ஞானசார தேரரின் தொடர்ச்சியான கருத்துக்கள் நாட்டின் நீதித்துறையை கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளன என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,
நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக தீவிரவாத ரீதியில் கருத்துக்களை வெளியிட்டு வரும் ஞானசார தேரரின் கருத்துக்கள் இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் ஜனநாயகத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.
அண்மையில் ஞானசார தேரர் இஸ்லாமிய மதத்தையும் சிறுபான்மையினரை தூற்றியும் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வினவிய போதே கிழக்கு முதலமைச்சர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிடுகையில்
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கே இந்த நாட்டில் பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அத்தகைய நோக்கத்தையே கேலிக்குள்ளாக்கும் வகையில் தம்மை உத்தியோகப்பற்றற்ற பொலிஸ் பிரிவு என அழைத்துக் கொள்வதை நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்குற்கு ஏற்பட்ட அபாயமாகவே கருத வேண்டியுள்ளது,
அது மாத்திரமன்றி ஏற்கனவே அளுத்தகமை மற்றும் சில பகுதிகளில் ஏற்பட்ட இனமுறுகல்களுடன் இவரின் பெயர் இணைத்துக் கூறப்பட்டு வரும் நிலையில் கிழக்கில் பாரிய இனமுறுகலை ஏற்படுத்துவதற்கான பின்னணியொன்றை தற்போது ஞானசார தேரர் உருவாக்கி வருகின்றாரா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது.
கிழக்கில் இதுவரை மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகையில் அண்மைக்காலமாக இனவாத செயற்பாடுகளை பரப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பாதுகாப்புத் தரப்பினர் நடந்து கொள்கின்ற முறை குறித்து பொதுமக்களால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் தான் நாம் பொலிஸ் அதிகாரத்தை கேட்கின்றோம். எமக்கு பொலிஸ் அதிகாரம் கிடைக்கும் பட்சத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பது எவ்வாறு என்பதை நாம் காட்டுகின்றோம்.
அது மாத்திரமன்றி ஞானசார தேரரின் முஸ்லிம்களை சீண்டிப் பார்க்கும் விதமான கருத்துக்கள் தொடருமானால் அதன் விளைவுகள் விபரீதமாக அமையலாம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இதேவேளை நான் கிழக்கில் விஹாரைகளை அமைப்பதற்கு எதிராக இருக்கின்றேன் என்றதொரு கருத்தை அண்மைக்காலமாக ஞானசார தேரர் உட்பட சில பெரும்பான்மை அரசியல்வாதிகளும் பரப்பி வருகின்றனர்.
பௌத்த மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அவர்கள் வாழும் இடங்களில் அவர்களுடைய மதவழிபாடுகளை மேற்கொள்வதற்கு நான் ஒரு போது் தடையானவனுமல்ல. என்னால் தடை போடவும் முடியாது. அவர்களுடைய மத சுதந்திரத்தை நான் ஒரு போது தடை செய்ய முடியாது.
ஆனால் அவர்கள் முஸ்லிம்களும் தமிழர்களும் வாழும் பகுதிகளில் விஹாரைகளை எழுப்புவதும் சிலைகளை வைப்பதும் தான் இன்று பிரச்சினையாகவுள்ளன.பௌத்த பக்தர்கள் உள்ள இடத்தில் தான் விஹாரைகள் எழுப்பபட வேண்டும் ஆனால் முஸ்லிம்களும் இந்து பக்தர்களும் இருக்கும் இடத்தில் விஹாரையை கட்டி யார் வணங்கப் போகின்றார்கள்?
அது மாத்திரமன்றி முக்கிய மதிப்புக்குரிய பௌத்த தேரர்களே இந்த செயல்களை வெறுத்து ஒதுக்கும் போது சிலர் அரசியல் நோக்கத்துடன் இவ்வாறான நிகழ்வுகளை முன்னெடுப்பது விமர்சிக்கத்தக்கது.
என் மீது எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் என்ன விமர்சனங்களை முன்வைத்தாலும் அவற்றுக்கு அஞ்சி வாய் மூடி மௌனியாக இருக்கப் போவதில்லை. சிறுபான்மையினரின் நலன்கள் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுமானால் அதற்கு எதிராக குரல் எழுப்ப நான் ஒரு போதும் தயங்கப் போவதில்லை,
நாமும் இந்த நாட்டின் மதிப்புக்குரிய பிரஜைகள் தான் , எல்லோரையும் போன்று உரிமைகள் எமக்கும் உள்ளன. எமது சுதந்திரத்தின் மீதும் உரிமைகள் மீதும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுமானால் நாம் அதை கை கட்டி வாய்மூடி பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM