வருடத்தின் இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா, இந்தியாவிடத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தினை ஸ்தாபிப்பதற்குரிய சகல நடவடிக்கைகளையும் விரைந்து முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரைச் சந்தித்த போது ஜனாதிபதி இந்த உறுதியளிப்பை செய்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த உறுதி மொழி தொடர்பில் மேலும் தெரியவருதாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை காலை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் புளொட் தலைவர் சித்தார்த்தன் எம்.பி, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி ஆகியோரும் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாருடன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப்பும் பங்கெடுத்திருந்தார்.
இதன்போது எதிர்க்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், குறிப்பிடுகையில்
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் பணிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது. இருப்பினும் பிரதான கட்சிகள் இந்த விடயத்தில் ஒருமித்த பயணத்தினை மேற்கொள்வதில் சில இடர்பாடுகள் காணப்படுகின்றன. இதன் காரணத்தினால் கடந்த வருடம் டிசம்பர் 10ஆம் திகதி அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டிய புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையின் வரைவு தற்போது வரையில் பூர்த்தி செய்யப்படாது காலதாமதமாகிக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் காலம் தாமதிப்பதால் தமிழ் மக்களே பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றார்கள். ஆகவே பிரதான கட்சிகள் இரண்டும் புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டில் அதிகளவு கரிசனையைக் காட்ட வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
அத்துடன் புதிய அரசியலமைப்பின் ஊடாகவே தமிழ் மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றோம். ஒருமித்த நாட்டிற்குள் பிகரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட்ட வேண்டும். தமிழ் மக்கள் சமஉரிமை கொண்ட பிரஜைகளாக கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் வழ்வது புதிய அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது எனவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இச்சமயத்தில் பதிலுரைத்த தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ், குறிப்பிடுகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நான் சந்த்திருந்தேன். அவர் இந்த வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்புக்குரிய நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார் என்றார்.
அதனையடுத்து காணமலாக்கப்பட்டவர்களின் விவகாரம் தொடர்பிலும் கூட்டமைப்பினரால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமாதமாகிச் செல்வது தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டபோது காணமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தினை ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பதாக ஜனாதிபதி தன்னிடத்தில் தெரிவித்ததாக உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் குறிப்பிட்டிருக்கின்றார்.
இதேவேளை நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.45 அளவில் இலங்கையில் நடைபெற்ற இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான குழுவினர் தமது பயணத்தின் இறுதியில் எதிர்க்கட்சித்தலைவரான இரா.சம்பந்தடைின சந்தித்திருந்தனர். இச்சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரன் எம்.பி. யும் பங்கேற்றிருந்தார்.
இச்சந்திப்பின் போது நடைபெற்ற கலந்துரையாடலிலும் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன், புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் கால தாமதப்படுத்தப்படுவது குறித்தும் அவ்விடயத்தில் இந்தியா தனது கரிசனையை அரசாங்கத்திடத்தில் வெளிப்படுத்தி அழுத்தங்களை வழங்க முனையவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
அச்சமயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், குறிப்பிடுகையில் புதிய அரசியலமைப்பு விரைவாக உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நானும் இருக்கின்றேன். அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம். வீணாக காலம் தாழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை நாமும் அவதானித்திருந்தோம். இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த போதும் கவனம் செலுத்தியிருந்தேன். அவர்(ஜனாதிபதி) அது குறித்து சாதகமான வெளிப்பாட்டை செய்திருக்கின்றார். அதனை தங்களித்தில் (எதிர்க்கட்சித்தலைவரிடத்தில்) கூறுவதற்கே விசேடமாக இந்த சந்திப்புக்கான ஏற்பாட்டினை செய்திருக்கின்றேன் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM