இறுதி யுத்தத்தில் போர்க்குற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை. இராணுவம் மீது குற்றம் சுமத்தும் நபர்கள் யுத்த காலகட்டத்தில் நாட்டில் இருந்தனரா? குற்றங்களை கண்களினால் பார்த்தார்களா? என புதிய இராணுவ தளபதியாக பதவியேற்றுள்ள இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க கேள்வி எழுப்பினார்.
எல்லா விசாரணைகளுக்கும் முகங்கொடுக்க நாம் தயார். இராணுவம் முழுமையாக விசாரணைக்கு ஒத்துழைப்புகளை வழங்கியும் வருகின்றது. எவரேனும் யுத்த குற்றங்களை மேற்கொண்டு இருப்பின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் உறுதியாக கூறுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க இலங்கையின் 22 ஆவது இராணுவத் தளபதியாக பொறுப்புக்களை ஏற்கும் நிகழ்வு இராணுவ தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் ஊடகவியலாளர்களை சந்தித்த இராணுவ தளபதியிடம் வினவிய கேள்விகளுக்கே மேற்கண்டவாறு பதில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதானது,
என்மேல் நம்பிக்கை வைத்து ஜனாதிபதி என்னை நியமித்துள்ளார். அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன். அதேபோல் இராணுவத்தினர். இராணுவ அதிகாரிகள் அனைவரையும் இணைத்துக்கொண்டு எனது பயணத்தை நாம் முன்னெடுத்து செல்வேன்.
கேள்வி:- இராணுவத்தினர் மீது தொடர்ச்சியாக போர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதிய இராணுவ தளபதியாக எவ்வாறு நீங்கள் இந்த குற்றச்சாட்டுகளை கையாளவுள்ளீர்கள்?
பதில்:- இராணுவத்தின் ஒழுக்கமே இராணுவத்தின் பலமாகும். அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் இல்லாவிட்டால் இராணுவமும் இல்லை. வெறுமனே சீருடைக்குள் மாத்திரம் இராணுவத்தை அடையாளப்படுத்த முடியாது. யுத்தக் குற்றச்சாட்டுகளை எம்மீது முன்வைக்கும் நபர்கள் உண்மையில் யுத்த காலகட்டத்தில் நாட்டில் இருந்தனரா? குற்றங்களை கண்களினால் பார்த்தார்களா? என்பதில் சந்தேகம் உள்ளது. எனினும் இராணுவம் போர்க்குற்றங்களை செய்யவில்லை என என்னால் உறுதியாக கூறமுடியும். குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.எல்லா விசாரணைகளுக்கும் முகங்கொடுக்க நாம் தயார். அவை தொடர்பில் இராணுவம் முழுமையாக விசாரணைக்கு ஒத்துழைப்புகளை வழங்கியும் வருகின்றது. எவரேனும் யுத்த குற்றங்களை மேற்கொண்டு இருப்பின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடும். இராணுவம் குற்றத்தை செய்துவிட்டு தப்பிக்க முடியாது என்பதை நான் உறுதியாக கூறுகின்றேன்.
கேள்வி:- நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்ற குற்றங்களில் இராணுவ வீரர்கள் தொடர்பு பட்டுள்ளனர். அவ்வாறு இருக்கையில் இவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும்?
பதில்:- இலங்கையில் இரண்டு இலட்சம் இராணுவ வீரர்கள உள்ளனர். அவர்களில் ஒரு சிறிய அளவில் குற்றவாளிகளும் இருக்க வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை அடையாளபடுத்தும் போதும் முன்னாள் இராணுவ வீரர், ஓய்வுபெற்ற இராணுவத்தினர் என கூறுகின்றனர். ஆனால் வேறு ஒருவர் அல்லது ஒரு அதிகாரி குற்றம் செய்தால் குற்றவாளியென அடையாளபடுத்துகின்றனர். ஆகவே இராணுவம் என்றால் மாத்திரமே விசேடமாக அடையாளபடுத்தப்படுகின்றது. எனினும் குற்றவாளிகளுக்கு இராணுவ சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கபடும்.
கேள்வி:- வடக்கில் பொதுமக்களின் காணிகள் இராணுவத்தின் வசம் உள்ளதென தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது, அதேபோல் வடக்கின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது, அதேபோல் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என வடக்கின் அரசியல் வாதிகள் கூறுகின்றனர், இந்நிலையில் இராணுவம் எவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்போகின்றது?
பதில்:- நான் 14 மாதங்களாக யாழ் கட்டளை தளபதியாக கடமையாற்றிய பின்னர் தான் இராணுவ தளபதியாக கடமை ஏற்றுள்ளேன். நான் வடக்கில் இருந்த காலத்தில் சரியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். மேலும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்று எட்டு ஆண்டுகள் ஆகின்றன. வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களும் எமது நாட்டின் மக்கள். ஆகவே மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தர வேண்டியது அரசாங்கத்தினதும், இராணுவத்தினதும் கடமையாகும். வடக்கில் பொதுமக்களின் நிலங்களை இராணுவம் கைப்பற்றி இருக்கும் என்றால் அது யுத்த காலத்தில் மற்றும் யுத்தத்தின் பின்னரான நெருக்கடி காலத்தில் மாத்திரமேயாகும். ஆனால் இன்று நிலைமைகள் அவ்வாறு அல்ல, வடக்கில் என்ன நடக்கின்றது என்பது எமக்கு நன்றாக தெரியும். ஆகவே வடக்கில் கட்டாயமாக இராணுவத்தின் வசம் இருக்கவேண்டிய மற்றும் பாதுகாக்க வேண்டிய இடங்களை தவிர ஏனைய இடங்களை மக்களுக்கு வழங்கப்படுவது நியாயமான காரணியாகவே கருதுகின்றோம். இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசியல் வாதிகள் மேடைகளில் பேசுவதில் அர்த்தம் இல்லை. விடயப்பரப்பு எமக்கு மாத்திரமே தெரியும்.
கேள்வி:- நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ. எஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல் எச்சரிக்கை உள்ளதாக கடந்த வாரம் பிரதான ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளனவா?
பதில்:- இது குறித்து பாதுகாப்பு செயலாளரும் எமக்கு தெரிவித்தார். ஆனால் உறுதியான அறிக்கை ஒன்று எமக்கு கிடைக்கப்பெறவில்லை. ஆனால் ஒருசில அமைப்புகள் தமது இருப்பை தக்கவைக்க இவ்வாறான கருத்துக்களை முன்வைக்கவும் முடியும். அவ்வாறான ஒன்று இருக்குமாயின் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் தான் உள்ளனர். நாம் ஆராய்ந்து தான் வருகின்றோம். புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றனர்.
கேள்வி:- யுத்த குற்றம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் இராணுவத்தினுள் உள்ளக விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது?
பதில்:- யுத்த குற்றம் தொடர்பில் எவ்வாறு உள்ளக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, எத்தனை பேரை விசாரிக்கின்றனர் என்பதை நாம் ஆராய்ந்தே கூற வேண்டும். ஆனால் குற்றங்கள் தொடர்பில் இராணுவ விசாரணைகள் எப்போதும் இடம்பெறும். எமது கடமையை நாம் சரியாக நிறைவேற்ற வேண்டும். அதில் உறுதியாக உள்ளோம்.
கேள்வி:- சரத் பொன்சேகாவின் பின்னர் எந்தவொரு இராணுவ தளபதியாலும் இலங்கையின் இராணுவம் குற்றம் இழக்கவில்லை என்பதை வெளிப்படையாக கூறமுடியாது போயுள்ளது . இன்றும் இராணுவ வீரர்களுக்கு சர்வதேச நாடுகள் தடை விதித்துள்ளது, எமது இராணுவத்தை தண்டிக்கும் நடவைக்கை நிறைவேற்றப்பட்டு வருகினது, நீங்கள் எவ்வாறு இதை கையாளவுள்ளீர்கள்?
பதில்:- அதை நானும் ஏற்றுக்கொள்கின்றேன், எமது நிலைப்பாட்டை நாம் தெளிவாக முன்வைக்கவில்லை, குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாம் முன்வைக்கும் அறிக்கைகள், தவகல்கள் எவையும் உறுதியானதாக அமையவில்லை. அதில் குறைபாடுகள் இருக்கும் என்றால் எனது தலைமையில் இதில் மாற்றம் காணும். யுத்த காலத்தில் எமது இலக்கு யுத்தத்தை முடிக்க வேண்டும் என்பது மட்டுமேயாகும். அப்போதில் இருந்து மாற்று வழிமுறைகள் சரியாக முன்னெடுக்கப்படவில்லை. அப்போது சரி செய்ய வேண்டிய ஒரு காரியத்தை இப்போது செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஆகவே குறிகிய காலத்தில் இதற்கான தீர்வை காணவேண்டும். அதை நாம் முன்னெடுப்போம்.
கேள்வி:- ஊடகவியலாளர் தாக்குதல், ரதுபஸ்வல சம்பவங்களில் இராணுவமாக தனிச்சையாக செயற்பட வாய்ப்பில்லை, எனவே அரசியல் தூண்டுதல் உள்ளது என்பது இருக்க வேண்டும் என கருதுகின்றீர்களா?
பதில்:- உண்மையில் தவறுதலாக வழிநடத்தப்பட்டிருப்பின் அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும். உரிய இராணுவ வீரர் உண்மைகளை எம்மிடம் கூறவேண்டும். இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றது. விசாரணை செய்பவர் உண்மைகளை கண்டறிய வேண்டும். எனினும் எம்மால் உறுதியாக அதை கூற முடியாது. இவை நீதிமன்ற விசாரணைகளில் உள்ளது. எனினும் குற்றம் செய்திருந்தால் சட்டத்தின் மூலம் தண்டிக்கபட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM