இந்திய வம்சாவளி மக்கள் இந்நாட்டில் தனித்துவம் மிக்க ஒரு சமூகமாக விளங்குகின்றனர். இம்மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் சிறப்பானதாகவும், முக்கியத்துவம் மிக்கனவாகவும் காணப்படுகின்றன. இது தொடர்பில் வெளிநாட்டவர்களே பல சமயங்களில் வியந்து பாராட்டி இருக்கின்றனர். நிலைமை இவ்வாறிருக்க இந்திய வம்சாவளி மக்களில் சிலர் தமது தனித்துவத்தையும், சிறப்புக்களையும் உணராது மெதுமெதுவாக பௌத்த கலாசாரத்தை பின்பற்றி சிங்கள மயமாகும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக புத்திஜீவிகள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் பல்வேறு பாதகமான விளைவுகள் ஏற்படும் என்றும் இவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் பூரண அடிமைகளாகவும் அரை அடிமைகளாகவும் கூலிகளாகவும் தமிழ்த் தொழிலாளர்கள் தமிழகத்தில் இருந்து பண்டங்களைப் போன்றோ மந்தைகளைப் போன்றோ கப்பல்களில் ஏற்றப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். அக்காலப்பகுதியில் உலக அரங்கில் ஆதிக்கப் போட்டியிலே தீவிரமாக ஈடுபட்ட பிரித்தானியினரதும், பிரான்சியரதும் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளிலும், தீவுகளிலுமே தமிழ்த் தொழிலாளர்கள் அதிகமான அளவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு குடியமர்த்தப்பட்ட நாடுகளும், தீவுகளும் நாற்பதுக்கும் மேற்பட்டவை. எனினும், இதுவரை யாரும் சரியான முறையில் கணக்கிட்டுள்ளதாக தெரியவில்லை என்று கலாநிதி க.அருணாசலம் தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றார். இதனடிப்படையில் நேவீஸ், அன்ரீல்ஸ், நியூகலிடோனியா, பிஜி, டேமாரா, மொரீசியஸ், றியூனியன், தென் ஆபிரிக்கா, வியட்நாம், அந்தமான், சுமாத்திரா, சிசெல்ஸ், சென்ற்லூசியா, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட பல நாடுகளிலும், தீவுகளிலும் தமிழ் மக்கள் தமிழகத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு குடியமர்த்தப்பட்டதாக தெரியவருகின்றது.
இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மக்கள் அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டு பிரித்தானிய, பிரான்சிய ஆட்சியாளர்களினாலும், அந்தந்த நாடுகளையும், தீவுகளையும் சேர்ந்த சுதேச இனத்தவர்களாலும் பல்வேறு சுரண்டல்களுக்கும் உள்ளாகி இருக்கின்றனர். இந்த சுரண்டல்களும் அடக்கு முறைகளும் இன்னும் கூட ஓய்ந்தபாடில்லை. தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த வகையில் 19ஆம் நூற்றாண்டில் இடம்பெயர்ந்த ஒரு தொகையினர் தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு இலங்கையின் மலையகப் பகுதிகளிலும் குடியமர்த்தப்பட்டனர்.
இவ்வாறு குடியமர்த்தப்பட்டவர்கள் நீண்டகாலமாக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாகவே வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். எனினும், இந்நிலையில் இப்போது சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளதனையும் கூறியாதல் வேண்டும். தமிழ் மக்கள் குடியமர்த்தப்பட்ட நாடுகள் மற்றும் தீவுகள் பலவற்றில் தமிழ் தொழிலாளர்கள் பலர் இன்று தமிழ் பேசவோ, எழுதவோ அன்றேல் வாசிக்கவோ முடியாத நிலையில் இருந்து வருவதாகவும் புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கின்றனர்.
மேலும் தமிழ் தொழிலாளர்கள் அதிகளவில் சுதேச இனத்தவர்களுடன் கலப்புற்று விட்டதாகவும் அவ்வாறு கலப்புற்ற நிலையில் அவர்கள் பெருமளவு உரிமைகளுடனும் சலுகைகளுடனும் ஓரளவு வளத்துடனும் வாழ்ந்து வருவதாகவும் புத்திஜீவிகள் மேலும் வலியுறுத்தியுள்ளமையும் இங்கு நோக்கத்தக்க விடயமாகவுள்ளது.
தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட தமிழ் மக்களின் சந்ததிகளாக இந்திய வம்சாவளி மக்கள் இப்போது இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். மலையக பகுதிகளில் இந்திய வம்சாவளியினர் பெருமளவில் வாழ்வதும் தெரிந்த விடயமாகும். இந்திய வம்சாவளி சமூகத்தினர் இந்த நாட்டில் தனித்துவம் மிக்கவர்களாக உள்ளனர். இவர்களின் முக்கியத்துவம் கருதி தனித்தேசிய இனமாக இம்மக்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிற கோஷங்களும் கோரிக்கைகளும் இப்போது நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன. இந்திய வம்சாவளி மக்கள் இந்த நாட்டில் பல்வேறு சவால்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டார்கள். எனினும், அம்மக்களின் கலை, கலாசார நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. அதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து அம்மக்கள் செயற்பட்டார்கள் என்பதனை இதிலிருந்து புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.
எனினும், அண்மைக்காலமாக இந்நிலைமைகளில் சில தொய்வுகள் ஏற்பட்டு வருவதாக புத்திஜீவிகள் விசனப்பட்டுக் கொள்கின்றனர். இந்திய வம்சாவளியினர் சிலர் வலிந்து சிங்கள மொழியினை பேச முனைவதையும், பௌத்த கலாசாரத்தின்படி நடந்துகொள்ள முனைவதையும் சிங்களவர் பாணியை பின்பற்றி ஏனைய பல நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தமிழர்கள் சிங்களம் பேசுவதால் சிங்களவர் ஆகிவிட முடியாது. சிங்களம் பேசும் தமிழர்கள் என்றே சிலர் அழைக்கப்படுவர் என்றும் கருத்துக்கள் இது தொடர்பில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்திய வம்சாவளியினர் சிலரின் சிங்கள மயமாகும் முயற்சியானது பல்வேறு பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்துவதாக அமையும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இன அடையாளம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஒவ்வொரு சமூகத்தினரும் தத்தமது இன அடையாளத்தைப் பேணி பின்வரும் சந்ததிகளும் இதனை கைக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் இதில் முக்கிய இடம் பெறுகின்றன. இதனை விடுத்து நாம் கலாசார மீறல்களில் ஈடுபடுவோமாக இருந்தால் அதன் விளைவுகளையும் நாமே அனுபவிக்க வேண்டி நேரிடும் என்பதையும் மறந்து விடுதல் ஆகாது. இந்திய வம்சாவளியினர் சிங்கள மயமாக்க முயலும் நடவடிக்கையை கண்டித்து புத்திஜீவிகள் பலர் தமது நிலைப்பாடுகளையும் தெளிவுபடுத்தினர். இவர்களின் கருத்துகளை எமது கேசரியின் வாசகர்களுக்காக இதன்கீழ் தொகுத்து தருகின்றேன்.
பேராசிரியர் சோ.சந்திரசேகரன்
சிறுபான்மை மக்களை ஒன்று கலக்கின்ற கொள்கை என்பது பல நாடுகளிலும் இருந்து வந்துள்ளது. 1950 மற்றும் 1960 களில் இந்த சிந்தனை வலுவடைந்து காணப்பட்டது. அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இது தீவிரமடைந்து காணப்பட்டது. ஆனால், இந்த நிலைமை இன்று மாறிப்போய் இருக்கின்றது. இந்த வகையில் இலங்கையை பொறுத்தவரையில் தமிழர்கள் எல்லோரும் சிங்களவர்களாக மாற வேண்டும் என்று அரசாங்க கொள்கை எதுவும் கிடையாது. மேலை நாடுகளில் அப்படி ஒரு கொள்கை காணப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். மேலை நாடுகளில் பன்மை கலாசாரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு இனத்தவரும் தத்தமது கலாசாரத்தை பேணும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வாய்ப்புகள் பலவும் வழங்கப்பட்டன. இதனை பன்மை கலாசாரம் என்று நாங்கள் குறிப்பிடுகின்றோம். ஆனால், இலங்கையை பொறுத்த வரையில் எமது இந்திய வம்சாவளி மக்கள் வலிந்து சிங்கள பாணியில் செல்லத் தொடங்குகின்றனர். இதற்கான காரணம் என்னவென்று எனக்கு சரியாக தெரியவில்லை. சிந்திக்க வேண்டி இருக்கின்றது. இதன் பாதக விளைவுகள் எங்கே போய் முடியும்? எப்படி முடியும்? என்று தெரியாது. எம்மவர்கள் வலிந்து சிங்கள கலாசாரத்தையும், பாணியையும் பின்பற்றும் நிலையை சிலர் மறுத்து கருத்துகளை தெரிவிக்கக்கூடும். ஆனால், உண்மை அதுவல்ல.
இந்திய வம்சாவளியினர் மிகச் சிறந்த பண்பாட்டு, கலாசார விழுமியங்களை கொண்டுள்ளனர். தமிழக மக்களின் தொடர் நிலையாக இது இருக்கின்றது. எனினும் நாம் இப்போது இந்திய தமிழர்கள் என நினைத்துக் கொண்டு தமிழகம் செல்கின்றபோது அவர்கள் எம்மை மாற்றுக் கண் கொண்டு நோக்குவதையும் கூறியாக வேண்டும். இதற்கு காரணம் இலங்கை நாட்டு பெரும்பான்மை கலாசாரம் எமக்கு மறைமுகமாக இருக்கின்றது என்பதே பொருளாகும். பேச்சு வார்த்தைகள், நடைமுறைகள், வாழ்க்கை முறை இவைகளை நோக்கும்போது ஏதோ ஒரு வித்தியாசம் தென்படுகின்றது. பெரும்பான்மை கலாசாரத்தின் பாதிப்பு இதில் உள்ளதாக கொள்ள முடியும். பெரும்பான்மை கலாசாரத்தை நாங்களாக வலிய சென்று ஏற்றுக்கொண்ட ஒரு நிலையாகவும் இது இருக்கக்கூடும். பெரும்பான்மை கலாசாரத் தழுவல் காரணமாக நாம் எமது மொழியை மறக்கின்றோம்; கலாசாரத்தை மறக்கின்றோம். பண்பாட்டு, சடங்குகள் இவை எல்லாவற்றையும் மறக்கின்றோம். எமது பாணி ஒரு வித்தியாசமான மாறுபட்ட பாணியாக அமைகின்றது. இப்படி செல்வதன் காரணமாக எவ்வித பிரயோசனமும் கிடையாது. இந்திய வம்சாவளியினர் சிங்களவர்களின் பாணியை பின்பற்றுவதால் சிங்களவராக ஆகிவிட முடியாது. நாம் என்னதான் பேசி நடித்தாலும் எமது பரம்பரையினர் தமிழர்கள் என்பது அவர்களுக்கு தெரியும். தமிழர்கள் சிங்கள பாணியில் மாறினாலும் அவர்களை வேறு ஒரு ஜாதியினராக வைத்திருப்பது இலங்கையரின் வழக்கமாக உள்ளது. இலங்கையின் மேற்கு புறத்தில் உள்ளவர்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்களில் சிலராகவும் உள்ளனர். இவர்கள் வெவ்வேறு சாதிப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டு வருகின்றனர். சாதியை சொன்னவுடன் இவர்கள் தமிழ் பரம்பரை என்பதனை ஏனையோர் விளங்கிக்கொள்வர்.
மலையக தலைவர்கள், புத்திஜீவிகள் எல்லோரும் ஒன்றிணைந்து எமது கலாசாரத்தை பேணுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மற்றைய கலாசாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். மலையகத்தில் உள்ள சில சமூகத்தினர் இந்திய பழக்கவழக்கங்களை திட்டவட்டமாக கையாளுகின்றனர். இந்திய வம்சாவளியினரின் சடங்குகள், கிரியைகள் என்பவற்றை நன்றாக தெரிந்தவர்கள் பலர் ஏற்கனவே இந்தியா சென்றுவிட்டதாக சமூக ஆய்வாளர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். இந்நிலைமை பிழையான வழிநடத்தல்களுக்கு உந்து சக்தியாகி உள்ளது. மட்டக்களப்பில் விபுலானந்தர் கல்லூரியைப் போல மலையகத்தில் ஒரு கல்லூரி இல்லை. எனவே எமது கலாசாரம் சம்பந்தமான கல்லூரிகள் நிறுவனங்கள் என்பன மிகவும் தேவையாக உள்ளன.
இவற்றையெல்லாம் மேற்கொள்ள எம்மிடம் ஒரு தனியான பல்கலைக்கழகமும் கிடையாது. இத்தகைய விடயங்களை கருத்தில் கொண்டே நான் தனியான பல்கலைக்கழகம் தொடர்பில் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றேன். உரியவர்கள் இதனை இனியாவது விளங்கிக்கொண்டு ஆவன செய்தால் மகிழ்ச்சியடைவேன். மலையகத்தில் ஒரு இசைக்கல்லூரியை உருவாக்க வேண்டும் என்ற முயற்சிகள் இடம்பெறுவதாக தெரியவருகின்றது. இது மகிழ்ச்சிக்குரியதே.
மலையக இளைஞர்கள் மத்தியில் ஒன்று கலக்கும் தன்மை அதிகமாகவே உள்ளது. நமது கலாசாரம் குறித்த விழிப்புணர்வு இல்லாமையே இதன் பிரதான காரணமாகும் என்று கருதுகின்றேன். ஏனைய கலாசாரங்களை பின்பற்றுவதால் ஒரு நன்மையும் ஏற்படாது என்பதனை இவர்கள் விளங்கிக் கொள்ளுல் வேண்டும். நான் எவ்வளவுதான் ஆங்கிலம் பேசினாலும் நான் ஆங்கிலேயனாகவோ வெள்ளைக்காரனாகவோ மாற முடியாது. எனது பெயரும் என்னை காட்டிக் கொடுத்து விடும். ஏனைய மொழிகளை படிப்பதும் ஏனைய கலாசாரங்களை தெரிந்து வைத்திருப்பதும் சிறப்பான விடயமேயாகும். அதற்காக ஒன்று கலப்பது என்பது எவ்விதத்திலும் நியாயமாகி விட மாட்டாது. எமது மக்களுக்கு மிக நீண்ட வரலாறு இருக்கின்றது. இது பல்துறை சார்ந்த ஒரு வரலாறு ஆகும். இதை மறந்து இன்னொரு கலாசாரத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. மலையக தலைவர்கள் தாய் மொழிக்கு முக்கியமான இடத்தினை வழங்கி செயற்பட வேண்டும். தமிழ் மொழி தேவையில்லை என்கிற உணர்வு தமிழர்களுக்கே இருப்பது மிகவும் வருந்தத்தக்க ஒரு விடயமாகும். தமிழ் அரசகரும மொழி என்று அரசியலமைப்பு கூறுகின்றது.
நிலைமை இவ்வாறு இருக்கையில் நாம் தமிழை பின்பற்றாது வேறு யார் தமிழை பின்பற்றப்போகின்றார்கள் என்று ஒரு கேள்வி எழுகின்றது. நாமே எமது மொழியை கைவிடக்கூடாது. கலாசாரத்தை கைவிடக்கூடாது. முஸ்லிம் சகோதரர்கள் சிலர் தமிழையும் இன்னும் சிலர் சிங்களத்தையும் பேசுகின்றனர். இந்நிலையில் தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள் சிங்களம் பேசும் முஸ்லிம்கள் என்று பிரிவுகள் இரண்டு உருவாகலாம் என்று புத்திஜீவிகள் வலியுறுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். நாம் அவ்வளவு தூரத்துக்கு இல்லாவிட்டாலும் அதனை நோக்கி செல்கின்றோமோ என்ற சந்தேகம் மேலெழும்புகின்றது. சிங்களம் பேசும் தமிழராக நாம் மாற முற்படக்கூடாது. அமெரிக்காவில் மொழிப்பிரச்சினை இல்லை. கறுப்பினம், வெள்ளையினம் என்ற இனப்பிரச்சினையே உள்ளது. இருவரும் ஒரே மொழியையே பேசுகின்றனர். மொழியை மாற்றினாலும் இனத்தை மாற்றிக்கொள்ள முடியாது.
கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்
ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை பின்பற்றி அந்த சமூகமாக மாறும் நிலைமை உலகில் நிகழ்ந்துள்ளது. பல சமூகங்களுக்கு இடையில் இது நிகழ்ந்துள்ளது. பெரும்பான்மை இனத்துக்கு மத்தியில் ஒரு சிறுபான்மை இனம் இருக்கும்போது சிறுபான்மை இனமானது பெரும்பான்மை இனத்தை போன்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு காரியமாற்றும் நிலைமை இலங்கையிலும் நிகழ்ந்துள்ளது.
தென்பகுதியில் உள்ள சலாகம போன்ற இடங்களில் உள்ளவர்கள் 13 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த தென்னிந்தியர்களாவர். இவர்கள் பிற்காலத்தில் செல்வம் மிக்க சமூகமாக எழுச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் இன்று மலையக பகுதியில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் சிங்கள பாணியை பின்பற்றி அவர்களது வாழ்க்கை முறைகளை பின்பற்றி சிங்களவராகும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்களது வீடுகளில் உள்ள உறுப்பினர்களிடையே சிங்களத்தில் பேசிக்கொள்கின்றனர். மகன், மகள் போன்றோரை புத்தா, துவ என்கின்றனர். அப்பா, அம்மாவை பார்க்க ஊருக்கு போகின்றோம் என்பதற்கு பதிலாக ‘மகாகெதர’ இற்கு போகின்றோம் என்று கூறுகின்றனர்.
கொழும்பில் சில இடங்களில் வருடாந்தம் இறந்தவர்களுக்கு செய்யும் திவசம் போன்ற நடவடிக்கைகளை தானகெதர என்ற பெயரில் மேற்கொள்கின்றனர். இரத்தினபுரி, காலி, மாத்தறை போன்ற பகுதிகளில் உள்ள தமிழ் பெண்களில் பெரும்பாலானோர் சிங்கள பெண்கள் அணியும் உடையினை அணிந்து கொண்டுள்ளனர். இளைஞர்கள் தங்களது பெயரை சிங்கள பெயர்போன்று கூறும் பாங்கும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். உதாரணமாக ராஜன் மதுஷன் மதுரங்க போன்ற பெயர்களை குறிப்பிடலாம்.
சிங்கள இனமாக காட்டிக் கொள்ளும் பொருட்டு இந்நடவடிக்கை இடம்பெறுகின்றது. மலையக திருமண வைபவங்களில் தமிழ் முறையில் உணவுகள் பரிமாறப்படுவதனை பெரும்பாலும் அவதானிக்க முடியவில்லை. பருப்பு, பலாக்காய், மிளகாய், பொரியல், நெத்தலி, கருவாடு, கோழி, மீன் இதுதான் இன்று விருந்துக்கு வைக்கப்படுகின்றது. இரசம் ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடக்கின்றது. இந்தப் பழக்கம் எங்கிருந்து வந்தது. இது தமிழ் உணவு இல்லையே. சில தமிழ் இளைஞர்கள் மூன்று வேளையும் சோறு சாப்பிடுவதாக கூறுகின்றார்கள். இத்தகையோர் இட்லி, தோசை, சாம்பார் போன்ற உணவு வகைகளை இழிவாக கருதுகின்றனர். பால் சோறு என்பதனைக் கூட இப்போது தமிழில் யாரும் அதிகமாக கூறுவது கிடையாது. கிரிபத் என்றே சிங்களத்தில் எம்மவர்கள் அழுத்திக் கூறுகின்றார்கள். காய்கறிகளை கொள்வனவு செய்கையிலும் சிங்களத்திலேயே அதிகமாக பேசப்படுகின்றது. ராபு, முருங்கா, வட்டக்கா, இப்படித்தான் நிலைமை செல்கின்றது. ஆசிரியர்கள் கூட சிங்கள ஆதிக்கத்துக்கு உட்பட்டுள்ளார்கள். கொடுப்பனவு என்பதற்கு பதிலாக ‘கெவீம’ என்றே இவர்கள் அதிகமாக கூறுகின்றார்கள். சாதாரண பேச்சு வழக்கில் கூட அவசரம் என்பதற்கு பதிலாக ‘அதிசிய’ என்ற சிங்கள சொல்லையே பெரிதும் எம்மவர்கள் பயன்படுத்துகின்றனர்.
வீட்டை ‘அஸ்’ பண்ண வேண்டும். என்கின்றனர். ‘பிட்ட பிட்ட’ அனிவாரய போன்ற பல சொற்கள் சிங்கள மொழியில் இருந்து தமிழர் கையாளுகின்றனர். ‘பட்ட’, ‘பெம்ம’, ‘தடகொலய’ போன்ற சொற்களையும் குறிப்பிடலாம். பழமொழிகளைக் கூட சிங்களத்தில் உள்ள பழமொழிகளையே கூறுகின்றனர். தமிழர்கள் சிங்களம் பேசி சிங்களப்பாணியை பின்பற்றுவதால் சிங்களவர்கள் உயர்குலத்தில் எம்மவர்களை இணைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆகக்குறைந்த அடிமட்ட குலத்திலேயே எம்மவர்களை சேர்த்துக் கொள்வார்கள்.
இந்தியத் தமிழர், இலங்கை தமிழர் என்று கூறிக்கொள்வார்கள். இந்தியத் தமிழர், இலங்கை தமிழர் என்று கூறிக்கொள்வதால் மிகவும் குறைந்த சமூகக் கட்டமைப்பிலேயே இந்திய வம்சாவளித் தமிழர்கள் உள்வாங்கப்படுவர் என்பதையும் நினைவு கூர விரும்புகின்றேன். இன அடையாளம், தனித்துவம், தமிழ் மரபு என்பவற்றை தக்கவைக்க எம்மவர்கள் முற்படுதல் வேண்டும். தோட்டங்களில் நல்ல நிலையில் இருந்து கலை கலாசார நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்கள் ஒப்பந்தத்திற்கமைய இந்தியாவுக்கு சென்றுவிட்டார்கள். இதனால் எஞ்சியிருந்த மக்களால் முறைப்படி கலை கலாசார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இந்த ஸ்தம்பித நிலை பாதக விளைவுகளை ஏற்படுத்தியது. நாடகம், பஜனை என்பனவும், கூத்துகளும் முறையாக இடம்பெறவில்லை. பழைய மரபுகள் இல்லாது போயின. இந்த நிலையில் இருந்தும் மீள்வதற்கு மிக நீண்டகாலம் எடுத்தது. எனினும் இன்னும் இது முழுமை பெறவில்லை. தமிழர்கள் தமிழராக வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கையே நன்மையை ஏற்படுத்துவதாக அமையும் என்பதனை மறந்து செயற்படலாகாது.
இரா.ரமேஷ் (சிரேஷ்ட விரிவுரையாளர்)
பேராதனை பல்கலைக்கழகம்
மலையக மக்கள் பரந்தும் செறிந்தும் வாழ்கின்றனர். பரந்து வாழும் தென்னிலங்கை தமிழ் மக்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழல் காரணமாக அச்சத்துக்குள் தள்ளப்பட்டனர். இவர்களின் சமூகப் பாதுகாப்பு கேள்விக்குறியானது. அரசியல் பிரதிநிதித்துவமின்மை, சிறிய எண்ணிக்கையான குழுவாக வாழ்ந்தமை, சிங்கள கிராமங்களுக்கு மத்தியில் தோட்டங்கள் இருந்தமை போன்றன இவர்களின் பாதுகாப்பினை ஆபத்திற்குள் தள்ளியது.
பெரும்பான்மை ஆதிக்கத்திற்கு மத்தியில் யுத்த சூழலில் இவர்களினால் நிம்மதியாக வாழ முடியவில்லை. பல்வேறு அடக்கு முறைகளுக்கும் இவர்கள் உள்ளாகினர். இதற்கிடையில் இம்மக்கள் தமது மனித பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. மனித மற்றும் சமூக பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் இவர்கள் தமது அடையாளங்களை படிப்படியாக இழக்க வேண்டியும் நேர்ந்தது. தமது தனித்துவத்தை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தென்னிலங்கை மலையக தமிழர்கள் குறித்து மலையக அரசியல்வாதிகள் அக்கறை காட்டவில்லை. மலையக அரசியல் மத்திய மாகாணத்தை மையப்படுத்தியே காணப்பட்டது.
தென்னிலங்கை மக்கள் பாதிப்பிற்கு உள்ளானபோது மலையக அரசியல்வாதிகளின் பதில்கள் திருப்தியளிக்கவில்லை. அரசாங்கம் உரிய பாதுகாப்பினை இவர்களுக்கு வழங்கவில்லை என்பதும் கசப்பான உண்மையாகும். அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாததால் தென்பகுதி தமிழ் மக்கள் பாதுகாப்பில்லாது அச்சத்துடன் வாழ்ந்தனர். இத்தகைய பல நிலைமைகள் தென்னிலங்கை இந்திய வம்சாவளி மக்கள் அடையாளத்தை இழந்து இரட்டை நிலை வாழ்க்கையை மேற்கொள்ள ஏதுவாகின. முழுமையாக தன்னை தமிழனாக காட்டிக்கொள்ள முடியாத சூழல் இவர்களுக்குள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை போன்ற பகுதிகளில் வாழும் எம்மவர்களின் நிலை இதுவாகும். இரத்தினபுரி கேகாலை மாவட்டங்களிலும் இப்போது இந்நிலை காணப்படுகின்றது. ஆங்கிலத்தில் இதனை எசிமிலேசன் (Assimilation) என்று
குறிப்பிடுகின்றனர். மனித ஆய்வாளர்கள் இனச்சுத்திகரிப்பு என்றவாறு நிலைமைகளை நோக்குகின்றார்கள்.
நல்லிணக்கம், சமாதானம், மனித உரிமை பற்றி இப்போது பேசப்படுகின்றது. இந்த இலக்கினை அடைவதற்கு நாட்டில் இனங்களுக்கு இடையில் ஒருமைப்பாடு ஏற்படுத்தப்படல் வேண்டும். ஒரு இனத்தின் தனித்துவத்தை இழக்கச் செய்து ஐக்கிய மிக்க நாட்டை கட்டியெழுப்ப முடியாது. பலநாடுகள் இதற்கு உதாரணமாகியுள்ளன. தென்னிலங்கை தமிழ் மக்கள் இன அடையாளத்துடன் வாழ ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். சமகால மலையக தலைவர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் இம்மக்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும்.
பழனிமுத்து ஸ்ரீதரன்
(வலய கல்விப் பணிப்பாளர், ஹட்டன்)
இனத்துவ அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் மொழி முக்கிய இடம் வகிக்கின்றது. இந்திய வம்சாவளித் தமிழர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவர் பல மொழிகளையும் கற்றுக்கொள்வது நல்லது. எனினும் தாய்மொழியை புறக்கணிக்கக்கூடாது. தமிழ்மொழியை புறக்கணித்து சிங்கள மயமாக முற்படுவதன் காரணமாக எமது இனத்துவ அடையாளம் பறிபோகும் அபாயம் உள்ளது. சமூகமும் தடமிழக்கும் வாய்ப்பு மிகவும் அதிகமாகும். தாய்மொழியை கல்வி கற்றவர்கள் கூட புறக்கணித்து வருகின்றனர். இது பாதக விளைவுகளை ஏற்படுத்தும். தமிழ் மொழிக்கு அந்தஸ்தினை ஏற்படுத்தும் நோக்கில் பல நிகழ்வுகள் பாடசாலைகளில் இடம்பெறுகின்றன. எனினும் தமிழை புறக்கணித்து சிங்களம் மேலெழும்ப முற்படும் நபர்களின் செயல்களினால் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்தினை பெற்றுக்கொடுப்பதில் இடர்பாடுகள் ஏற்படும். முக்கிய இடங்களில் தமிழ் மொழி இடம்பெறாத நிலைமையும் இதனால் உருவாகும். சொந்தத்தாயை விட்டு விட்டு மாற்றாந் தாயை கொண்டாட எவரும் முற்படக்கூடாது.
ஒரு இனத்தின் கலை, கலாசாரம் என்பன முக்கியத்துவம் மிக்கனவாகும். இதனை மறக்கக்கூடாது. எம்மவர்களின் பிழையான நடத்தை காரணமாக இந்துக்களின் கோயில்கள் பல இல்லாது கைநழுவிப்போயுள்ளன. சில இடங்களில் கோயில்கள் சிற்றுண்டிச்சாலையாகவும் மாற்றப்பட்டு பெரும்பான்மையினர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கலை கலாசாரங்களும் அழிவடைந்துள்ளன. எதிர்கால சந்ததிக்கு எமது அடையாளத்தை உறுதிப்படுத்த எதை விட்டுச் செல்ல உள்ளோம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. எம்மவர்கள் சிங்கள மயமாக முற்படுவதால் எமது இனத்தின் தனித்துவமும் சீர்குலைகின்றது.
இந்துக்களின் திருமண சடங்குகள் உள்ளிட்ட ஏனைய கிரியைகள் பலவும் அர்த்தம் மிக்கவையாகும். வெள்ளையர்களே எமது கிரியைகளின் முக்கியத்துவத்தினைக் கண்டு பிரமித்துப் போகின்றார்கள். இந்நிலையில் நாம் எமது கிரியைகளின் பெருமைகள் உணராது மாற்று இனத்தவர்களின் கிரியைகளை பின்பற்றுவது எவ்விதத்தில் நியாயமாகும். இந்துக்களின் உணவுவகைகள் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்று விளங்குகின்றன. எனினும் எம்மவர்கள் இன்று இதனை புறந்தள்ளி சிங்கள மற்றும் மேற்கத்தேய உணவுகளுக்கு முக்கியத்துவமளிக்கின்றனர். இது எம்மவர்களின் அறியாமையையே வெளிப்படுத்துகின்றது. எமது இனத்தை நாமே அழிக்கும் நடவடிக்கைகள் இனியும் தொடரக்கூடாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM