வித்தியாவை நாம் கொலை செய்யவில்லை. உண்மையான குற்றவாளிகள் வெளியே உள்ளனர். எம்மீது குற்றப் புலனாய்வு பிரிவினர் பொய்யான குற்றச்சாட்டுக்களையும் பொய்யான சாட்சியங்களையும் தயார்செய்து எங்களுக்கும் வித்தியாவுக்கும் நீதி கிடைக்காது செய்து விட்டனர் என்று வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட ஏழு குற்றவாளிகளும் ரயல்ட் அட்பார் மன்றில் தெரிவித்தனர்.
வித்தியாமீதான கூட்டு பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கானது யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள ரயலட் அட்பார் நீதிமன்றில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரை உள்ளடக்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலமையில் இடம்பெற்றுவந்தது.
இவ் வழக்கு விசாரணையில் அனைத்து வழக்கு நடவடிகைகளும் பூர்த்தியாக்கப்பட்டு நேற்று புதன்கிழமை காலை 10.02 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஏழு பேருக்கும் எதிரான தண்டனை தீர்ப்பானது வாசிக்கப்படுவதற்கு முன்பு மன்றானது ஏன் உங்களுக்கு இத் தண்டனை வழங்கப்படக்கூடாது என அவர்களிடம் வினவியது.
இதற்கு ஒவ்வொரு குற்றவாளிகளும் தனித்தனியாக பதிலளித்தனர். இதன்படி இவ் வழக்கின் இரண்டாவது எதிரியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் கூறும்போது, நான் ஒன்றும் செய்யவில்லை, சந்தேகத்தில் தான் என்னை பிடித்தார்கள், நான் எதுவும் செய்யவில்லை, எனக்கு பிள்ளை குட்டிகள் என கூறி அழுதார். இவரை தொடர்ந்து மூன்றாவது எதிரியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த பூபாலசிங்கம் தவக்குமார் கூறும்போது, எனக்கும் இந்த குற்றச்சாட்டுக்கும் சம்பந்தமில்லை, நான் ஏன் இந்த கொலையை செய்ய வேண்டும், சி.ஜ.டியினர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர் என தெரிவித்தார். இவரை தொடர்ந்து நான்காவது எதிரியாக அடையாளப்படுத்தியிருந்த மகாலிங்கம் சசிதரன் கூறும்போது, எனக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை, நான் 12ஆம் திகதி கொழும்பில் தான் இருந்தேன். ஸ்ரேசன் றோட் ஏஞ்சல் லொட்ஜில் தான் இருந்தேன், ஸ்ரேசன் றோட்டில் எல்லா இடத்திலயும் சீ சீ.ரி.வி கமரா இருக்கிறது. அதில் பார்த்தாலே தெரியும், அதனை செய்யுங்கள், 13 திகதி வீடியோவ நாங்கள் சமர்ப்பிக்கவில்லை. சி.ஜ.டியினர் தான் சமர்ப்பித்தார்கள். எனக்கு துணையாக இருந்த அம்மாவும் சிறையில அடைத்து அவாவும் செத்து போய்விட்டா, அம்மாவிட்டா மற்றது மனைவி பிள்ளைகள் தான், அவையளுக்கு ஒன்னும் தெரியாது. அப்படி இருந்தும் மனைவிய வீடியோ
எடுத்துவர அனுப்பினான், யாழ்.ஹோட்டல் வாறன் என்டு சொல்லி போட்டு அதுக்கு பிறகு போன்ஆன்சர் பண்ணவில்லை. எல்லாம் கடவுளுக்கும் தெரியும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து 5ஆவது எதிரியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த தில்லைநாதன் சந்திரகாசன் கூறும்போது, எனக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை, நான் ஐந்து பொம்பிள பிள்ளைகளோட தான் பிறந்தேன். சி.ஐ.டியினர் பொய்யான சாட்சியத்தை உருவாக்கி எங்கள குற்றவாளிகளாக காட்டிவிட்டார்கள். இதில் எங்களுக்கும் நீதி கிடைக்கவில்லை, வித்தியாவுக்கும் நீதி கிடைக்கவில்லை. இது கண்கட்டி வித்த போன்று உள்ளது. வீடியோ எடுத்தம் எடுத்தம் என்று சொல்கிறார்கள். அந்த வீடியோவ சி.ஐ.டி யினர் எடிட் பண்ண கொடுத்திருக்கிறார்கள் போல, அந்த வீடியோவை எடுத்து நீதிபதிகள் ஐயாட கையில கொடுக்க வேணும். அத வைச்சு உண்மையான குற்றவாளிகள கண்டுபிடிக்க வேண்டும். ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில மயூரன் பெட்டயல வைத்து ஐந்து பேறுடைய டி.என். என்று கொடுத்தவர். அந்த விந்தனுக்கள் அழிக்கப்பட்டதா தெரியவில்லை. இது தமிழனுக்கு ஏற்பட்ட அவமானம், இப்படியான சம்பவங்கள் எங்கள் ஊர்ல முதலே நடந்திருக்கு. அத அப்பவே கவனித்திருந்தா இப்போது இப்படியான சம்பவம் நடந்திருக்காது.
எங்களுக்கு முதலில் யாரும் சட்டத்தரணிகள் ஆஜராகவில்லை. இப்போது தான் ரகுபதி ஐயா ஆஜாரானர், எங்களுக்கு முதல்லயே சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தால் நாங்கள் இன்று குற்றவாளிக்கப்பட்டிருக்க மாட்டோம். சட்டத்தில கூறுகின்றார்கள் 1000 குற்றவாளி தப்பித்தாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது என்று. உண்மையான குற்றவாளிகள் வெளியில இருக்கின்றார்கள். எல்லோரும் அவர்களிடம் கவனமாக இருங்கள் என தெரிவித்தார்.
இதன்பின்னர் 6ஆவது எதிரியாக அடையாளப்படுத்தப்பட்ட சிவதேவன் துஷாந்தன் கூறும் போது,
நானும் ஐந்து பெண் பிள்ளைகளோட பிறந்தவன், நான் வித்தியாவை காதலித்ததாக கூறுகின்றார்கள். நான் வித்தியாவை காதலிக்கவில்லை, சுரேஸ்கரன் என்பவரை முதலில் கிளிநொச்சில வைத்து பிடித்த சி.ஐ.டியினர் பின்னர் அவரை விட்டுவிட்டார்கள். அப்படி விடும் போது 800 ரூபா காசு கொடுத்தே இரயலில் ஏற்றி அனுப்பினார்கள். பின்னர் ஒருவருடம் கழித்து பிடித்தார்கள். என்னையும் அரச சாட்சியாக மாறுமாறு நான்காம் மாடியில வைத்து கேட்டார்கள். எங்களுக்கு நடந்த மாதிரி வேறு யாருக்கும் நடக்கவே கூடாது. உண்மையான குற்றவாளிகள் வெளியில் இருக்கின்றார்கள். அவர்களை தப்ப விட்டது சி.ஐ.டியினர்தான். நான் என்மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றேன். கடவுள் ஒருவர் இருக்கின்றார். அவர் எல்லோரையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றார் என தெரிவித்தார். இவரை தொடர்ந்து 8ஆவது எதிரியாக அடையாளப்படுத்தப்பட்ட ஜெயதரன் கோகிலன் கூறும்போது,
நான் உதவி செய்யவும் போகவில்லை, ஒத்தாசை செய்யவும் போகவில்லை. நான் எந்தவொரு தப்பும் செய்வில்லை. எனக்கு நீதி கிடைக்கும் என்று தான் நான் இவ்வளவு நாள் பொறுத்திருக்கிறேன் என தெரிவித்தார். இறுதியாக 9ஆவது எதிரியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த மகாலிங்கம் சசிக்குமார் (சுவிஸ்குமார்) கூறும்போது, எனக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஏனைய அத்தனை பேரும் சொன்
னதும் உண்மை, இது சி.ஐ.டியினரால் உருவாக்கப்பட்ட பொய் கேஸ், இதுல பெரிசா நான் ஒன்றும் சொல்லுவதற்கில்லை, உங்களால முடிஞ்சா சட்லைட் மூலமாக யார் இத செய்தது என்று கண்டுபிடியுங்கள், சி.ஐ.டியினர நம்பி பிரியோசனம் இல்லை.
நீதிபதி ஐயாக்கள் சட்டலைட் மூலமா தேடிப் பாருங்கள் உண்மையான குற்றவாளிகள் வெளியே தான் இருக்கிறார்கள். பொய்யான குற்றச்சாட்டை சி.ஐ.டி யினர் போட்டார்கள். இந்த நிலமை இனி இங்க யாருக்கும் ஏற்பட கூடாது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து இவர்களுக்கான தீர்பானது மன்றினால் வாசிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM