சாதாரண குடும்பமொன்றின் மாதாந்த செலவிற்கு 17 ஆயிரம் ரூபாய் போதுமானதாக அரசாங்கம் கூறுகின்றது. மாதம் 17 ஆயிரம் ரூபாவுடன் மக்கள் வாழ முடியுமா? இதனை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா என மக்கள் விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியதுடன் விலை குறைப்பை விரைவில் மேற்கொள்ளாவிட்டால் மக்கள் வீதியில் இறங்கி போராடுவதை தடுக்க முடியாது எனவும் எச்சரித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிலையில் சந்திப்பில் கலந்துகொண்ட ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் நாட்டின் பொருளாதார கொள்கையை சரியாக கையாலாகாத நிலையில் அதற்கான விளைவுகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர். இன்று டொலர் பெறுமதி வேகமாக உயர்வடைந்து வருகின்றது. ஆட்சியாளர்களின் தவறினால், ஆட்சியாளர்களுக்கு சரியான ஆட்சி முறைமை தெரியாத காரணத்தினால் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. இன்று விலை உயர்வு அதிகரித்துள்ளது.
அடிப்படை தேவைகள் அனைத்தினதும் விலை அதிகரித்துள்ளது. இதனால் அன்றாட வாழ்க்கையை சாதாரண பணத்தில் அனுபவிக்கும் அதிகமான மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். விலை உயர்வை குறைக்காது தேங்காய்களுக்கு நிறம் பூசும் வேலையினை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. கடந்த ஆண்டுடன் இந்த ஆண்டு பொருட்களின் விலைகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை 36 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வின் மூலமாக மக்களின் அன்றாட கஷ்டங்கள் ஆட்சியாளர்களுக்கு விளங்கவில்லை. கொழும்பு நுகர்வோர் அதிகார சபையின் கணக்கீட்டின் படி நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதமொன்றுக்கு 43 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகின்றதெனவும் கொழும்பில் நான்கு பேர் கொண்ட சாதாரண ஒரு குடும்பத்தின் மாதாந்த செலவாக 60 ஆயிரத்து 364 ரூபாய் செலவாகின்றதாகவும் நுகர்வோர் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் அமைச்சர் எஸ்.பி திசாநாயக அண்மையில் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் கூறுகையில் சாதாரணமாக நான்குபேர் கொண்ட ஒரு குடும்பத்தினருக்கு மாதாந்தம் 14 ஆயிரத்து 196 ரூபாய் செலவாவதாகவும்
கொழும்பில் நான்கு பேர் கொண்ட சாதாரண ஒரு குடும்பத்தின் செலவாக 17 ஆயிரத்து 308 ரூபாய் இருப்பதாகவும் கூறினார். இந்த கணக்கெடுப்பு முழுமையாக தவறான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகாரசபை தெளிவாக அவர்களின் மாதாந்த அறிக்கையில் தெரிவித்துள்ள நிலையில் அரசாங்கம் மக்களை முழுமையாக ஏமாற்றி வருகின்றது. அரசாங்கம் இந்த உண்மைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
அரசாங்கம் முன்வைத்துள்ள கணக்கின்படி ஒரு மனிதன் எந்தவித செலவுகளும் செய்யாது, மருத்துவத்தை பெறாது வாழும் வாழ்க்கைக்கு மாத்திரமே இந்த செலவு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மனிதன் அவ்வாறு வாழ முடியாது. இதுதான் மக்களுக்கு அரசாங்கம் கூறும் பதிலாக உள்ளது. மக்களை எந்த செயற்பாடுகளுக்கும் இடமளிக்காத அரசாங்கம் தத்தமது செலவுகளுக்காக கோடிக் கணக்கிலான பணத்தினை செலவழித்து வருகின்றது. நாட்டில் 41 வீதமான மக்கள் ஒரு நாளைக்கு 2 டொலர் வருமானம் பெறாது உள்ளனர் என பிரதமர் கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால் இன்று இந்த அரசாங்கமும் முன்னைய ஆட்சியினை போலவே செயற்பட்டு வருகின்றது. இந்த அரசாங்கம் தூரநோக்குடன் செயற்பட வேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் தமது ஆட்சியில் தமக்கு சாதகமாக எதனையும் செய்துகொள்ள முடியுமா என்பதையே பார்க்கின்றனர். வளங்களை விற்பதன் மூலமும், விலை அதிகரிப்பின் மூலமும் அரசாங்கத்தை பலப்படுத்தி கொள்ளவும் வரிகளின் மூலமாக மக்களின் பணத்தை சுரண்டவுமே கவனம் செலுத்தி வருகின்றது.
இன்று நாட்டில் மூன்று வேளை உணவு உண்ணும் குடும்பங்கள் குறைவடைந்து வருகின்றன. இரண்டு வேளை உணவைப் பெறவே மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆனால் இவற்றை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை.
மக்களிடமும் இதே கேள்வியை நாம் கேட்கின்றோம், உங்களால் 17 ஆயிரம் ரூபாவு டன் வாழ முடியுமா? இதனை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா என்பதை கூறுங்கள், அடுத்த மாதம் வரவு செலவு திட்டம் முன்வைக்கப்படவுள்ள நிலையில் இப்போது அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள், தனிப்பட்ட செலவுகள், வெளிநாட்டு விஜயம் என்பவற்றை முன்னெடுக்கும்போதும் அரசாங்கத்திற்கு நிதி உள்ளது, ஆனால் மக்களுக்கான ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அவர்களின் திறைசேரியில் பணம் இல்லாது போகின்றது.
விலை குறைப்புகளை மேற்கொண்டு மக்களுக்கு சலுகைகளை வழங்க முடியாது. புதிதாக நான்கு விமானங்களை வாங்கவும், புதிய ஹோட்டல் அமைக்கவும் அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துவம் மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் செயற்பாட்டில் முன்னெடுக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஸ்ரீலங்கா விமானசேவையினை நடத்த மத்திய வங்கியின் மூலமாக திறைசேரியில் இருந்து நிதி பெறப்பட்டுள்ளது.
இதனை சாதாரண வியாபாரிகளுக்கு வழங்கியிருந்தால் விவசாயத்தில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் அமைச்சர்களின் தனிப்பட்ட செலவுகளுக்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் தாராளமாக நிதி ஒதுக்க முடிகின்றது.
எதிர்வரும் சில ஆண்டுகளில் இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்கொள்ள நேரிடும். அதற்கு இப்போது ஏற்பட்டுள்ள விமான சேவைகளின் வீழ்ச்சி, பாரிய பொருளாதார முதலீடுகளின் வீழ்ச்சியே காரணமாகும்.
அநாவசியமாக செய்துள்ள முதலீடுகள் மற்றும் தெளிவில்லாத பொருளாதார வேலைத்திட்டங்களே இதற்கு காரணமாகும்.
சாதாரண மக்களின் மூலமாக இந்த நிலைமை உருவாகவில்லை, வெள்ளை உடைகளை அணிந்துகொண்டு மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் உள்ளவர்களே இதற்கு காரணமாகும். அவர்களே இந்த நாட்டினை நாசமாக்கியுள்ளனர். இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேலை வாய்ப்பில்லாது போகும் நிலைமை இப்போது ஏற்பட்டு வருகின்றது. விரைவில் இந்த நிலைமைக்கு எமது மக்கள் முகங்கொடுக்க வேண்டிவரும்.
எனவே இப்போது அரசாங்கம் தெளிவான பொருளாதார கொள்கையினை கூறவேண்டும், தீர்வை அரசாங்கமே கூறவேண்டும், விலை குறைப்புக்களை செய்ய வேண்டும், தேசிய உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும், உள்நாட்டு முதலீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லையேல் நாட்டில் மக்கள் புரட்சி வெடிப்பதை தடுக்க முடியாது. மக்களுடன் இணைந்து நாமும் வீதியில் இறங்கி போராடவேண்டிய நிலை உருவாகும். எமக்கும் மாற்று வழிமுறை இல்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM