(எம்.எப்.எம்.பஸீர்)
பிலியந்தலை பகுதியில் போதைப் பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கைக்கு சென்ற பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணையாளர் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலானது மிகத் திட்டமிட்டு போலியாக தகவல் வழங்கி நடத்தப்பட்ட தாக்குதல் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழுவின் ஆலோசனைகளுடன் நான்கு சிறப்பு குழுக்கள் முன்னெடுக்கும் விசாரணைகளிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அத்துடன் தாக்குதலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளொன்று நேற்று காலை தெஹிவளை - மஹரகம பிரதான வீதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் அருகே கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்த தாக்குதலானது, பிரபல போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரினால் மிகத் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் இந்த தாக்குதலின் பின்னணியில் தெற்கின் பிரபல பாதாள உலகத் தலைவனும் களுத்துறை சிறைச்சாலை பஸ் வண்டி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபர்களில் ஒருவருமான மதூஷ் என்பவரின் குழுவினருக்கு தொடர்பு உள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந் நிலையில் சந்தேக நபர்களைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன் தினம் இரவு 8.30 மணிக்கும் 8.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பிலியந்தலை மொறட்டுவ பிரதான வீதியின் மக்கள் வங்கிக்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதன் போது பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிளான (4946) அபேவிக்ரம உயிரிழந்தார் எனவும் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் (67055) சமிந்த காயமடைந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி கேசரிக்கு தெரிவித்தார்.
இதனைவிட காயமடைந்தவர்களில் 8 வயதான சிறுமி ஒருத்தியும் 15 வயதான சிறுவன் ஒருவனும் மற்றொரு சிவிலியனும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 வயது சிறுமியின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக களுபோவில வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
சுமார் 10 கிலோ வரையிலான போதைப் பொருள் வர்த்தகம் ஒன்று தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந் நிலையில் அது தொடர்பில் உடன் செயற்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, அதன் பிரதானியான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வாவின் ஆலோசனையைப் பெற்று செயற்பட்டுள்ளது. அதன்படி அது தொடர்பிலான சுற்றிவளைப்புக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ தலைமையில் குழுவொன்று பொலிஸ் தலைமையகத்தில் இருந்து அனுப்பட்டுள்ளது.
இந் நிலையில் இக்குழுவானது சுற்றிவளைப்புக்காக பிலியந்தலையை அண்மித்த போது, பிலியந்தலை மக்கள் வங்கியை அண்மித்து நடு வீதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் பயணித்த வாகனத்தை முந்திச் செல்வது போன்று வந்துள்ள மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ள பாதாள உலகக் குழுவினர் என சந்தேகிக்கப்படும் நபர்கள் , பொலிஸாரின் வாகனம் மீது சரமாரியான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர்.
இதன் போது பொலிஸ் ஜீப் வண்டியை செலுத்திச் சென்றதாக நம்பப்படும் பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். ஜீப்பிலிருந்த ஏனையோர் காயமடைந்துள்ளனர்.
இதனை விட இந்த துப்பக்கிச் சூடு நடத்தப்படும் போது அப்பகுதியில் இருந்த வர்த்தக நிலையம் ஒன்றும் துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப்பட்டுள்ளது. இதன் போதே அந்த வர்த்தக நிலையம் அருகே இருந்த இரு சிறுவர்களும் மற்றைய சிவிலியனும் காயமடைந்துள்ளனர்.
இதனைவிட பொலிஸ் ஜீப் வண்டிக்கு மேலதிகமாக அப்பகுதியில் இருந்த மேலும் மூன்று வாகனங்களும் துப்பாக்கிப் பிரயோகத்தில் சேதமடைந்துள்ளன.
துப்பாக்கிச் சூட்டினை அடுத்து உடனடியாக பாதாள உலக உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் ஸ்தலத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், காயமடைந்தவர்கள் முதலில் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான, குற்றம் மற்றும் போக்குவரத்து விவகாரங்களைக் கையாளும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டில் மேல் மாகாணத்தின் தென் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்ரமசிங்கவின் மேற்பார்வையில் நான்கு சிறப்பு குழுக்கள் விசாரணைகளை முன்னெடுக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM