கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகள் அனைத்தும் எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க மாநகர மற்றும் நகர சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதனை அதிகாரிகள் நடைமுறைப்படுத்த தவறும் பட்சத்தில் பாராளுமன்ற அனுமதி பெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவ்வதிகாரிகள் பதவி நீக்கப்படுவர் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார். கொழும்பு நகரத்தில் எழுந்துள்ள குப்பை பிரச்சினைக்கு உடனடி தீர்வினை முன்வைக்கும் நோக்கில் நேற்று செவ்வாய்க்கிழமை மேல்மாகாணத்திற்கு பொறுப்பான மாநகரசபை மற்றும் நகர சபை அதிகாரிகளுடன் விசேட சந்திப்பொன்று கொழும்பு மாநகரசபை கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது எழுந்துள்ள குப்பை பிரச்சினை காரணமாக மேல்மாகாணத்தில் பாரியளவில் சுகாதார சீர்கேடு வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக டெங்கு உள்ளிட்ட நோய்களால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
ஆகவே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள் அனைத்தையும் முழுமையாக அகற்றுவதற்கு மாநகர சபை மற்றும் நகர சபை அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மீதொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தத்தின் பின்னர் குப்பை இடுவதற்கானதொரு இடம் கண்டறியப்பட்டு வழங்கப்படாமையின் காரணமாகவே கொழும்பு நகரம் உள்ளிட்ட பிரதான நகரங்களின் வீதிகளில் பாரியளவில் குப்பைகள் சட்டவிரோதமாக கொட்டப்பட்டன.
ஆகவே இதற்கான தீர்வாக தற்போது கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் முத்துராஜவெலைக்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படும். அத்துடன் குறித்த பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கு ஏற்றவகையில் சேகரிக்கப்படும் குப்பைகள் முழுமையாக வகைப்பிரித்தே மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும்.
மேலும் முத்துராஜவெலை பகுதியில் குப்பை கொட்டுவதற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்பதுடன் குறித்த பகுதியில் கட்டணமின்றி குப்பைகளை கொட்டுவதற்கும் அனுமதியளிக்கப்படமாட்டாது. அந்தவகையில் வகைப்பிரித்து கொட்டப்படும் குப்பைகளுக்கு குறைந்த கட்டணமும் வகைப்பிரித்து வழங்கப்படாத குப்பைகளுக்கு அதிகளவான கட்டணமும் அறவிடப்படும்.
இதற்கமைவாக நகரப்புற பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும் குப்பை வண்டிகள் அதிகாலை 4 மணிமுதல் 6.30 வரையான காலப்பகுதிக்குள் நகரத்தில் உள்ள குப்பைகளை முழுமையாக அகற்றியிருக்கவேண்டும். அத்துடன் குறித்த குப்பை வண்டிகள் எந்த பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கின்றன என்பது தொடர்பிலான ஆவணங்கள் அனைத்தும் அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் குறித்த குப்பை வண்டிகளுக்கு விரைவில் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தினை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது எழுந்துள்ள குப்பை பிரச்சினையை எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் முடிவுக்கு கொண்டு வருவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இதனை கருத்திற்கொள்ளாது செயற்படும் அரச அதிகாரிகள் பாராளுமன்ற அனுமதி பெற்ற மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்படுவர்.
அத்துடன் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ள பகுதிகளை உடனடியாக மாநகர சபைக்கு அறிவிக்கவேண்டும். மக்கள் தாம் வழங்கும் குப்பைகளை வகைப்பிரித்து குப்பை வண்டிகளுக்கு வழங்கவேண்டும் என்றார்.
மேலும் சட்ட விரோதமான முறையில் வீதிகளில் குப்பைகள் கொட்டுபவர்களை கைது செய்வதற்கும் நகர்ப்புறங்களில் விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள பொலிஸாருக்கும், இராணுவத்தின் உயரதிகாரிகளுக்கும் இதன்போது பணிப்புரை விடுத்தார்.
இச்சந்திப்பில் அமைச்சர் மனோ கணேசனின் வேண்டுகோளுக்கு இணங்க மேல்மாகாண சபை உறுப்பினர் கே.ரி. குருசாமியும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM