலமர்வு நேற்று கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
பாராளுமன்றத்தில் வழிநடத்தல் குழு , அரசியல் நிர்ணய சபை இவற்றின் முயற்சிகளின் பின்னர் கொண்டுவரப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பில் எங்களுக்குள் பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். விகிதாசார தேர்தல் முறைமை மாற்றப்பட்டு விட்டது என ஒருசிலர் எண்ணிக்கொண்டுள்ளனர். இது பிழையான விடயமாகும். உறுப்பினர் தெரிவு விகிதாசார முறையிலேயே இடம்பெறும். இதில் மாற்றம் இல்லை.
ஆனால் அதற்கு புறம்பாக தொகுதிவாரியில் வெற்றிபெற்றவர் முறைமையும் அறிவிக்கப்படும். விருப்பு வாக்கு முறைமையில் மட்டுமே மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பிலேயே நாம் கடந்த காலத்தில் இருந்து மிக நீண்டகால போராட்டம் ஒன்றை முன்னெடுத்து இன்று கணிசமான வெற்றியினை பெற்றுள்ளோம். 70ற்கு 30 என இருந்த தேர்தல் முறைமையில் 60ற்கு 40 என்ற ரீதியில் கொண்டுவர நீண்டதொரு போராட்டத்தை நாம் முன்னெடுத்துள்ளோம். மாகாணசபை முறைமையிலும் 50ற்கு 50 என கொண்டுவந்ததுடன் சிறுபான்மை மக்களுக்கு மிக சாதகமான முறைமை என்ற காரணத்தினால் இதிலும் ஒரு வெற்றி பெற்றுள்ளோம்.
எனினும் இரண்டு பிரதானமான கட்சிகளும் இதை கையாள்வது தனி ஆட்சி அமைப்பதற்காகவேயாகும். அதற்காகவே விகிதாசார முறைமையை அவர்களுக்கு ஏற்றால்போல் மாற்றி அமைத்துக்கொள்கின்றனர். இதற்காக கூப்பாடுபோடும் சிலரும் எம்மில் உள்ளனர். எல்லை நிர்ணயம் என்பதில் சிறுபான்மை சமூகங்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டது. அரசாங்கத்தில் சிலரும் வேண்டுமென தமக்கு சாதகமான முறையில் எல்லை நிர்ணய முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். எல்லை நிர்ணய குழுவில் கூட பக்கசார்பான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் நிராகரிக்கப்பட்டு சிங்களவர்களை கொண்டு எல்லை நிர்ணய குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாம் முரண்பட்டே மாற்றத்தினை கொண்டுவந்தோம்.
சட்டங்கள் தெரியாத நபர்கள் தான் இன்று அரசியல் கட்சியின் தலைவர்களாக உள்ளனர். அதேநேரம் வேண்டுமென்று திரித்துக்கூறும் நபர்களும் பொய்களை நம்பிக்கொண்டு பாமர மக்கள் மத்தியில் விபரீதத்தை உருவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். புதிய அரசியல் அமைப்பில் பெளத்த மதத்திற்கு ஆபத்து என்ற தெற்கின் அச்சக் கருத்தினை போலவே வடகிழக்கு இணைப்பு நடக்கப்போகின்றது என முஸ்லிம் பிரதிநிதிகள் சிலரும் இன்னுமொரு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இது இனவாதத்திற்கு தீனி போடும் ஒரு செயற்பாடாக மிகவும் திட்டமிட்டு செய்யும் நகர்வாகும்.
சிறுபான்மை மக்களின் அரசியல் தீர்வு வருமா வராதா என போராடிக்கொன்று செயற்படும் நிலையில் திட்டமிட்டு நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிகின்றனர். வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பழி கூறியே அரசியல் செய்ய வேண்டும் என்ற ஒரு நோக்கத்திலும் கிழக்கில் முஸ்லிம் காங்கிரசை பழி கூறியே அரசியல் செய்ய வேண்டும் என்ற நிலையிலும் வடகிழக்கு இணைப்புக்கு எதிராக நாடகம் அரங்கேற்றி வருகின்றனர்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளில் குறுக்கே ஒருபோதும் முஸ்லிம் தலைமைகள் நிற்காது. அவ்வாறு பார்க்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்ற மிகவும் காத்திரமான கொள்கையில் நாம் உள்ளோம். தமிழர்களின் அபிலாசைகளை அவர்கள் முன்வைப்பார்கள். வடக்கு கிழக்கு இணைப்பில் சர்வஜன வாக்கெடுப்பு நிராகரிக்கப்படவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருந்தோம்.
அதற்கான காரணம் தெரிவிக்க அவசியம் இல்லை. எனினும் அதன் விளைவுகளை நாம் ஆழமாக சிந்தித்தோம். வடக்கு கிழக்கு இணைந்தால் முஸ்லிம்களுக்கு எந்தவொரு அலகு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் கவனமாக இருந்தோம். இப்போதும் நாம் அநாவசியமான கருத்துக்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்த அவசியம் இல்லை. எமது அபிலாசைகள் இணைப்பை தடுப்பதிலும் பிரிப்பை கேட்பதிலும் மாத்திரம் என நம்பிக்கொண்டிருப்பது தவறாக கருத்தாகும். நாம் இணைந்தாலும் பிரிந்தாலும் எமக்கு அலகு வேண்டும். இந்த நாட்டில் நாம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. நாம் நடுநிலையான ஒரு சமூகம். எனவே யாரோ ஒருவருக்கு தீனி போட நாம் தயாராக இல்லை. நாம் மிக தெளிவாக இந்த விடயங்களை கலந்துரையாட வேண்டும். முஸ்லிம்களுக்கான கரையோர நிர்வாக மாவட்டம் வேண்டும் என்பதை தெளிவாக வழிநடத்தல் குழுவின் அறிக்கையில் தெரிவித்துள்ளோம். அது நிராகரிக்கப்பட்டபோதும் நாம் பாராளுமன்றத்தில் காத்திரமாக தெரிவித்தேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM