வடக்கு, கிழக்கு பகுதியில் பிரபாகரனின் காலத்தில் தற்கொலை குண்டுதாரிகள் உருவாகும் வகையிலான சிந்தனைகள் மக்களிடத்தில் விதைக்கப்பட்டிருந்தன. எனவே குறுகிய காலத்தில் அந்த சிந்தனைகள் மறைந்துவிடும் என்று கருதி செயற்படுவதானது பாரதூரமான நிலைமையாகும் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் நகரம் போன்று ஒருவரிடத்திலிருந்து மற்றைய இடத்திலிருப்பவர்களை கண்காணிக்கும் பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றி வந்தமையினாலும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தேசிய பாதுகாப்பின் பிரகாரமான செயற்பாடுகளாலும் எமது காலத்தில் பொதுமக்களின் வாழ்க்கையில் எந்த வித நெருக்கடிகளும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கேள்வி: யுத்தம் முடிந்து 8 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளமை தொடர்பில்?
பதில்: இன்று நாட்டில் சகலரும் சுதந்திரமான வாழ்க்கையை ஆரம்பித்து 8 வருடங்கள் ஆகின்றன. நாட்டில் வவுனியாவிற்கு அப்பால் உள்ள இடங்கள், கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட எந்த ஒரு பகுதிக்கும் செல்ல முடியாத ஒரு காலம் இருந்தது. நாட்டின் தலைவர்களுக்கு கூட நாட்டில் செல்ல முடியாதிருந்த அந்த பாராதூரமான நிலைமை இன்று இல்லை என்று நினைக்கின்ற போது மகிழ்ச்சியாக உள்ளது.
கேள்வி: மஹிந்த ராஜபக் ஷ கூட்டு எதிரணிக்கு சென்ற காலத்திலிருந்து நாட்டின் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பு வலுக் குன்றியுள்ளதாக எதிரணி குற்றம் சாட்டுகின்றது. இருப்பினும் அரசாங்கம் தேசிய பாதுகாப்பு வலுவாக உள்ளது என உறுதியாக கூறுகின்றதே?
பதில்: நாட்டிற்கு நேரவிருக்கும் அச்சுறுத்தலான நிலைமைகள் பற்றிய அறிந்திருக்க வேண்டியது அவசியம். நாட்டின் தலைவர்கள் கடந்த கால பிரச்சினைகளைபோன்று புதிய பிரச்சினைகள் தோன்றாமல் இருப்பதற்கான வழிமுறைகள் பற்றி தலைவர்கள் அறிந்திருக்காவிடின் அது பாராதூரமான நிலைமையாக மாறிவிடும். கடந்த காலங்களில் நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது வடக்கு கிழக்கில் மீண்டும் ஒரு அபாயகரமான நிலைமை தோன்றாதிருப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தோம். அதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.
கேள்வி: இருப்பினும் அப்பகுதி மக்கள் அதனை இராணுவ ஆதிக்கம் என்றல்லவா கருதினார்கள்?
பதில்: அந்த கருதுகோள் அவர்களுடை தனிப்பட்ட தேவைக்கு அமைவாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாகும். நாம் ஒருபோதும் வீதித்தடைகளை போட்டு பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. குறிப்பாக எனது காலத்தில் வீதித்தடை செயற்பாடுகள் பூச்சியமாகவே இருந்தன. அதேபோல் நாம் பாதுகாப்பு தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது அந்தச் செயற்பாடுகள் ஒருபோதும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் அமைந்திருக்கில்லை.
கேள்வி: நீங்கள் அவ்வாறு கூறினாலும் வடக்கு மக்கள் இன்றும் கூட இராணுவ முகாம்களை அகற்றுங்கள் என்றுதான் கோருகின்றார்கள். மக்களுக்கு தெரியாமல் பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் அவர் கள் ஏன் முகாம்களை அகற்ற கோருகின்றார்கள்?
பதில்: அந்த விவகாரம் வேறுபட்ட ஒரு நியாயபத்திரத்தை அடிப்படையாக கொண்டதாகும். நாம் முன்னெடுத்த செயற்பாடுகளை உதாரணத்துடன் கூறுவதாயின் அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்திலிருந்து ஏனைய பிரந்தியத்தில் உள்ளவர்களின் நடவடிக்கை எவ்வாறு உள்ளது என்று கண்காணிக்க முடியும். இந்தச் செயற்பாடு சாதாரண மக்களின் வாழ்க்கை சூழலை எந்த விதத்திலும் பாதிக்காது. அவர்களுக்கு உள, மற்றும் உடல் ரீதியிலான பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. அவ்வாறான ஒரு முறைமையையே நாங்கள் பின்பற்றினோம். எனவே இந்த பாதுகாப்பு கட்டமைப்புக்களை சிதைத்துவிட்டால் அது எமக்கு பிரச்சினையாவிடும்.
கேள்வி: யுத்த வெற்றி நாளன்று கிளிநொச்சியில் பொலிஸ் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அதனை ராஜபக் ஷ அணி புலிகளின் மீௌழுச்சி என்றா பார்க்கின்றது?
பதில்: அப்படி கூறாதீர்கள். எனது காலத்தில் கோபி என்ற ஒருவரை நாங்கள் கைது செய்திருந்தோம். ஒருமுறை மிதிவண்டி ஒன்றில் வந்த நபர் ஒருவரை சோதனையிட்ட போது அவரிடத்திலிருந்து கிடைத்த கடிதம் ஒன்றை மையமாக கொண்டுதான் கோபி என்பவரை கைதுசெய்திருந் தோம். அதனால் பாதுகாப்பு தரப்பில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் சிறு துரும்பும் கூட பெரிய ஆதாரங்களாக இருக்கும். எனவே பொலிஸ் வாகனம் மீதான தாக்குதலை சாதாரண விடயம் என்று கருதாதீர்கள். கொழும்பில் இவ்வாறான ஒரு சம்பவம் நடந்தால் சாதாரண சம்பவம் என்று கருதிவிட முடியாதல்லவா? அதுபோன்று எந்த மாகாணத்தில் நடந்தாலும் அது குறித்து தேடிப் பார்க்க வேண்டும்.
கேள்வி: அவ்வாறான ஒரு அச்சுறுத்தலான சூழல் தோன்ற வேண்டும் என்பதுதான் ராஜபக் ஷ அணியின் வேண்டுதல் என்று கூறப்படுகின்றதே?
பதில்: அவ்வாறு வேண்டுதல் செய்ய வேண்டிய தேவை எமக்கு கிடையாது. காரணம் நாங்கள் யுத்தத்தினை முற்றுப்பெறச் செய்தவர்களாவோம். அவ்வாறிருக்கின்ற போது அரசாங்கம் மீண்டும் புலிகள் எழுவதற்கு இடம்கொடுக்குமாயின் அது பாரதூரமான நிலைமையாகும். நாட்டின் தலைமைக்கு இந்த விடயம் குறித்து தெரிவு இல்லை என்பது பாரதூரமான நிலைமையாகும். நாட்டிற்கு ஆபத்து என்பது ஐ.எஸ். அமைப்பு உள்ளிட்ட எந்த பக்கத்திலிருந்து வரக்கூடும். எனவே அது தொடர்பில் அவதானத்துடன் இருப்பதே சிறந்ததாகும்.
கேள்வி: வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற கோருகின்றார். மறுமுனையில் அரசாங்கம் இராணுவ முகாம்களை அகற்ற மறுப்பு தெரிவிக்கின்றது. அவ்வாறாயின் அரசாங்கத்தின் பாதை சரியாகத்தானே உள்ளது?
பதில்: இதற்கு முன்னைய காலங்களை பார்த்தால் குறிப்பாக 1980 களிலும் கூட வடக்கில் இராணுவ முகாம்கள் இருந்தன. அதனுள் இராணுவமும் இருந்தது. பலாலியிலும், வடமராட்சியிலும் இராணுவ முகாம்கள் இவ்வாறு இருந்தாலும் அதனை சூழ புலிகளே இருந்தார்கள். அங்கிருந்து அடுத்த முகாம்களுக்கு கூட செல்ல முடியாத நிலையில் இராணுவம் இருந்தது. மேலும் எமது நாடு 30 வருடகால யுத்தத்திற்கு முகம்கொடுத்திருந்தது. அவ்வாறிருக்கின்றபோது பிரபாகரனால் விதைக்கப்பட்ட சிந்தனைகள் உள்ளன. குறுகிய காலத்தில் அந்த சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று கருதிவிட முடியாது. பிரபாகரனின் காலத்தில் தற்கொலை குண்டுதாரிகளாகும் அளவிற்கு மக்களின் சிந்தனையில் மாற்றம் செய்யப்பட்டிருந்ததை மறந்துவிடவும் முடியாது. அதனால் அவ்வாறான ஒரு நிலைமை மீண்டும் தோன்றாது என்று நினைப்பது முட்டாள்தனமானதாகும்.
கேள்வி: தற்காலத்தில் முப்படையினரில் பலரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதாகின்றார்கள். அந்த நாட்களில் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் நீங்கள் தானே அவற்றுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்?
பதில்: நாட்டின் பாதுகாப்பிற்காக தீவிரவாதத்தினை ஒழித்தது தவறு என்று கூற முடியாது. அவர்கள் தீவிரவாதத்தினை முடக்கும் நோக்கில் மேற்கொண்ட செயற்பாடுகளை தற்காலத்தில் வன்முறைகளாக கருதி அவர்களை கைதுசெய்வது தேசத்துரோகச் செயலாகும். எவ்வாறாயினும் இராணுவத்தினர் செய்த அனைத்து செயற்பாடுகளையும் நான் பொறுப்பேற்றுக்கொள்கின்றேன்.
கேள்வி: எனது கேள்வி யுத்தத்தின் பேரில் குற்றம் இழைத்தவர்கள் பற்றியதாகும்?
பதில்: இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் யுத்தம் என்ற போர்வையில் தவறு செய்திருந்தால் அவர்கள் தண்டனைக்குரியவர்களாவர். இவர்களை தண்டிப்பதிலும் தவறில்லை. ஆனால் ஒரு தனிப்பட்ட நபரால் செய்யப்பட்ட குற்றம் என்று கருதப்பட வேண்டும். எனவே அவற்றுக்கு நாம் பொறுப்புக் கூற முடியாது.
கேள்வி: வேறு அதிகாரத்திலும் கொண்டவர்களின் கோரிக்கைக்கு அமைவாக குற்றம் செய்திருந்தால்?
பதில்: அவ்வாறான ஒரு நிலைமை அன்று இருக்கவில்லை. அவ்வாறான நிலைப்பாடு காணப்பட்டதாக ஒரு கதையை உருவாக்கும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தொடர்புபடுத்திக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட யுத்தம் என்பதால் நாம் அனைத்து தமிழர்களையும் தீவிரவாதிகள் என்று பார்க்கவில்லை. அதனால் தமிழ் மக்கள வாழும் பகுதிகளை இலக்கு வைத்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் 10 பேரை கைது செய்கின்ற போது 3 அப்பாவிகள் சிக்கியிருக்கக் கூடும் அதனை நாங்கள் பொறுப்பேற்க முடியாது. உலக நாடுகளில் இந்த நடப்பு ஒன்றும் புதிதல்லவே. மேலும் 99 வீதமான தீவிரவாதிகள் தமிழர்களாக இருந்த போது நாங்கள் அம்பாந்தோட்டையில் சென்று அவர்களை தேடி சோதனையிடுவது பயனற்றதாகும்.
கேள்வி: . அவ்வாறாயின் தேசிய பாதுகாப்பின் நிமித்தம் சற்று சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளும் இடம்பெற்றன என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பதில்: தீவிரவாதிகள் என்று வருகின்ற போது அவர்கள் சட்டத்தினை மதித்து செயற்படுவார்களா? அதனால் அவர்களுடன் தலையை தடவிப்பேசுவதால் ஒன்றும் ஆகப்போவ தில்லை. அதனை தவறு என்று கூறுவார்களாயின் நானும் குற்றவாளி என்று ஒப்புக்கொள்ள தயாராகவே உள்ளேன்.
கேள்வி: அவ்வாறாயின் நீதிக்காக சட்டத்தை மீறவேண்டி ஏற்படும் என்றா கூறுகின்றீர்கள்?
பதில்: மக்களின் உயிர் பாதுகாப்பின் நிமித்தமும் தீவிரவாதத்தினை அழிக்கும் நோக்கத்திலும் முன்னெடுத்த செயற்பாடுகள் சட்டத்திற்கு அமைவானவை என்றுதான் நான் கூறுவேன். அதனால் தான் அப்போதைய காலங்களில் கொழும்பில் இருந்த விடுதிகளில் தங்கியிருந்தவர்களை வவுனியாவிற்கு அனுப்ப நேரிட்டது, அதற்கு காரணம் தீவிரவாதிகள் தங்கியிருந்ததாகக் கூறப்பட்ட விடுதிகளில் அவர்கள் தங்கியிருந்தமையாகும்.
கேள்வி: அவ்வாறாயின் கொழும்பில் உள்ள விடுதிக ளில் இருந்தவர்கள் சகலரும் தீவிரவாதிகளா?
பதில்: அவ்வாறில்லை நாங்கள் மேற்படி விடுதிகளில் தங்கியிருந்தவர்களை வவுனியாவிற்கு அனுப்பிய போது நீதியரசர் சரத் நந்த சில்வா நாங்கள் செய்தது தவறான செயல் என்று தீர்ப்பளித்ததையடுத்து அவர்களுக்கு பஸ் ஒன்றில் ஏற்றிச் சென்று வவுனியாவில் இறக்கிவிடப்பட்ட சுமார் 300 பேரை மீண்டும் அழைத்துவந்தோம். அதனால் நாங்கள் சட்டத்துக்கு முரணாக செயற்படவில்லை.
கேள்வி: நீங்கள் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சுமுகமான பேச்சுவார்த்தையொன்றினை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகின்றதே?
பதில்: இல்லை. நாங்கள் ஒருபோதும் சந்திக்கவில்லை. ஒரு வருடத்திற்கு முன் சந்தித்த போதும் அரசியல் பற்றி பேசவில்லை. வேறு சில விடயங்கள் பற்றியே நாங்கள் பேசினோம்.
கேள்வி: மத்தியஸ்தமான ஒரு நபரான உங்களை பயன் படுத்திக்கொள்ளும் ஒரு முயற்சியில் அரசியல் தரப்புகள் இரண்டுமே ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றதே அதன் தன்மை எவ்வாறானது?
பதில்: அவ்வாறான ஒரு முயற்சி உள்ளதா என்பதை நான் அறியவில்லை. என்னுடன் அது பற்றிய ஒருவரும் பேசவும் இல்லை. பலர் அது பற்றி பேசிக்கொள்கின்றார்கள் என்பதை மட்டும் அறிவேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM