சிங்கள மக்கள் மோசமானவர்கள் அல்ல. ஆனால். சில அரசியல்வாதிகள் அவர்கள் மத்தியில் புதிய அரசியலமைப்பு மூலம் நாடு துண்டாடப்படப் போகின்றதென்ற பயத்தைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர் என்று தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸிடம் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இதயசுத்தியுடனான அதிகாரப் பங்கீடு இன்றியமையாதது. ஆகவே, மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் இடங்களில் தங்களது அன்றாட விடயங்களில் தாமே முடிவுகளை மேற்கொண்டு செயற்படக்கூடியதாக அதிகாரப்பகிர்வு அமைய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் வலியுறுத்தினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை காலை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் புளொட் தலைவர் சித்தார்த்தன் எம்.பி, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி ஆகியோரும் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸுடன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப்பும் மற்றும் உயர் அதிகாரிகளும் பங்கெடுத்திருந்தனர்.
இச்சமயத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன், நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளினால் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டுள்ளதோடு நாட்டில் எங்களது உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 1.5 மில்லியன்களுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்துள்ளனர். நாட்டில் எஞ்சியுள்ள தமிழ் மக்களாவது உரிய கௌரவத்துடன் வாழவேண்டும். புலம்பெயர்ந்தவர்கள் நாட்டிற்குத் திரும்பிவர வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்.
இலங்கையில் வாழுகின்ற சகல மக்களினதும் கௌரவத்தைக் காப்பாற்றுவதாகவும், பேணக்கூடியதாகவும் அமையக் கூடிய புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும். கடந்த காலங்களைப் போலல்லாது இம்முறை அரசியலமைப்பு உருவாக்குவதில் அதிகளவான ஆரம்பக்கட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இச் செயற்பாடுகள் தோல்வியடைய இடமளிக்கப்படக் கூடாது. அதிகாரப் பங்கீடு விடயத்தில் இதயசுத்தியுடனான அதிகாரப் பங்கீடு இன்றியமையாதது. மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் இடங்களில் தங்களது அன்றாட விடயங்களில் தாமே முடிவுகளை மேற்கொண்டு செயற்படக்கூடியதாக அவை அமைய வேண்டும்.
சிங்கள மக்கள் மோசமானவர்கள் அல்ல, ஆனால், சில அரசியல்வாதிகள் அவர்கள் மத்தியில் புதிய அரசியலமைப்பு மூலம் நாடு துண்டாடப்படப் போகின்றதென்ற பயத்தைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர். நாங்கள் நாடு பிரிக்கப்படுவதை விரும்பவில்லை. ஆனால், நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தாங்கள் இந்த நாட்டுக்குச் சொந்தமானவர்கள். இந்த நாடு தங்கள் எல்லோருக்கும் சொந்தமானது என்று உணரக்கூடிய வகையில் அமைய வேண்டுமென்றும். இந்த நாட்டில் இதுவரை காலமும் ஒவ்வொருவரும் கணிக்கப்பட்டதைப் போல இனிமேலும் நாங்கள் கணிக்கப்படக் கூடாது. இந்த நாட்டில் வாழுகின்ற சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களையும் சமமானவர்களாகவும் கௌரவமானவர்களாகவும் நாம் கணித்துச் செயற்படுவோம்.
இந்தச் சந்தர்ப்பத்தை நாம் தவறவிடாது, உயர்ந்த அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நாட்டில் இரண்டு பொிய கட்சிகளும் இணைந்து செயற்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். புதிய அரசியலமைப்புக்குப் பல்வேறு கட்சிகளினதும் ஒப்புதலைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது. அதனால் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்று பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினூடாக நாட்டு மக்களின் அங்கீகாரத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
இப்பிரச்சினை இனிமேலும் இனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் பயன் தரக்கூடிய அதிகாரப் பகிர்வு சம்பந்தப்பட்ட விடயமாகும். எல்லா மாகாணங்களிலும் உள்ள முதலமைச்சர்கள் தமது மாகாணங்களுடன் தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்குத் தமக்கு மேலும் அதிகாரங்கள் வேண்டுமெனத் தெரிவித்திருப்பதாக நாம் அறிகின்றோம் என்றார்.
அத்தோடு ஆயுதப் படையினர் தங்கியிருக்கும் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்குக் கையளிக்கப்பட வேண்டும். அக்காணிகளுக்குத் திரும்பி வருவதற்கு அவர்கள் உரிமையுடையவர்கள். மக்கள் தமது காணிகளைக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வரும் இவ்வேளையில் ஆயுதப்படையினர் இக் காணிகளில் தங்கியிருந்து அதனைத் தமது உபயோகத்துக்குப் பயன்படுத்த முடியாது. காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடியாகக் கவனம் செலுத்தப்பட்டு, நம்பத்தகுந்த விசாரணைகள் மூலம் உண்மைகள் அறியப்பட்டுக் காணாமல் போனவர்களது குடும்பங்கள் ஏதாவது வகையில் மன ஆறுதல் அடைவதை உறுதி செய்ய வேண்டும்.
கொடுமையான பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைப்பதாக அரசாங்கம் உத்தரவாதம் அளித்திருந்தபோதும் அச்சட்டம் இன்னும் மாற்றியமைக்கப்படவில்லை. இச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் இன்னமும் நியாயமற்ற வகையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் எடுத்துரைத்துள்ளார்.
அதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படுவதனால் தாங்கள் தோற்றுப்போனவர்களாகக் கருதுபவர்களே இனவாத சிந்தனைகளைத் தூண்டுபவர்களாகச் செயற்படுகின்றனர். அரசியலமைப்பு மறுசீரமைப்புத் தொடர்பாக நியமிக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையின்படி நாடளாவிய ரீதியில் புதிய அரசியலமைப்பொன்று தேவை என்று மக்கள் கருதுகின்றனர் எனச் சுட்டிகட்டினார்.
இவற்றை கூர்மையாக செவிமடுத்த பதில் உதவிச் செயலாளர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழு மற்றும் அதன் தலைவருக்கும் நன்றி கூறியதோடு, கொள்கையில் உறுதிப்பாடுடைய ஒரு தலைவரைச் சந்திக்கக் கிடைத்தமையையிட்டு தாம் பெருமையடைகின்றென். உங்களால் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஐக்கிய அமெரிக்க அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துடனான அதன் தொடர்புகளைத் தொடர்ந்தும் பேணிவரும் எனவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM