இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொச்சின் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள விழிப்புலனற்றோருக்கான முதலாவது ஆசிய கிண்ண இருபது 20 கிரிக்கட் போட்டியில் சம்பியனாக முடியும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை விழிப்புலனற்றோர் அணியினர் இங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் விழிப்புலனற்றோர் அணிகள் பங்குபற்றும் முதலாவது விழிப்புலனற்றோர் ஆசிய கிண்ண இருபது 20 கிரிக்கட் போட்டிகள் நாளைமுதல் 24ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன.
தென் ஆபிரிக்காவில் 2012இல் நடைபெற்ற விழிப்புலனற்றோருக்கான 40 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டி, இந்தியாவில் 2014இல் நடைபெற்ற விழிப்புலனற்றோருக்கான இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டி ஆகியவற்றில் இலங்கை விழிப்புலனற்றோர் அணியினர் மூன்றாம் இடங்களைப் பெற்றிருந்தனர்.
இம்முறை முதல் தடவையாக நடைபெறவுள்ள விழிப்புலனற்றோருக்கான ஆசிய கிண்ண இருபது 20 கிரிக்கட் போட்டியில் ‘சிங்கங்கள்’ என்பதை நிரூபிக்க இலங்கை விழிப்புலனற்றோர் அணியினர் முயற்சிக்கவேண்டும் என விழிப்புலனற்றோர் அணியினரை வழியனுப்பிவைக்கும் நிகழ்வின்போது விழிப்புலனற்றோருக்கான இலங்கை கிரிக்கட் சங்கத் தலைவர் நோபர்ட் சில்வா தெரிவித்தார்.
இந் நிகழ்வு கொம்பனித் தெருவில் அமைந்துள்ள விழிப்புலனற்றோர் சங்க தலைமையகத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
இப் போட்டிகளில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் வெற்றிகொள்ள முடியும் என்ற மன உறுதியுடன் வீரர்கள் விளையாட வேண்டும் எனவும் இந்திய அணியினரின் போட்டி வியூகங்களை அறிந்துகொண்டு அதற்கேற்ற வியூகங்களை அமைத்து விளையாடி வெற்றிபெறவேண்டும் எனவும் அவர் கூறினார்.
‘‘விழிப்புலனற்றோருக்கான இவ் விளையாட்டை முன்னேற்றுவதற்கு நிருவாகிகளால் ஒருபோதும் முடியாது. வீரர்களினால்தான் முடியும். அவர்களின் ஆற்றல் வெளிப்பாடுகளிலேயே முன்னேற்றம் தங்கியிருக்கின்றது. எனவே இப் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி வெற்றிவாகை சூடி ஆசிய கிண்ணத்துடன் வீரர்கள் தாயகம் திரும்பவேண்டும்’’ என நோபர்ட் சில்வா தெரிவித்தார்.
இலங்கை விழிப்புலனற்றோர் அணிக்கு ரீகஸ் லங்கா நிறுவனத்தினர் சீருடை வழங்கி உதவியுள்ளனர். இந்த சீருடைகளை ரீகஸ் லங்கா நிறுவனப் பணிப்பாளர் நிர்மல் டி சில்வா அண்மையில் வழங்கிவைத்தார். நற்குண அமைப்பின் ஸ்தாபர்களில் ஒருவரான குஷில் குணசேகரவும் நிதி உதவி வழங்கியுள்ளார்.
அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சும் விழிப்புலனற்றோருக்கு தேவையான சகல உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வருவதுடன் போக்குவரத்து செலவனங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனையிட்டு விளைாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு விழிப்புலனற்றோருக்கான இலங்கை கிரிக்கட் சங்கத் தலைவர் நோபர்ட் சில்வா நன்றிகளைத் தெரிவித்தார்.
சுகதேகிகள் விளையாடிவரும் கிரிக்கட் இலங்கையில் பிரபல்யம் பெற்றுள்ளபோதிலும் விழிப்புலனற்றோரின் கிரிக்கட் பற்றி பெரும்பாலானவர்கள் அறியாதிருப்பது வேதனைக்குரியதாகும். முயற்சியே இல்லாமல் வெறுமனே சோம்பேறிகளாகத் திறியும் பல சுகதேகிகள் மத்தியில் தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற துணிச்சலுடன் விளையாட்டுத்துறை உட்பட பல்வேறு விடயங்களில் ஈடுபட்டுவரும் மாற்றுத்திறனாளிகள் ஊக்குவிக்கப்படுவது மிகவும் அவசியமாகும்.
விழிப்புலனற்ற இலங்கை கிரிக்கட் வீரர்கள் உலக விழிப்புலனற்றோர் கிரிக்கட் போட்டிகளில் இரண்டு தடவைகள் மூன்றாம் இடத்தைப் பெற்று தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
தங்களுக்கென்று தனியான புல்தரை ஆடுகளம் இல்லாததும் நிரந்தர அனுசரணையாளர் இல்லாததும் பெருங்குறையாக இருந்துவருகின்றது என நோபர்ட் சில்வா சுட்டிக்காட்டினார். இந்த வசதிகள் யாவும் செய்துகொடுக்கப்பட்டால் விழிப்புலனற்றோர் இதைவிட சிறந்த பெறுபேறுகளுடன் இலங்கைக்கு புகழீட்டிக்கொடுப்பர் என்றார் அவர்.
விழிப்புலனற்றோர் குழாம்
சந்தன தேஷப்பிரியவை அணித் தலைவராகக் கொண்ட இலங்கை விழிப்புலனற்றோர் கிரிக்கட் குழாமில் இரண்டு புதுமுகங்கள் இணைத்துக்கொள்ளப்பட்டள்ளனர். ஏனையவர்கள் கடந்த சில வருடங்களாக இலங்கை விழிப்புலனற்றோர் அணியில் தொடர்ந்து விளையாடி வரும் அனுபவசாலிகள்.
விழிப்புலனற்றோர் அணியினர் களம் இறங்கும்போது அவ்வணியில் அறுவர் முழு அளவில் பார்வையற்றவர்களாக இருக்க வேண்டும். மற்றையவர்கள் குறைபார்வை உடையவர்களாக இருக்கவேண்டும் என்பது விழிப்புலனற்றோர் கிரிக்கட் விதிகளாகும். இவர்களுக்கென்று மணி ஓசை எழுப்பும் பந்து போட்டிகளின்போது பயன்படுத்தப்படுகின்றது.
குழாமில் இடம்பெறும் வீரர்கள் வருமாறு:
சந்தன தேஷப்பிரிய (அணித் தலைவர்), டி. ரவீந்த்ர (உதவி அணித் தலைவர்), சமன் குமார, டி. சமிந்த, சமிந்த புஷ்பகுமார, கோசல ஹேரத், கே. டி. ஆர். ஜயரத்ன, உப்புல் சஞ்சீவ, ருவன் வசன்த, கெலும் லக்மால், நுவன்த சுதெஷ், சந்தன குமார சூரியஆராச்சி, தினேஷ் மத்துகம, கல்யாண குமார, சுரங்க சம்பத், ருவன் கருணாதிலக்க, திமுத்து பெரேரா. பயிற்றுநர்: வை. ஜீ. சுமனவீர, முகாமையாளர்: லக் ஷான் தேவப்ரிய, மத்தியஸ்தர்: ரவி பெரேரா. - –டோனி விக்டர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM