ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் அடுத்தவாரம் 11 ஆம் திகதியிலிருந்து 29 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் இலங்கை குறித்து எந்தவொரு விடயமும் கலந்துரையாடப்படமாட்டாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஜெனிவா பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில் இம்முறையும் ஜெனிவா கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பும் என தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான எந்தவொரு விடயமும் இடம்பெறுவதற்கான சாத்தியமில்லை. காரணம் இலங்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் பிரேரணையை எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பது தொடர்பான இடைக்கால அறிக்கை அடுத்தவருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 37 ஆவது கூட்டத் தொடரிலேயே சமர்ப்பிக்கப்படவுள்ளது. அந்த வகையில் 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான எந்தவொரு விடயமும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் இலங்கை தொடர்பாக ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதாவது 2015 ஆம் ஆண்டு இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுல்படுத்துவதற்கு மேலும் இரண்டுவருடகால அவகாசம் வழங்கும் வகையிலேயே இம்முறை மார்ச் மாத பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதன்படி இந்த இரண்டு வருடகால அவகாசத்தில் இலங்கை எவ்வாறு பிரேரணையை அமுல்படுத்துகிறது என்பது தொடர்பில் இடைக்கால அறிக்கையை அடுத்தவருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் முன்வைக்க வேண்டும்.
அதன்பின்னர் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை இரண்டுவருடகால அவகாசத்தில் ஜெனிவா பிரேரணையை முழுமையாக அமுல்படுத்தியதா என்பது தொடர்பான இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும். இதன்போது இலங்கையும் ஒரு பரந்துபட்ட அறிக்கையை ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று ஐ.நா. மனிதவுரிமை அலுவலகமும் இலங்கை தொடர்பாக ஒரு பரந்துபட்ட அறிக்கையை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மனிதாபிமான நிறுவனங்களும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும் இலங்கை தொடர்பில் அறிக்கைகளை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி அரசாங்கமானது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்புடன் விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்கி பொறுப்புக்கூறலை முன்னெடுக்கவேண்டும். அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டும்.
அதுமட்டுமன்றி உண்மையைக் கண்டறிதல், நட்டஈடுவழங்குதல், நீதியை நிலைநாட்டுதல் மற்றும் மீள் நிகழாமையை உறுதி செய்தல். ஆகிய நான்கு விடயங்களின் அடிப்படையில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது.
எப்படியிருப்பினும் உண்மையைக் கண்டறியும் பிரிவின் கீழ் தற்போது அரசாங்கம் காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் அலுவலகத்தை அமைத்திருக்கிறது. விரைவில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தென்னாபிரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பான அனுபவங்களையும் பெற்று இலங்கையில் ஒரு ஆணைக்குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்து வருகிறது.
இதேவேளை, கடந்தமாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கியநாடுகளின் பயங்கரவாதத்திற்கான நடவடிக்கை மற்றும் மனித உரிமை விவகாரங்களுக்கான விசேட நிபுணர் பென் எமர்சன் கடும் விமர்சனங்களை முன்வைத்துவிட்டு சென்றிருந்தார். அதாவது பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் எவ்விதமான முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை என்றும் அந்த செயற்பாடுகள் ஒரு இடத் தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே தெரிவதாகவும் அவர் கூறியிருந்தார்.
அதுமட்டுமன்றி இலங்கை அரசாங்கம் குறித்த கால அவகாசத்திற்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்காவிடின் இலங்கை விவகாரம் மனித உரிமை பேரவையிலிருந்து ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு செல்லும் சாத்தியம் இருப்பதாகவும் சர்வதேசத்தின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் கூறியிருந்தார். அவரின் இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையையும் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார். அந்தவகையில் அடுத்த வருட மார்ச் மாதக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக பல்வேறு அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM