அடுத்தவர்களைப் பார்த்து, அவர்களுக்கு இணையாக அல்லது அவர்களைப் பார்க்கிலும் அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆவலும், தொடரும் கடன் கவலைகளும், குடும்ப மற்றும் வேலையில்லாப் பிரச்சினைகளும், செய்யும் தொழிலில் தொடரும் தொல்லைகளும், போட்டா போட்டிகளும் நமக்குத் தருவதெல்லாம் மன உளைச்சலும் அதன் தொடர்ச்சியாக நம்மை வருத்தும் தூக்கமின்மையும் தான்.
“ தூக்கமென்னப்பா தூக்கம்? ஒரு தூக்க மாத்திரையைப் போட்டா தன்னாலே வந்து விடப்போகிறது?" என்று அலட்சியமாய்க் கேட்கும் பேர் வழியா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கான விடயம்தான் இந்தக் கட்டுரை! தூக்க மாத்திரைகளே நாளடைவில் புற்றுநோய்க்குக் காரணமாகி நிரந்தரமான தூக்கத்தில் உங்களை ஆழ்த்திவிடலாம் என்று அதிர வைக்கிறது சமீபத்தில் வெளியான மருத்துவ ஆய்வு ஒன்று!
Sleeping Disorder அதாவது தூக்கமின்மை என்பது மருத்துவத்துறைக்கே சவாலான மிகப்பெரிய விடயம். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மேல் நாடுகளில் விசேட வைத்திய நிபுணர்கள் இருக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் அதனை ஒரு நோயாகவே பார்ப்பதில்லை. ஏதோ காய்ச்சல் தலைவலிக்குப்போல வைத்தியர்களிடம் கேட்டு மாத்திரைகளை எழுதி வாங்கிக் கொண்டு வந்து விடுகிறோம். அதுதான் நாளடைவில் ஆபத்தாகி விடுகிறது என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள். நிம்மதியான தூக்கம் வருவதற்காகப் போடும் தூக்கமாத்திரைகள் முதலில் வாய் உலர்தல், தலைச் சுற்றல், வயிற்றுப் போக்கு என்று சின்னச்சின்ன பக்க விளைவுகளைத் தரலாம். இதெல்லாம் இரண்டு அல்லது மூன்று நாட்களில் சரியாகி விடும். ஆனால் மாத்திரைகளை அந்த அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படியில்லாமல் இதேவேலையாக மாதக் கணக்கில் தொடர்ந்து மாத்திரைகளைப் எடுத்தால் நாளாக நாளாக இரத்த அழுத்தம் குறைந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு, இருதயம் பாதிக்கப்படுகிற அளவுக்கு கொண்டுபோய் விடலாம்.
இன்னொரு ஆபத்தான பாதிப்பு என்னவெனில், நாளடைவில் அந்த மாத்திரைகளுக்கு நாமே அடிமையாகி விடுவதுதான். ஒரு மாத்திரையில் ஆரம்பித்து, பின்னர் இரண்டு நாலு என்று அதிகமாகி மருத்துவர்களின் பரிந்துரையில்லாமலேயே நினைத்த நேரத்தில் போடவைக்கும். இதேபோலத்தான் போதை மருந்துப் பாவனையும். மனதிலும் உடலிலும் சோர்வு மற்றும் இயலாமை என்று தெரிந்த மாத்திரத்தில் பாவிக்கத்தூண்டும். தூக்கமாத்திரைகளும் ஒரு போதைதான். நாளடைவில் அது இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு அது நம்மைக் கொண்டு வந்து விடும். இப்படித் தொடர்ந்து மாத்திரை பாவிப்பவர்களுக்குத்தான் புற்று நோய் எச்சரிக்கையும். தூக்க மாத்திரைகளை தொடர்ச்சியாகவும், அளவுக்கதிகமாகவும் பாவிக்கிற சிலரிடம் நடத்திய ஆய்வில் முதற்கட்டமாக இப்படிக் கூறியிருந்தாலும், அதனை உறுதிப்படுத்தும் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
ஆனால் இன்றைய இளைஞர், யுவதிகளுக்கு இந்த எச்சரிக்கை நல்ல பலனைத்தரலாம். ஏனென்றால் முந்திய நாட்களில் வயதானவர்கள்தான் தூக்கம் வராமல் தவித்து, அதற்காக மாத்திரையின் துணையை நாடினார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் முப்பது வயதிற்கு கீழ்ப்பட்ட இளைஞர், யுவதிகளுமே காதல் மற்றும் குடும்பப் பிரச்சினைகளில் சிக்கித் தவித்து நிம்மதியையும் தூக்கத்தையும் தொலைத்துவிட்டு, தூக்க மாத்திரைகளின் துணையை அனுதினமும் நாடுகின்றனர் என்று அதிர்ச்சியைக் காட்டுகிறார்கள் மருத்துவர்கள்.
தூக்கம் வரவில்லையென்ற சாதாரணமான பிரச்சினையானது அதற்காகப் பாவிக்கப்படும் மருந்து மாத்திரைகளின் தன்மைக்கேற்ப நாளடைவில் புற்றுநோயைக் கொண்டுவந்து விடுமா என்று மனோவியல் மருத்துவ நிபுணர் ஒருவரிடம் உசாவினோம்…
மருந்துகள், மாத்திரைகள் எல்லாவற்றிலுமே சிறிய அளவுக்காவது பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்யும். இருமலுக்குக் குடிக்கிற மருந்திலேயே (Syrup) நித்திரையை வரவழைக்கிற மருந்து இருக்கத்தானே செய்கிறது? தூக்கமாத்திரைகளைப் பொறுத்தவரை டாக்டர்களின் சிபாரிசு இல்லாமல் மருந்தகங்களின் வாங்கிவிட முடியாது. ஒரே நேரத்தில் அதிகமான தூக்கமாத்திரைகளை உட்கொண்டால் அது உடம்பில் பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்துகிறது. ஆனால் அதுகூட உயிரைப் பறிக்கிற அளவுக்கு வீரியமாய்ச் செயற்படாதென்பது எனது கருத்து. தூக்க மாத்திரைகளின் பாவனையால் புற்றுநோய் வருமென்ற தகவல் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. அதனால் யாரும் பீதியடையத்தேவையில்லை.
அதேசமயம், மாத்திரைகளைப் பாவிப்பதால் பக்க விளைவுகள் ஏற்படுமென்று பயப்படுகிறவர்கள், உடம்புக்குத் தேவையான உறக்கம் வராததால் ஏற்படுகிற விளைவுகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும். சரியான தூக்கம் இல்லாவிடில் மன அழுத்தத்துடன் கல்லீரல், சிறுநீரகம் கூட பாதிக்கப்படலாம். மாத்திரைகளையும் தாண்டி சில சிகிச்சைகள் மற்றும் உடற்பயிற்சிகள் மூலமாகவும் தூக்கமில்லாத பிரச்சினையிலிருந்து விடுபட முடியும் என்கிறார் அந்த வைத்திய நிபுணர்.
அதேவேளை தூக்க மாத்திரைகளே இல்லாமல் நல்ல தூக்கம் வர சில வழி முறைகளையும் பரிந்துரைக்கின்றார் மேற்படி வைத்திய நிபுணர். அவையாவன: காலை வேளைகளில் குறைந்தது 15 நிமிடமாவது திறந்த வெளிகளில் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். தேநீர், கோப்பி போன்ற சூடான உற்சாகமூட்டும் பானங்களை மாலை ஆறுமணிக்குப் பிறகு அருந்தக்கூடாது. இரவில் படுக்கப்போவதற்கு முன்னால் ஒரு முறை குளித்தோ, உடம்பைக் கழுவியோ குளுகுளுப்பாகவும் சொகுசாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தூங்குவதற்கு இருமணி நேரத்திற்கு முன் இரவு உணவை அருந்த வேண்டும். தூங்குவதற்கு முன் பழமும் சாப்பிட்டு, சூடான பாலும் அருந்தலாம். பழங்களில் மாம்பழத்திற்கு ஒருவரைத் தூக்கத்திலாழ்த்தும் சக்தி இயற்கையாகவே உண்டு. தூங்கும் அறையில் வெளிச்சம் குறைவாகவோ அல்லது வெளிச்சமே இல்லாமலோ பார்த்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக, மனிதனை சிறிய அளவிலான மயக்க நிலைக்கு கொண்டு செல்வதற்கான மருந்துகளே தூக்க மாத்திரைகளில் இருக்கும். நரம்பு மண்டலத்தில் இலேசான பாதிப்பை ஏற்படுத்தவல்ல அந்த மருந்துகள் புற்றுநோய்க்கு பாதை அமைத்துக் கொடுப்பதை மருத்துவ உலகம் அனுமதிக்காது என்று நம்புவோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM