குழந்தையொன்றை அறுவைச் சிகிச்சை (Cesarean) மூலம் பெறவேண்டியுள்ளது. அதற்கு ஒரு நல்ல நாள் நேரத்தை இந்த வாரத்தில் அல்லது இந்த மாதத்தில் குறித்துக்கொடுங்கள் என்று சோதிடரிடம் கேட்டால், அவரும் இது சரியானதா, இயற்கையோடு இயைந்ததா என்பதையெல்லாம் யோசிக்காமல் அப்போதைய காலக்கட்டத்தில் பலமானதொரு லக்கின அடித்தளம், இராசி மற்றும் கேந்திர திரிகோணங்களில் முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் போன்றவைகளை பஞ்சாங்கத்தின் மூலம் அவதானித்து முடிந்தவரை ஒரு நல்ல நாள், நேரத்தை குறித்து கொடுத்து விடுகிறார். அதன்படி பெற்றோரும் அறுவை மூலம் பிள்ளையைப் பிறக்க வைத்து விட்டு எதிர்காலத்துக்கான ஒரு வீரனையோ அன்றி வீராங்கனையையோ பெற்றெடுத்து விட்டதாகக் கூறி பெருமிதம் கொள்கின்றனர்.
ஆனால் இதுவொரு சரியான பிறப்பாக அமையாது. அதற்கான வேளை வந்து வயிறு நொந்து தானாகவே பிரசவிப்பதற்கும் உரிய காலத்திற்கு முன்னால் வலியே இல்லாமல் அல்லது வேதனை தெரியாமல் அறுவை மூலம் சிசுவை வெளியே கொணர்வதற்கும் அதிக வித்தியாசமுண்டு எனவும் இயற்கையின் நியதியை மீறி மனிதனால் செய்யப்படும் எந்த வெளிப்பாட்டுக்கும் ஜெனனத்தோடு மரணத்திற்கும் கூட எந்தவித சாஸ்திர சம்பிரதாயமும் கிடையாதெனவும் இந்தியாவின் பிரபல ஜோதிட மேதையான வழுத்தூர் கோபால சர்மா அங்குள்ள பிரபல சோதிட சஞ்சிகையான Astological Magazine இல் அண்மையில் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
இது எதனை ஒத்ததாக இருக்கிறதென்றால், இயற்கையாக ஒருவர் இறப்பதற்கும் செயற்கையாக தற்கொலை செய்து கொண்டு தன்னுயிரை மாய்த்துக் கொள்வதற்குமுள்ள வேறுபாடாகவே இதனையும் பார்க்க வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார். செயற்கையாக தற்கொலை மூலம் தன்னைத்தானே மாய்த்துக் கொள்பவன், இயற்கையாக அவன் எப்போது இறக்க வேண்டுமென்ற கால நேரம் விதியால் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றதோ அன்றே அந்த உயிரின் அல்லது ஆன்மாவின் மறுபிறப்புக்கான காலம் அல்லது வாழ்க்கை ஆரம்பிப்பதாக அதற்கான சில உதாரணங்களையும் எடுத்துக்காட்டி அவர் அக்கட்டுரையில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். எனவே செயற்கையாக நாம் தீர்மானிக்கிற ஒரு மனிதனின் பிறப்புக்கும் அதனை வைத்து செய்யப்படுகிற சாதகக் கணிப்புக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையென்பது அக்கட்டுரையாளரின் தீர்க்கமான கருத்தாக இருக்கிறது.
இதன்மூலம் அவர் குறிப்பிடுவது யாதெனில் விதிவந்து அதாவது வேளை வந்து அது அது சம்பவிக்கும் வரை அதனை தன் போக்கில் விட்டுவிட வேண்டுமென்பதே. இன்னொருவனின் விதியைத் தீர்மானிக்க நமக்கு எந்தவிதத்திலும் உரிமையில்லை. இறப்பும் பிறப்பும் அந்த இறைவன் கைகளில் எப்போது நிகழ்கிறதோ அப்போது கண்டுகொள்ள வேண்டியது தான் என்பதே அவர் கூறும் முடிவாக இருக்கிறது. ஒரு குழந்தையானது எப்போது எந்நாளில், எத்தனை மணி, நிமிட, விநாடிகளில் பிறக்க வேண்டுமென்பது யாருக்கும் தெரியாது. வைத்தியர்கள் குறிப்பிட்டுச் சொல்வதெல்லாம் வெறும் உத்தேசம் தான். அதுபோல ஒருவர் எப்போது இறக்கப்போகிறார் என்பதும் தெரியாது.
தற்கொலை செய்து கொள்வோருக்குக் கூட அவரது சாவு பற்றி அவருக்கே நிச்சயமிராது. தற்செயலாக அவர் காப்பாற்றப்பட்டு விட்டால் அவரால் அவரது இறப்பைக்கூட சரிவரச் செய்ய முடியாத கையாலாகாத்தனம் வெளிப்பட்டு விடும்.
இயற்கையைக் கையகப்படுத்திவிட்டதாகக் கூறி மனிதர்கள் தம்மிஷ்டப்படியே காடுகளை அழித்தும், பூமியைக் குடைந்தும் மலைகளை தகர்த்தும் நீர் நிலைகளை மூடி கட்டிடங்கள் அமைத்தும் வனவிலங்குகளை அழித்தும் இடம்பெயர வைத்தும் இயற்கையின் சமநிலையைச் சீர்குலைக்க முனைகின்ற போது, பொறுத்தது போதுமென்று பொங்கியெழுந்து அது நிகழ்த்தும் அனர்த்தங்களைக் கண்ணாரக் கண்டும் அவற்றில் சிக்கி அவஸ்தைப் பட்டும் நமக்குப் புத்தி வராதது நமது துரதிர்ஷ்டமே!
பிறப்பு என்பது அவரவர் பூர்வஜென்ம வினைகளுக்கான சம்பாவனை. அதனை ஒவ்வொரு கால கட்டங்களிலும் இன்பமாகவும் துன்பமாகவும் அனுபவித்தே தீரவேண்டுமென்பது விதியாகும். அதனை நாம் நல்லநேரம், கிரகநிலை பார்த்து பூமியில் பிறக்க வைப்பதன் மூலம் நம்மால் மாற்றியமைத்து விட முடியாது. அது இறைவனின் சித்தத்தை மீறுவதற்குச் சமமாகும்.
“பவிஷ்ய புராணம்” என்றொரு இதிகாசம் சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வேதவியாசர் என்ற மாமுனிவரால் எழுதப்பட்டது. இந்தியாவில் எந்த ஆட்சி எவ்வளவு காலம் நிகழும் என்பது பற்றி அச்சுவடிகளில் அப்போதே எதிர்வு கூறப்பட்டுள்ளது. வட திசை நாடுகளிலிருந்து மொகலாயர்கள் படையெடுத்து வந்து இந்தியாவை ஆளப்போவதையும் அதன் பின்னர் ஆங்கிலேயர்கள் வியாபார நோக்கில் வந்து படிப்படியாக முழு நாட்டையும் கைப்பற்றி மக்களை பல வகையாலும் வருத்தி வரிவசூலித்து பல்லாண்டு காலம் ஆட்சி நடத்தப்போவதையும் பற்றி ஏற்கனவே அந் நூற் சுவடிகளில் தீர்க்க தரிசனம் கூறப்பட்டுள்ளது.
“ஸ்வேத துவீபத்திலிருந்து (ஐரோப்பா) கோ (பசு) மாமிசம் சாப்பிடும் மிலேச்சர்கள் (ஆங்கிலேயர்கள்) வந்து, சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள உண்மைகளை மறைத்து மக்களை வேறு பாதையில் இழுத்துச் செல்ல பாரதத்தை ஆட்சி செய்வார்கள். அவர்களுக்கு ஒரு ராணி (விகடாவதி நாம் நே) விக்டோரியா மகராணியென்று பெயர் எட்டுப்பேர் கொண்ட சபையைப் போட்டு ராஜ்ய பரிபாலனம் செய்வார்கள். (பிரிட்டிஷார் எண்மர் கொண்ட Vysroy Executive Council அமைத்து ஆட்சி செய்தது வரலாறு) இவ்விதம் முழுவதும் சுலோகங்களாகவே சொல்லப்படும் அப்புராணத்தில் ஓரிடத்தில் தற்கொலை செய்து கொள்கின்றவனுக்கு உடனடியான தீர்ப்பு கிடையாதெனவும் இயற்கையிலேயே என்று அவன் இறக்க விதிக்கப்பட்டிருந்ததோ, அன்றே அவனது பாவ புண்ணியங்களின் பிரதிபலனாக மறுபிறப்புக்கு உட்படுத்தப்படுவானென்றும் கூறும் சுலோகமொன்றுமுண்டு.
அப்புராணத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் பின்னாளில் நூற்றுக்கு நூறுவீதம் நடந்தேறியுள்ளதை அவதானிக்கும் போது அதனை புராணப்புளுகு என்றும் தள்ளிவிட முடியாது. மகாபாரதமென்ற மகாகாவியத்தை நமக்கு அருளிச் சென்றவரும் இதேவியாசர் தான். அப்படியானால் அதில் வரும் கிருஷ்ணபரமாத்மாவின் அவதாரத்தைக் கூறும் மகாபாகவதமும் பகவத்கீதையும் கூட பொய்யாகி விடுமல்லவா?
ஆனாலும் ஒரு விடயம்; தாயின் வயிற்றிலிருந்து சேயை அகற்றாவிடில் இருவரினதும் உயிருக்கே ஆபத்து ஏற்படலாமென்ற ஓர் இக்கட்டான நிலையில் அறுவை சிகிச்சை மூலம் சிசு வெளிக்கொணரப்படுவது வேறு விடயம். அதற்கும், நாள், நட்சத்திரம், நேரம் பார்த்து சிசேரியன் மூலம் சிசு வெளிக்கொணரப்படுவதற்கும் வித்தியாசமுண்டு. சிசேரியன் சிசுவுக்கு சாதகம் எழுதுவது மாத்திரமே சாஸ்திர விரோதமானதாகக் கொள்ளப்படுகிறது.
எப்படித்தான் கால நிலையை அவதானித்து பிறக்க வைத்தாலும், தலையெழுத்துப்படி எப்போது பிறக்க வேண்டுமென்பது விதியோ அந்தத் திகதிக்குள்ள கிரக
நிலைப்படிதான் வாழ்க்கை நடக்கும். எத்தகைய பலமான கிரக சஞ்சாரத்தை வைத்து பிறப்பை நிச்சயித்தாலும் கடைசியில் இவ்விதமே நடக்கும். பிறக்க வைக்கும் சுபயோக சுப தினத்திற்கும் நடைமுறை வாழ்க்கைக்குமிடையே தொடர்பிராது.
எல்லாமே பொய் மாயம் என்று தோன்றும். ஒரு சிசுவினுடைய உண்மையான பிறப்புக்காலம் எப்போதென்று கண்டுபிடிப்பது சோதிடத்தில் தேர்ந்த ஞானமும் அனுபவமும் உள்ளவர்களுக்கே சாத்தியமானது. அதுவும் அக்குழந்தையானது பிறந்து, வளர்ந்து, வாழ்க்கை நடத்துகிறபோது அதன் இயல்புகளையும் நடவடிக்கைகளையும் சோதனை சாதனைகளையும் வரிசை கிரமமாக அவதானித்தே அவர்களால் கண்டுபிடிக்க முடியும். ஆனாலும் சோதிடம் என்பது பிறப்பின் கிரக நிலைகளை வைத்து வாழ்வின் போக்கை நிர்ணயிப்பதற்கே; எதிர்வு கூறுவதற்கே தவிர பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த பிறகு அவருக்குரிய வாழ்வே இதுதானென்று தீர்மானிப்பதற்கல்ல என்று சோதிட மேதை கோபால சர்மா தமது கட்டுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM