புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்காக முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாம் செய்யும் நன்றிக்கடன் என அமைச்சர் மனோகணேசன் சபை யில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாற்பதாண்டு கால பாராமன்ற அரசியல் வாழ்க்கை நிறைவையொட்டி வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாற்பது ஆண்டுகளை தனது அரசியல் வாழ்க்கையில் பூர்த்தி செய்கின்றார். அவருக்கு எமது கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பிலும் மக்கள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் வாழ்க்கையில் கல்வியில் நாட்டை முன்னேற்றுவது. இளைஞர்களை மேம்படுத்துவது ஆகிய இரண்டு விடயங்களில் அதிதீவிரமாக செயற்பட்டதோடு பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியிருந்தார்.
கல்வித்துறையைப் பொறுத்தவரையில் தொழில்நுட்பம், கணனி, ஆங்கிலம் ஆகியவற்றை மையப்படுத்தி எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு கல்விக்கொள்கைகளை வகுத்திருந்தார்.
ஒருநாட்டின் இளைஞர்கள் தூங்குகின்றார்கள் என்றால் அந்த நாட்டு பின்நோக்கியே செல்வதாக அமையும். இளைஞர்கள் விழித்திருக்கின்றார்கள் என்றால் அந்த நாடு முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது என்று அர்த்தப்படும். அதற்கமைவாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இளைஞர் மன்றத்தின் பிதா என்று கௌரவப்படுத்தலாம்.
இளைஞர் மன்றத்தினை ஆரம்பித்து இளைஞர் முகாம்களை திட்டமிட்டு நடத்திவந்ததோடு விளையாட்டுத்துறையையும் பாடசாலை மட்டத்திலிருந்து முன்னேற்றி வந்திருந்தார். இவையெல்லாம் பிரதமரின் எதிர்காலம் குறித்த தூரநோக்கான சிந்தனையின் வெளிப்பாடாகவே கருதவேண்டியுள்ளது.
மேலும் பிரதமருக்கும் எனக்கும் இடையில் அரசியல் ரீதியாக பல தொடர்புகள் காணப்படுகின்றன. இந்தச்சந்தர்ப்பத்தில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற விடயமொன்றை இங்கு நினைவு கூருகின்றேன்.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகாவை ஆதரித்து நாங்கள் தீவிரமான பிரசாரத்தினை மேற்கொண்டிருந்த தருணத்தில் வலப்பனை கூட்டத்தினை நிறைவு செய்துவிட்டு நோர்வூட் நோக்கிச் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பிரதமரும் என்னுடன் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அச்சமயத்தில் ஜெயலத் ஜெயவர்த்தனவும் இருந்தார்.
அப்போது மலையகத்தில் உள்ள எமது மக்களின் குடியிருப்புக்களை பார்த்து ஒரு விடயத்தினை கூறினார். இவர்கள் உயரத்தில் தோட்டங்களுக்குள் இருப்பதன் காரணத்தால் தான் தேசிய நீரோட்டத்திலிருந்து அந்நியப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு தனியான வீடுகளை வீதியோரங்களில் அமைப்பதன் ஊடாக தேசிய நீரோட்டத்தில் அவர்களை இணைத்துக்கொள்ள முடியும். இது எனது கனவு. எமது ஆட்சி வந்தவுடன் அதனை நிச்சயம் செய்வோம் என்று கூறியதுடன் அதன் பின்னர் அந்த மக்கள் சிங்கள வேட்பாளருக்கே வாக்களிப்பார்கள். உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் நகைச்சுவையாகக் கூறினார்.
அதன்போது நான், பரவாயில்லை. அவ்வாறான இன அடையாளமற்ற சூழலொன்று ஏற்படுவதையே நாமும் விரும்புகின்றோம். அவ்வாறானதொரு ஜனநாயகச் சூழல் உருவாக்கப்படவேண்டும் என்பதே எமது நோக்கமுமாகும் என்று குறிப்பிட்டிருந்தேன்.
மேலும் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையூடாகவே தீர்வு காணப்படவேண்டும் என்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியுடன் இருந்தார். இதன் காரணமாகவே விடுதலைப்புலிகளுடன் சமாதான உடன்படிக்கையைச் செய்து , ஒஸ்லோவிலும் பேச்சுக்களை நடத்தினார்.
துரதிஸ்டவசமாக அவை வெற்றியளிக்காது போயின. யுத்தம் நடைபெற்று நிறைவுக்கு வந்தது. அதன் பின்னர் யுத்த வெற்றியை அளவுக்கு அதிகமாக பிரசாரம் செய்தனர்.
விடுதலைப்புலிகளின் தோல்வியை முழு தமிழ் மக்கள் அடைந்த தோல்வியாக சித்தரிப்புகள் எழுந்தபோது அவ்வாறான நிலைமை ஏற்படக்கூடாது என்பதில் பிரதமர் குறியாக இருந்தார். யுத்தவெற்றி தமிழ் மக்களுக்கு எதிரான வெற்றி என்ற நோக்கு இருக்க கூடாது என்பதில் அவர் உறுதியுடன் இருந்தார்.
அதுமட்டுமன்றி கடந்த கால காட்டாட்சியை மாற்ற வேண்டும் என்று நாம் ஒன்றாக போராடினோம். சுதந்திரத்திற்கான மேடை, மக்கள் கண்காணிப்புக்குழு, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு, ஒற்றுமை இயக்கம் என்று பிரதமருடன் இணைந்து வெள்ளை வான் கடத்தல்கள், காணாமலாக்கப்படுதல் போன்ற ஜனநாயகத்தினை ஒழிக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக குரல்கொடுத்து ஆட்சியை மாற்றினோம்.
அதேநேரம் பிரதமரின் நிதானம், பொறுமை, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் தன்மை போன்ற பண்புகள் அவரிடத்திலிருந்து நாம் பெற்றுக்கொண்ட மிகச்சிறந்த படிப்பினைகளாக அமைகின்றன. தற்போது புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
பிரதமருடைய தலைமையிலே வழிநடத்தல் குழுவில் நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். வழிநடத்தல்குழு அரசாங்கத்தினை மட்டும் மையப்படுத்திய குழுவல்ல. அதில் அனைத்துக் கட்சியின் உறுப்பினர்களும் இருக்கின்றார்கள்.
தேசிய இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையூடாக தீர்வு காணப்படவேண்டும் என்பது பிரதமரின் நீண்டகால இலக்கு. அதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்காக நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதுவே நான்கு தசாப்த அரசியல் வாழ்வை நிறைவு செய்துள்ள நட்சத்திரத்திற்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM