புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை வரைவு எதிர்வரும் செப்டெம்பர் முதல்வார இறுதிக்குள் வெளியிடப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய அரசியலமைப்புக்கான இறுதி செய்யப்பட்ட முன்மொழிவுகள் எதிர்வரும் வியாழக்கிழமையன்று வழிநடத்தல் குழுவிடத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மேலும் புதிய அரசியலமைப்புக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்த குழுவினர் புதிய அரசியலமைப்பு குறித்த உரிய தெளிவுபடுத்தலை வழங்கும் வகையிலான பிரசாரமொன்றை முன்னெடுக்க வேண்டியது அவசியம். அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று இணக்கம் காணப்பட்டதோடு அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் வைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்துள்ள 20ஆவது திருத்தச்சட்டம் குறித்து பல்வேறு தரப்பினரால் ஆட்சேபமும் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று திங்கட்கிழமை இரவு 9.30க்கு கட்சித்தலைவர்கள் கூட்டம் ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், அமைச்சர்களான லக் ஷ்மன் கிரியல்ல, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, நிமல் சிறிபால, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், பழனி திகாம்பரம், கபீர் ஹாசீம், ராஜித, சம்பிக ரணவக்க, சுசில் பிரேம்ஜயந்த, சரத் அமுனுகம, அனுர பிரியதர்ஷன யாப்பா, டிலன் பெரேரா மற்றும் சுமந்திரன் எம்.பி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இச்சந்திப்பின் போது முதலில் புதிய அரசியலமைப்பு பணிகள், 20ஆவது திருத்தசட்டம், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக நிரலாக கலந்துரையாடுவதென தீர்மானிக்கப்பட்டது.
புதிய அரசியலமைப்பு
அதனடிப்படையில் முதலில் புதிய அரசியலமைப்பு பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இச்சமயத்தில் வழிநடத்தல் குழுவில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரமுறைமை, நாட்டின் தன்மை உள்ளிட்ட விடங்களில் தமது நிலைப்பாடுகளை இறுதி செய்து முன்மொழிவைச் செய்யவில்லை. அதற்கான கால அவகாசத்தினைக் கோரியுள்ள போதும் அவ்விடயம் தொடர்பாக தொடர்ந்தும் தமதங்களே நிலவுகின்றன என்று முதலில் ஜனாதிபதியிடத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இச்சமயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்ந்தும் காலதாமத்தினைச் செய்யாது. எதிர்வரும் வார இறுதிக்குள் தமது நிலைப்பாட்டினை வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கும் என்று குறிப்பிட்டார். அச்சமயத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை வழிநடத்தல் குழு கூடுகின்றமையால் அன்றைதினமே சு.க.வின் இறுதி முன்மொழிவைச் சமர்பித்தால் பொருத்தமானதாக இருக்கும் என ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனை ஆமோதித்த ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன எதிர்வரும் வியாழக்கிழமையன்றி சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டதோடு நின்றுவிடாது, அவ்வாறு சுதந்திரக்கட்சி தனது முன்மொழிவைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில் இடைக்கால அறிக்கையின் வரைவினை எதிர்வரும் செப்ரம்பர் மாதத்தின் முதல் வாரத்தின் இறுதிக்குள் சமர்ப்பித்து விடமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பாக அடுத்த கட்டமாக செய்யவேண்டிய நடவடிக்கைகள் சில உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால, குறிப்பாக சர்வஜன வாக்கெடுப்பு குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறுகின்றார்கள். புதிய அரசியலமைப்பு சர்வஜனவாக்கெடுப்புக்குச் சென்றால் தோல்வியடைந்து விடும் என்று கூறுகின்றார்கள்.
உண்மையில் மக்கள் மத்தியில் புதிய அரசியலமைப்பு குறித்து பூரணமான தௌிவான நிலைமையொன்று காணப்படவில்லை.ஆகவே புதிய அரசியலமைப்பு குறித்து மக்களுக்கு தௌிவுபடுத்தவேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் நாடு பிளவடைந்து விடும் என்று மக்கள் அச்சமூட்டப்பட்டிருக்கின்றார்கள்.
ஆகவே சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லமுதல் அந்த நிலைமை போக்கப்படவேண்டும். அதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளும், சுதந்திரக்கட்சியின் பிரதிநிதிகளும் இணைந்து கூட்டாக புதிய அரசியலமைப்பு குறித்து மக்களுக்கு தௌிவு படுத்தும் பிரசாரத்தினை முன்னெடுக்க வேண்டும். அந்த நடவடிக்கையை தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
20ஆவது திருத்தச்சட்டம்
இதனையடுத்து அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்காக கொண்டுவருவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ள 20ஆவது திருத்தச்சட்டம் குறித்து பேச்சுக்கள் எழுந்தன. இதன்போது, தேர்தல்கள் தள்ளிப்போவததை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தேர்தல்கள் தள்ளிப்போவது ஜனநாயகத்தினை பாதிக்கும் விடயமாகும். மாகாணசபைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யவேண்டுமாயின் ஒருசில மாதங்கள் தள்ளிப்போவதனை அனுமதிக்க முடியும். ஆனால் அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே தருணத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட சில மாகாணங்களுக்கான தேர்தலை மட்டும் தள்ளிப்போடுவதென்பது பொருத்தமானதல்ல என் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உட்பட ஏனை தரப்புக்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளன.
அத்துடன் உள்ளுராட்சி மன்றங்களுக்கான சட்டமூலத்தினை நிறைவேற்றி தேர்தல்லை நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் உள்ளுராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிரிக்க வேண்டும், உறுப்பினர்களின் எண்ணிக்கை மீளாய்வு செய்யப்படவேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.
இதன்போது தற்போதைக்கு அந்த விடயங்களை மேற்கொள்ளாது இருக்கின்றபடியே உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கு முகங்கொடுப்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது நிலைப்பாட்டினை வௌியிட்டிருந்தார்.
இருப்பினும் அதற்கு அனைத்து தரப்பினர்களிடையேயும் இணக்கப்பாடு எட்டப்படாமையின் காரணமாக 20ஆவது திருத்தச்சட்டம், உள்ளுராட்சி மன்றங்கள் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படாது கூட்டம் நிறைவடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM