சுதந்திரக் கட்சியின் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகினால் கூட நல்லாட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க நினை த்தால் அது கனவாகத்தான் அமையும். நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட முடியுமாயின் தொடர்ந்து பயணிக்கலாம். இல்லையேல் விலகிச் செல்லலாம் என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சூளுரைத்தனர். நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க் கும் சதித்திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நேரடியாக தலையிட்டுள்ளார். ஆகவே ஆட்சி மாற்றமோ, பிரதமர் மாற்றமோ, கட்சி தாவல்களோ இடம்பெறாது . மேலும் ஜனாதிபதியையும் பிரதமரையும் இந்த ஆட்சியையும் நாம் பாதுகாப்போம் என்றும் குறப்பிட்டனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலர் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட போவதாக அறிவித்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட குறிப்பிடுகையில்,
நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட போவதாக கூறுகின்றனர். இவ்வாறான தகவல்களை ஊடகங்களே வெளியிட்டன. எனினும் எக்காரணம் கொண்டு இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. அதிகாரத்தை மாத்திரம் இலட்சியமாக கொண்ட தோல்வி அடைந்தவர்களே ஆட்சி கவிழ்ப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். எப்படியாவது ஆட்சியை கவிழ்க்கவே முயற்சிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகளை நிறுத்துவதற்காக இவ்வாறான தகவல்கள் வெளிவருகின்றதோ என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் இவ்வாறான அறிவிப்புக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளார். ஆகவே ஆட்சியை கவிழ்க்கும் சதி திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டுள்ளார். இந்த ஆட்சியை கவிழ்க்க முனைவதானது முன்னாள் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட நிலைமையே ஏற்படும். எவ்வாறாயினும் இவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுக்க நாம் தயாராக உள்ளோம். நாம் ஜனாதிபதி, பிரதமர் இருவரையும் பாதுகாப்போம். ஆட்சி கவிழ்கக விடாது பாதுகாப்போம்.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றே ஒரு சில சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரசாங்கத்தில் இருந்து விலகி வந்தவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்தை நினைவு கூருங்கள். பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பேன் என கூறினார். இதனை கூறியே தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுப்பட்டார். ஆகவே ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்க மக்கள் ஆணை உள்ளது. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் நீக்க நினைப்பது கனவாகவே அமையும். ஆகவேஅரசாங்கத்தின் ஒரு மயிரிழையையும் அசைக்க முடியாது. எனினும் சுதந்திரக் கட்சியின் அனைவரினதும் நிலைப்பாடு இதுவல்ல .
அத்துடன் 2015 தேர்தலின் வெற்றி பெற்ற பின்னர் குப்பை மேடு, கடன் சுமை, மாலபே சைட்டம் மருத்துவ கல்லூரி என பல பிரச்சினைகளை நாமே சுமக்க வேண்டி ஏற்பட்டது. இந்த பிரச்சினைகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தோற்றுவிக்கப்பட்டதாகும். எனினும் இதனை நாம் வெற்றிகரமாக முகங்கொடுத்தோம். அத்துடன் சர்வதேச அழுத்ததையும் இல்லாமல் செய்தோம்.
அத்துடன் மக்களின் உடைமைகளை கொள்ளை அடித்தவர்கள் அனைவருக்கும் சட்டப்படி தண்டனை கிடைக்கும். இந்த ஆட்சியில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும். எனினும் அரசியல் ரீதியாக எந்தவொரு தலையீடும் செய்ய மாட்டோம். இதன் பின்னணியில் கும்பல் உள்ளது. மஹிந்த ராஜபக்ஷ இதில் நேரடியாக தலையிட்டுள்ளார். எந்த தொனிப்பொருளை எடுத்தாவது ஆட்சி பீடமேறவே முயற்சிக்கின்றார். அத்துடன் மத விவகாரங்களை கொண்டு நாம் செயற்பட மாட்டோம்.
முஜிபுர் ரஹ்மான்
இது தொடர்பில் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேசரிக்கு குறிப்பிடுகையில்,
நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலக போவதாக சுதந்திரக் கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ளனர். இவ்வாறான கருத்துகளை கூற கூடியவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தான் தற்போது பெரும்பான்மை உள்ளது என்பதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. நாம் நினைத்தால் தனித்தும் ஆட்சி அமைப்போம். எனவே எக்காரணம் கொண்டும் சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் அரசாங்கத்தை விட்டு சென்றமைக்காக ஆட்சி மாற்றம் ஏற்படாது. மேலும் இவர்களுக்கு ரணில் விக்கிரசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து அகற்றவே முடியாது. ஆகவே ஆட்சி மாற்றமோ, பிரதமர் மாற்றமோ, கட்சி தாவல்களோ இடம்பெறாது என்றார்.
சமிந்த விஜேசிறி
இது தொடர்பில் பதுளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குறிப்பிடுகையில்,
நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து எவர் விலகி போனாலும் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. நல்லாட்சி இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட முடியுமாயின் செல்லலாம்.இல்லையேல் விலகி செல்லலாம். குறிப்பிட்ட ஒரு சிலர் போனமைக்காக ஆட்சி மாறாது. சுதந்திரக் கட்சியை சேர்ந்த 18 பேர் போனாலும் மிகுதி 40 பேரை கொண்டு நாம் ஆட்சியை முன்னெடுத்து செல்வோம் என்றார்.
அமைச்சர் நவீன் திசாநாயக்க
இது தொடர்பில் அமைச்சர் நவீன் திசாநாயக்க குறிப்பிடுகையில்,
எந்தவொரு அரசாங்கமானாலும் இரண்டு வருடங்களின் பின்னர் பிரபலம் குறைவடைந்து விடும். மகாவலி திட்டம் உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவின் ஆட்சியில் பிரபல அமைச்சர்கள் இருந்து 1981 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் 52 சதவீத வாக்கே ஜே.ஆர் ஜெயவர்தனவிற்கு கிடைத்தது. ஆகவே அரசாங்கத்தின் பிரபலம் குறைந்தமை குறித்து அலட்டிக்கொள்ள தேவையில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM