Update :
மெராயா நகரத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் இன்று காலை லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவரை ஐயாயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும் விடுதலை செய்து நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி இந்திக்க த சில்வா அனுமதியளித்துள்ளார்.
அதேவேளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிபதி இந்திக்க த சில்வா உத்தரவிட்டுள்ளார்.
........................................................................
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெராயா நகரத்தில் இன்று காலை பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மெராயா நகரத்தில் வசிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தாக்கியதனால் இந்த பதற்றநிலை உருவாகியுள்ளது.
தாக்கப்பட்ட நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள நபர் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேலின் வீட்டிற்கு முன்னால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த வாழ்த்து விளம்பர பலகையை இன்று காலை தாக்கி உடைத்துள்ளதாக எழுந்த பிரச்சினையில் இவர் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்குள்ளாகிய குறித்த நபர் மெராயா நகரத்தின் முச்சக்கரவண்டியின் சாரதி என தெரியவந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினரை கைது செய்யும் படி கோஷமிட்டு பதற்றநிலை தொடரும் நிலையில் மாகாண சபை உறுப்பினர் தங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்னால் முடிந்ததை நான் செய்துக் கொள்கிறேன் என பிரதான வீதியில் அமர்ந்துள்ளார்.
அதேவேளை ஸ்தலத்திற்கு விரைந்த லிந்துலை பொலிஸார் நிலைமையை சுமூகத்திற்கு கொண்டு வந்து மத்திய மாகாண சபை உறுப்பினரை பொலிஸ் பாதுகாப்புடன் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு நிலைமையை ஆராய்ந்த பொலிஸார் மத்திய மாகாண சபை உறுப்பினரை கைது செய்துள்ளனர்.
அதேவேளை மெராயா நகரத்திற்கும், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் வீட்டிற்கும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேலிடம் வினவியபோது,
தாக்குதலுக்குள்ளான நபர் பல காலமாக மெராயா நகரத்தில் பெண்களுக்கு இடையூறுகளை விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார் என்பதை மக்கள் பிரதிநிதியான என்னிடம் நகர பொது மக்கள் தெரிவித்து வந்தனர்.
அதேநிலையில் குறித்த நபரால் விளம்பர பலகை தாக்கப்பட்டுள்ளது. பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு இவர் பல இடையூறுகளை விளைவித்துள்ளதாக என்னிடம் முறையிட்டுள்ளனர்.
சமீபத்தில் மெராயா சென்றகிலாஸ் தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவரிடம் சேட்டையிட்டதாகவும், இதனால் பொலிஸில் முறைபாடு செய்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும் குறித்த நபரை நான் தாக்கவில்லை என இவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளையில் தாக்குதலுக்குள்ளான நபரிடம் வினவியபோது,
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் என்னை தாக்கினார் எனவும், எதற்காக தாக்கினார் என்று எனக்கு தெரியாது. ஆனால் விளம்பர பலகையை நான் தான் உடைத்தேன் என கூறி பொல்லாலும், இரும்பாலும் நான் தாக்கப்பட்டேன். எனக்கு உடம்பில் பலத்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதால் வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளேன்.
எது எவ்வாறாகயிருந்தாலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரான மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM