புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சிக்கான அலகுகள் முழுமையாக நீக்கப்பட்டு சமஷ்டி முறையிலான ஆட்சியை உருவாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. மாகாண அதிகாரங்களை பலப்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான பலத்தை உறுதிப்படுத்துவதே இந்த முயற்சியென மஹிந்த ஆதரவு அணியினர் தெரிவித்தனர்.
சர்வஜன வாக்கெடுப்பும் இறுதி நேரத்தில் தவிர்க்கப்படலாம் எனவும் மஹிந்த அணி குற்றம் சுமத்தியது.
புதிய அரசியலமைப்பு ஒருபோதும் ஒற்றையாட்சி முறைமையில் இருந்து நீங்காது என அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் மஹிந்த ஆதரவு அணியினரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரும் பொது எதிரணியின் தலைவருமான தினேஷ் குணவர்தன தெரிவிக்கையில்,
புதிய அரசியல் அமைப்பை பாராளுமன்ற நிலையியல் கட்டளையை மீறிய வகையில் மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இந்த விவகாரத்தை நாம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் தெரிவித்துள்ளோம். அனைத்து கட்சிகளும் இந்த நிலைமையை விளங்கிக்கொண்டு பாராளுமன்ற விதிமுறைக்கு அப்பால் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதை எதிர்க்கின்றனர்.
அவ்வாறு இருக்கையில் இப்போது இவர்கள் ஒற்றையாட்சி என்ற பலமான கொள்கையை மீறும் வகையில் செயற்பட தீர்மானித்துள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்தே ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அவர்களின் கூட்டணிக்கும் ஒற்றையாட்சி என்ற பதம் கசப்பான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. அதிகாரப் பகிர்வு மூலமாக நாட்டை துண்டாடுவது என்ற நிலையிலேயே அவர்களின் அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டும் வந்துள்ளன. அவ்வாறு இருக்கையில் இப்போதும் ஒற்றையாட்சி என்ற கொள்கையை மீறி நாட்டை துண்டாடவே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கின்றது.
இந்த செயற்பாட்டினால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பலமடையும். அவர்களுக்கான மாகாண அதிகாரங்கள் பலப்படுதப்பட்டால் அவர்களுக்கான பொலிஸ், காணி அதிகாரங்கள் பகிரப்படும். இதையே சர்வதேச தரப்பினரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். சர்வதேச பிரதிநிதிகளின் இலங்கை விஜயத்தின் போதும் இந்த விடயம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரப்பட்டுள்ளது.
ஆகவே அதை நிறைவேற்றியாகவேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது. அவ்வாறு ஒரு நிலைமை ஏற்படுமாயின் மீண்டும் நாட்டில் ஆயுத மோதல் நிலைமை ஒன்று உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல் மீண்டும் நாட்டில் குழப்பகர சூழல் உருவாகி சர்வதேசத்தின் அத்துமீறிய செயற்பாடுகளினால் நாடு துண்டாடப்படும். அந்த இலக்கை நோக்கியே இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் பயணித்துக்கொண்டுள்ளனர் என்றார்.
இந்த விடயம் குறித்து பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவிக்கையில்,
அரசியல் அமைப்பு திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் பாராளுமன்றத்தில் யோசனை ஒன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது. இந்த அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பில் ஆராயவும், திருத்தம் கொண்டுவரவும் பாராளுமன்றதிற்கு அப்பால் பிரத்தியேக குழுவையும் நியமித்துள்ளனர். இது பாராளுமன்ற நிலையியல் கட்டளை விதிமுறைக்கு முற்றிலும் முரணான ஒன்றாகும்.
அதேபோல் ஜனாதிபதி முறைமையை நீக்குதல், தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டுவருதல் மற்றும் சுயாதீன செயற்பாட்டை பலப்படுத்தல் ஆகிய விடயங்கள் கடந்த காலத்தில் கலந்துரையாடப்பட்ட முக்கியமான காரணிகளாக இருந்தன. நாம் இந்த முறைமையை நீக்குவது தொடர்பில் எந்தவித முரண்பாட்டையும் வெளிப்படுத்த மாட்டோம். நாம் அனைவரும் ஏகமனதாக இந்த மாற்றத்தை ஆதரிக்க தயாராக உள்ளோம். ஆனால் இவர்கள் அதிகார பரவலாக்கல் என்ற காரணியை முன்வைத்து நாட்டை துண்டாடும் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். குறிப்பாக வடக்குக்கு அதிகாரத்தை வழங்கி சமஷ்டி முறைமையை கொண்டுவர முயற்சிக்கின்றனர். இதுவே ஐக்கிய தேசியக் கட்சியின் மறைமுகமான திட்டமாகும். ஆகவே இதை பாராளுமன்றத்தில் சகலகட்சிகளும் எதிர்க்க வேண்டும்.
அதேபோல் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்களின் கருத்துக்களை வினவவும் அரசாங்கம் தயாராகி வருகின்றது. ஆனால் இவை அனைத்தும் வெறும் கண்துடைப்பு செயற்பாடுகளாகும். இவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்ப்பை தடுக்கவும் மேற்கொள்ளும் மோசடிகளை மறைக்கவுமே இவ்வாறான கதைகளை கூறு வருகின்றனர். இறுதி நேரத்தில் இந்த சர்வஜன வாக்கெடுப்பும் தடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM