முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத் தரப்பினரும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலோடு உருவாக்கப்பட்ட இன்றைய அரசாங்கம் முஸ்லிம்களின் ஆதரவுடன் ஆட்சி பீடம் ஏறியது. முஸ்லிம் அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரிப்பதற்கு வரிந்து கட்டிக் கொண்டு நின்றார்கள்.
ஆனால், முஸ்லிம் சமூகம் மஹிந்தவிற்கு எதிரான முடிவினை எடுத்தது. தங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனரீதியான அநியாங்களுக்கு நியாயமும், முடிவும் கிடைக்க வேண்டுமென்பதற்காகவே இன்றைய அரசாங்கம் உருவாவதற்கு வாக்களித்தார்கள். இன்றைய ஆட்சியாளர்களும் தேர்தல் காலத்தில் முஸ்லிம்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரப்படும். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுப்படுத்தப்படும். குற்றவாளிகள் கூண்டில் அடைக்கப்படுவார்கள் என்றெல்லாம் வாக்குறுதிகளை அளித்தனர். முஸ்லிம்களும் நமது கஷ்டமெல்லாம் நீங்கப் போகின்றதென நம்பினார்கள். ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. அரசாங்கம் முஸ்லிம்களிடம் நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்துக் கொண்டே இனவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணிக் கொண்டும், பகிரங்கமாக முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட வன்முறை
யாளர்களை கைது செய்யாதும் உள்ளது. அரசாங்கம் முஸ்லிம்களுக்கும், இனவாத அமைப்புக்களுக்கும் நல்லவர் போல் நடித்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் அரசியல் தலைவர்களில் பலர் அரசாங்கத்தின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்றைய ஆட்சி ஏற்படுவதற்கு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும் ஒரு காரணமாகும். குறிப்பாக அளுத்கம, பேருவளை, தர்கா நகர் பிரதேசங்களில் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பௌத்த இனவாதிகளின் வழி காட்டல்களினால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்களிடம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தாக்குதலுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள் கைது செய்யப்பட வேண்டுமென்று மஹிந்தவின் அரசாங்கத்தை முஸ்லிம்கள் கேட்டுக் கொண்ட போதிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தாக்குதல்தாரிகள் என்று முஸ்லிம்களினால் அடையாளங் காட்டப்பட்டவர்கள் பகிரங்கமாகவும், சுதந்திரமாகவும் நடமாடினார்கள். அன்றைய ஆட்சியாளர்கள் இனவாத அமைப்புக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாமலும் , அந்த அமைப்புக்களின் பிரதிநிதிகளை கைது செய்யாமலும் இருந்தார்கள். அதே வேளை, அவர்களுடன் நெருக்கமான உறவுகளையும் கொண்டிருந்தார்கள்.
மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடிப்பதுதான் முஸ்லிம்களின் நிம்மதிக்கான ஒரே வழி என்று முஸ்லிம்கள் முடிவு செய்தார்கள். இந்த முயற்சியில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால், முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களுக்கு அடிப்படைக் காரணம் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சிதைவடையச் செய்வதாகும். இதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவில்லை. தமது வர்த்தகத்தை பாதுகாத்துக் கொள்வதில் முஸ்லிம்கள் தோல்வி கண்டுள்ளார்கள். இதற்கான திட்டங்களை முஸ்லிம் அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், புத்திஜீவிகள் வகுக்கவில்லை.
முஸ்லிம்களின் வர்த்தகத்தை சிதைவடையச் செய்ய வேண்டுமென்ற திட்டத்துடன் செயற்பட்ட இனவாத அமைப்புக்களை தமது அரசியல் தேவைக்காக மஹிந்த ராஜபக் ஷ பயன்படுத்திக் கொண்டார். இந்த அமைப்புக்களின் உறவு அவரின் அரசியல் தேவையை ஆரம்பத்தில் பூர்த்தி செய்து கொடுத்தது. இதனால் இந்த அமைப்புக்களினூடான தொடர்புகளை அவர் இறுக்கமாக்கிக் கொண்டார். ஆனால், ஈற்றில் அவரின் தோல்விக்கும் இனவாத அமைப்புக்களே காரணமாகவும் இருந்தன.
முஸ்லிம்களின் பொருளாதாரத்தினை சிதைக்க வேண்டுமென்பது இன்று நேற்று தொடங்கப்பட்டதல்ல. மன்னர்கள் காலத்தில் முஸ்லிம்கள் வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறந்தார்கள். எனவே முஸ்லிம்களின் வர்த்தகத்தை தமதாக்கிக் கொள்வதற்காக போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோர் முஸ்லிம்களின் வர்த்தகத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தினார்கள்.
சுதந்திர இலங்கைக்கு முன்னர் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சிதைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு அன்றைய முஸ்லிம்கள் திட்டங்களைத் தீட்டி செயற்பட்டார்கள். இதற்கான வழிகாட்டுதல்களை அன்றைய முஸ்லிம் தலைவர்கள் மேற்கொண்டார்கள். ஆனால், இன்றைய தலைவர்கள் முஸ்லிம்களின் வர்த்தகத்தினை பாதுகாத்துக் கொள்வதற்குரிய திட்டங்களை வகுத்துக் கொள்வதற்கும், அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதற்கும் முடியாத நிலையில் உள்ளார்கள்.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு அளுத்கம, பேருவளை, தர்காநகர் முஸ்லிம்களின் மீது இனவாத கும்பல்களின் தாக்குதல்களும் ஒரு காரணமாகும் எனக் கண்டோம். இத்தாக்குதல் நடைபெற்று மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இத்தாக்குதலுக்கு மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம்தான் காரணமென்று இன்று வரைக்கும் இன்றைய ஆட்சியாளர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இதுவரைக்கும் இத்தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்படவில்லை.
அது மட்டுமல்லாது முஸ்லிம் விரோத செயற்பாட்டாளர்களின் மீது சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் காலதாமதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். கடும்போக்குவாதிகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று மஹிந்த ராஜபக் ஷ செயற்பட்டதனை போன்றே இன்றைய ஆட்சியாளர்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு ஒரு முகமும், கடும்போக்குவாதிகளுக்கு ஒரு முகமும் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
அளுத்கம சம்பவம் நடைபெற்று மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ள போதிலும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென்று அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்காதுள்ளமையையும் முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதே வேளை, சிங்கள அரசியல்வாதிகள் ஒரே விதமான கொள்கைகளையே கொண்டுள்ளார்கள். கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் இன்று மௌனமாக இருக்கின்றார்கள்.
கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்ற போது மௌனமாக இருந்தவர்கள் இன்று குரல் கொடுக்கின்றார்கள்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தாது போனால் யுத்தத்தை விட பாரிய விளைவுகள் ஏற்படும் என்று லங்கா சமசமாஜ தலைவரும், முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட கலகொட அத்த ஞானசார தேரர் பொலிஸாரினால் தேடப்படுகின்றார். இவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணையும் பிறப்பித்துள்ளது. இவரை அரசாங்கம்தான் பாதுகாத்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. இரண்டு அமைச்சர்கள் தமது பாதுகாப்பில் ஞானசார தேரரை வைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இதே வேளை, இவரை மஹிந்தராஜபக்ஷதான் பாதுகாத்து வைத்துள்ளார் என்றும் தெரிவிக்கின்றார்கள். இக்குற்றச்சாட்டுக்களில் உள்ள உண்மைகளை விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது. ஆயினும், ஞானசார தேரர் அதிகாரத் தரப்பினரின் பாதுகாப்பில்தான் உள்ளார் என்பது தெளிவாகும்.
பொதுபல சேனா அமைப்பினரின் அறிக்கைகள், கருத்துக்களின் மூலம் அவர் எங்கே உள்ளார் என்பது அவர்களுக்கு தெரியும். அவர் ஒரு போதும் சரணடையமாட்டார் என்று பொது பல சேனாவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால், இவ்வாறு கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கும் பொது பல சேனாவின் ஆட்கள் விசாரணைக்கு உட்படுத்தவில்லை. இதன் மூலமாக ஞானசார தேரரின் கைது திட்டமிடப்பட்டவாறு தாமதப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகின்றது.
இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் மூலமாக கடந்த அரசாங்கத்திற்கும் இன்றைய அரசாங்கத்திற்குமிடையே எந்த வித்தியாசத்தையும் காண முடியாதுள்ளது. முஸ்லிம்கள் அரசாங்கத்தை வெறுத்தாலும் கடும்போக்கு இனவாத அமைப்புக்களையும், அவற்றின் செயற்பாட்டாளர்களையும் அரசாங்கம் பகைத்துக் கொள்வதற்கு விரும்பவில்லை. கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்து முஸ்லிம் விரோத செயற்பாட்டாளர்களை பாதுகாத்ததைப் போன்று இன்றைய ஆட்சியிலும் அவர்கள் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கம் முஸ்லிம்களுக்க அநியாயம் நடந்து கொண்டிருக்கும் நிலையிலும் முஸ்லிம் அரசியல் தலைவர்களினதும், முஸ்லிம்களினதும் ஆதரவை எதிர்பார்ப்பதும், அதனை அங்கிகரிக்கும் வகையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது செயற்பாடுகளைக் கொண்டிருப்பதும் கவனத்திற்குரியதாகும்.
முஸ்லிம்களின் பொருளாதராத்தையும், இருப்பையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் போக்குகளில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். தலைவர்கள் எனப்படுபவர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். இஸ்லாம் தலைவர்களுக்குரிய பண்புகளை குறிப்பிட்டுள்ளது. அவற்றில் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டுமென்று தெரிவித்தால் நாங்கள் பெரிய கட்சி சிறிய கட்சிகளுடன் இணைய முடியாதென்று பெருமை பாராட்டுகின்றார்கள். பெரிய கட்சியாக இருந்து முஸ்லிம் சமூகத்திற்கு எதனைப் பெற்றுக் கொடுத்துள்ளீர்கள் என்று கேட்டால் தலையை சொறிகின்றார்கள்.
தேசியப் பட்டியல், பிரதேசவாதம், அமைச்சர் பதவிகள், பணம், கொந்தராத்து, பொறாமை போன்ற முடிச்சுக்களினால் முஸ்லிம்களின் அரசியல் இறுக்கப்பட்டுள்ளது. இந்த முடிச்சுக்களை அவிழ்க்க வேண்டும். அஸ்ரப்பை போன்ற நெஞ்சுரம் கொண்டவர் முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். முஸ்லிம்களிடம் பல கட்சிகள் இருப்பதும், செல்வாக்குப் பெற்றுள்ள கட்சி பலவீனமடைந்து கொண்டு செல்வதும், முஸ்லிம் கட்சிகள் உள்வீட்டுப் பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டிருப்பதும், அரசாங்கம் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராமுகமாக இருந்து கொண்டிருப்பதற்கு காரணமாகும். அரசாங்கம் முஸ்லிம்களுக்கு இரட்டை முகங் காட்டிக் கொண்டிருப்பதனைப் போல மேற்படி குறைகளைக் கொண்டுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு முகமும், அரசாங்கத்திற்கு ஒரு முகமும் காட்டிக் கொண்டு இரட்டை வேடம் போட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM