உறவினர்களால்   இராணுவத்தினரிடம் நேரடியாக  கையளிக்கப்பட்டவர்களுக்கு    என்ன நடந்தது? : பிரதமரின் கூற்றால் அதிர்ச்சி 

Published By: MD.Lucias

19 Jan, 2016 | 08:03 AM
image

இறுதி யுத்தத்தின்போது வட்டுவாகலிலும், ஓமந்தையிலும் இராணுவத்தின் பகிரங்கமான அறிவிப்பின் பிரகாரம் உறவுகளால் பலர் நேரடியாக கையளிக்கப்பட்டனர். அதற்கான சாட்சியங்களும், ஆதாரங்களும் தற்போதும் உள்ளன. அவ்வாறு கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்து என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது. 

உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பில்லாதவர்கள் தொடர்பிலான விபரங்களை அரசாங்கம் உடன் பகிரங்கப்படுத்த வேண்டுமெனவும் அக்கட்சி  வலியுறுத்தியுள்ளது. 

அதேநேரம் இரகசிய முகாம்கள் காணப்பட்டிருக்கின்றமையும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. வெள்ளைவான் கடத்தல்கள் இடம்பெற்றிருக்கின்றமையும் வெளிப்படையாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த நேரடிச் சாட்சியங்கள் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளில் முன்வைக்கப்பட்டுள்ளன.   அவ்வாறான நிலையில் பிரதமரின் கருத்து அதிர்ச்சியளிப்பதாகவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  குறிப்பிட்டுள்ளது.  

யாழில் நடைபெற்ற  தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமல் போனவர்கள் தொடர்பாக தனது நிலைப்பாட்டை கவலையுடன் தெரிவித்திருந்தார். அதாவது, காணாமல்போனவர்களில் எமது பட்டியலில் காணப்படாதுள்ள  பெரும்பாலானோர் உயிருடன் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. அவர்களுக்கு என்ன நடத்திருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது என பிரதமர் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் இது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு  கூறினார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்த நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்ட காலம் முதல் வலிந்து காணாமலாக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அவ்வாறிருக்கையில் இறுதி யுத்தத்தின் போது 14 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள்;, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என ஒருதொகுதியினர் காணமல்போயுள்ளனர்.  மறுபக்கத்தில் இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் வட்டுவாகல் பாலத்தின் ஊடாக இராணுவத்தின் கட்டுப்பாட்டினுள் பொதுமக்கள் பிரவேசித்தபோது முட்கம்பி வேலிகளுக்குள் நீண்டவரிசையில் தடுத்து வைக்கப்பட்டார்கள்.  

ஒரு மணிநேரம் கூட புலிகளின் அமைப்பில் இருந்தால் எம்மிடம் சரணடையுங்கள். உங்களை விசாரணையின் பின்னர்  மூன்று மாதங்களுக்குள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கின்றோமென இராணுவத்தினர் பகிரங்கமாக அறிவித்தனர். 

இதனையடுத்து அருட்தந்தை ஜோசப் பிரான்சிஸ் முன்னிலையில் ஆயிரக்கணக்கானோர் சரணடைந்தனர். அதுமட்டுமன்றி உறவுகளால் நேரடியாகவே இராணுவத்தினரிடம் பலர் கையளிக்கப்பட்டனர். இதனை விட இராணுவத்தினர் அங்கிருந்த இளைஞர்களை விசாரணை செய்யவேண்டுமெனக் கூறியும் அழைத்துச் சென்றிருந்தனர். ஓமந்தை காவல் நிலையத்தில் வைத்து இளைஞர்கள் வகைப்படுத்தப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். வுனியாவில் அமைக்கப்பட்டிந்த தற்காலிக முகாம்களில் இருதவர்களில் பலரும் விசாரணையின் பேரால்   பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.  அதற்கான ஆதாரங்களும் நேரில் கண்ட சாட்சியங்களும் உள்ளன.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென்பது இன்றுவரையில் தெரியாதுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பில் செயற்பட்டவர்களாக இருந்தாலும் போரியல் சட்டங்களுக்கு அமைவாக  சரணடைந்தவர்களை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர்  குற்றவாளிகளாக காணப்படுவார்களாயின் உள்நாட்டு அல்லது சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவாக தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்விதமான செயற்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் விடுதலைப்புலி உறுப்பினர்களாக இருந்தாலும் கூட சரணடைந்தவர்கள் காணாமலாக்கப்படுவதென்பது போரியல் தர்மத்தை மீறும் செயற்பாடாகும். 

இதேவேளை  கடந்த காலத்தில் உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்களை சமாளித்துக்கொள்வதற்காக கடந்த ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவிடத்தில் இதுவரையில் 23ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5ஆயிரம் முறைப்பாடுகள் இராணுவத்தினரது குடும்பங்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றபோதும் வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்து அதிகளவான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அவ்வாறு முறைப்பாடு செய்தவர்கள்  சாட்சியமளிக்கையில் தமது உறவுகளை யாரிடம் ஒப்படைத்தோம், எவ்வாறான நிலைமையில் காணமல்போனார்கள், தமது உறவுகள் காணமல்போனமை தொடர்பான சம்பவத்துடன் யார் யார் தொடர்புபட்டுள்ளனர் போன்ற தகவல்களை தெளிவாக பதிவு செய்துள்ளார்கள். ஆனால் அவ்வாறான எந்த நபர்கள் மீதும் இதுவரையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. 

நாட்டில் இரகசிய முகாம்கள் காணப்படுகின்றன என்பது எமது கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனால் முதற்தடவையாக பாராளுமன்றில் வெளிப்படுத்தப்பட்டது. அது தொடர்பிலான விசாரணைகளை  மேற்கொள்வதாயின் மற்றும் சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுமாயின் அவற்றை வெளியிடத் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். அதன்பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா.  குழுவினர் இரகசிய முகாம்கள் காணப்பட்டிருந்மையை உறுதிப்படுத்தியிருந்தனர். அதேபோன்று இரகசிய முகாம்களிலிருந்து வெளியேறிவந்தவர்கள்  சிலரும் காணப்படுகின்றனர். எனினும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளால் அவர்கள் இரகசிய முகாம்கள் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்கு அச்சமடைந்துள்ளனர். அதேநேரம் இரகசிய முகாம்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை செய்யவேண்டிய அரசாங்கம் அது தொடர்பிலான எவ்வித விசாரணைகளையும்  முன்னெடுக்கவில்லை.

மேலும் வெள்ளைவான் சம்பவங்கள் தொடர்பான பல முறைப்பாடுகள் காணப்படுகின்றன. கடந்த அரசாங்கத்துடன் இணைந்து அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டவர்கள் மற்றும் அத்தகைய சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களின் விபரங்களையும் பொதுமக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர். மேலும் பல சான்றுகள் அவர்களிடத்தில் காணப்படுகின்றன. இவ்வாறிருக்கின்ற நிலையிலேயே ஜனநாயகத்தை நிலைநிறுத்தி நல்லாட்சியை நிலைநாட்டுவதை இலக்காக கொண்டிருக்கும் புதிய அரசாங்கம் காணாமலாக்கப்பட்டவர்களில் பெருமளவானோர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லையென அறிவித்திருக்கின்றது. 

இந்த அறிப்பானது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவுள்ளது. விசேடமாக தமது உறவுகள் காணாமலாக்கப்பட்டமைக்கு காரணமானவர்களை அடையாளப்படுத்துமளவிற்கு உறவினர்களிடம் ஆதரங்களும், சாட்சியங்களும் காணப்படும் நிலையில் அவர்கள் உயிருடன் இல்லையென கூறுவது எந்தவகையில் நியாயமாகும்.? அவ்வாறு அவர்கள் உயிருடன் இல்லையென்றால் அவர்களுக்கு என்ன நடந்தது, அதற்கு யார் காரணம் என்பதை அறிவிக்க வேண்டும். உரிய தண்டனைகள் வழங்கப்படவேண்டும். சர்வதேச நியமங்களுக்கு அமைவாக உரிய இழப்பீடுகள் வழங்கப்படவேண்டும். அதனைவிடுத்து எடுத்த எடுப்பிலேயே உயிருடன் இல்லையென அறிவிப்பதானது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளை முழுமையாக பாதிப்பதுடன் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனத்தையே வலுப்படுத்துவதாக அமையும். ஆகவே இவ்விடயத்தில் வெளிப்படைத்தன்மையுடனான பகிரங்க விசாரணை அவசியம். 

அதேநேரம் தற்போது காணமல்போனோரில் பெருமளவானோர் உயிருடனில்லையென்ற அறிவிப்பின் பிரகாரம் ஒரு தொகையினர் உயிருடன் இருக்கின்றனரா என்ற கேள்வியொன்று காணப்படுகின்றது. ஆகவே உயிருடன் இருப்பவர்கள் யார் அவர்கள் எங்குள்ளனர். உயிரழந்தவர்கள் யார் போன்ற விபரங்களை உடனடியாக பகிரங்கப்படுத்தபடவேண்டும் என்றார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04