ஞானசார தேரரை விளக்கமறியலில் வைத்தது நீதித்துறையின் தீர்ப்பாகும். இதில் எமக்குத் தொடர்பு கிடையாது. நீதிமன்றத்தின் முன்பாக காவி உடையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உண்மையான பிக்குகளா என்பது எமக்கு தெரியவில்லை. போலித் தேரர்களுக்கு அரசாங்கத்தினால் இடமளிக்க முடியாது பௌத்தர்கள் என்ற வகையில் இவ்விடயம் தொடர்பில் வெட்கி வேதனையடைகிறோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
உடன்படிக்கைகளை மேற்கொண்டாலும் முதலீட்டு பொருளாதார ஆலோசனைகளை அரசாங்கம் பெற்றுக் கொண்டாலும் உள்நாட்டு நீதித்துறைக்குள் தலையீடு செய்வதற்கு வெளிநாடுகளுக்கோ வெளிநாட்டு நீதிமன்றங்களுக்கோ இடமளிக்கப் போவதில்லை என்றும் பிரதமர் திட்டவட்டமாகத் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்கம் மேற்கொண்டுள்ள 12 நாடுகளுடனான முதலீட்டு உடன்படிக்கைகள் தொடர்பில் மஹிந்த அணியின் பிரதானியான தினேஷ் குணவர்த்தனவினால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் இங்கு தொடர்ந்து கூறுகையில்,
ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாததன் காரணமாக நாம் இலங்கையை பாதுகாத்து வருகின்றோம். எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை விடுத்தாரே ஒழிய நாம் ஒரு சந்தர்ப்பத்திலும் ஜெனீவா சென்று அவ்வாறானதொரு கோரிக்கையை விடுக்கவில்லை.
நாம் வெளிநாடுகளில் முதலீட்டு உடன்படிக்கைகளை மேற்கொள்கின்றோம். பொருளாதார ஆலோசனைகளை பெறுகின்றோம். அதேபோன்று நீதித்துறை சார் ஆலோசனைகளையும் பெற்றுவருகின்றோம். எனினும் எமது நீதித்துறையின் இறைமைக்குள் வெளிநாடுகள் தலையீடு செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
உலக நாடுகள் தற்போது இலங்கையை ஏற்றுக் கொண்டுள்ளதோடு அழைப்புகளும் வருகின்றன. நாமும் உலகோடு கைகோர்த்து பயணித்தாலே அபிவிருத்திகளைக் காணமுடியும்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பாரிய பிரச்சினை இருந்து வருகின்ற போதிலும் இந்தியப் பிரதமரும் பாக். பிரதமரும் சினேகபூர்வமான உறவினை பேணி வருகின்றனர்.
அதேபோன்று தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கு மிடையில் பாரிய போட்டித் தன்மை ஒன்று நிலவி வருகின்ற போதிலும் ஆந்திர மாநிலத்தில் சீனாவுக்கு 10 ஆயிரம் ஏக்கர் காணியை இந்தியா வழங்கியிருக்கின்றது. இவ்வாறு தான் வெளிநாடுகளின் உறவுகள் பேணப்பட்டு வருகின்றன.
இன்று ஞான சார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் பிரகித் எக்னெலி கொடவின் மனைவியை மிரட்டிய குற்றத்துக்காகவே நீதிமன்றத்தினால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமையானது நீதித்துறை விவகாரமாகும். இதற்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் காவி உடையணிந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமாத்திரமின்றி நீதிமன்றத்துக்குள் அத்துமீறி நுழைவதற்கும் முற்பட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் பௌத்தர்கள் என்ற வகையில் நாம் வெட்கமடைகிறோம். அத்துடன் வேதனையும் அடைகிறோம்.
ஞானசார தேரரின் கைது, விளக்கமறியலில் வைக்கப்பட்டமை தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றை மா நாயக்கருக்கு அனுப்பிவைக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
அத்துடன் போலித் தேரர்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM