அரசியலமைப்பு திருத்தம் ஒற்றையாட்சிக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தல் இல்லை. அரசியலமைப்பு திருத்தமானது பெளத்த சிங்கள கொள்கை எந்த விதத்திலும் பாதிக்காத வகையிலும் ஏனைய மத இன உரிமைகளை பலப்படுத்தும் வகையிலும் அமையும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது.
அதிகார பகிர்வின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் எந்தவொரு சாத்தியமும் இல்லை. அதேபோல் சர்வதேச ஆலோசனைகளை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை எனவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் சந்திப்புநேற்று கட்சி தலைமைஅலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே கட்சியின் உறுப்பினர்கள் இந்த கருத்தை முன்வைத்தனர். இது தொடர்பில் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த கருத்து தெரிவிக்கையில்,
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு என்னவென்பதை தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுதந்தரத்தின் பின்னர் நாட்டுக்கான ஒரு அரசியலமைப்பை உருவாக்கியது ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியேயாகும். 1970ஆம் ஆண்டு இலங்கைக்கு என்ற ஒரு அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவந்தோம். அதுவரையில் சோல்பரி முறைமையில் இருந்த எமது அரசியலமைப்பு இலங்கைக்கு என்ற சுய சட்டதிட்டத்தின் கீழ் கொண்டுவந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் சிறுபான்மை மக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பலமான ஒரு அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மாற்றம் கொண்டுவந்தோம்.
அதன் பின்னர் 1972ஆம் ஆண்டு பலமான அரசியல் அமைப்பாக கொண்டுவந்து அதன் பின்னர் 1978ஆம் அரசியலமைப்பை ஜே. ஆர் உருவாக்கினார். அதில் பல மாற்றங்களை உருவாக்கி இன்று 19ஆம் திருத்தம் வரையில் மாற்றம் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
மேலும் பிரதமர் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான ஆலோசனையை முதலில் முன்வைத்தார். அது பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரதில் உள்ளடக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் நிலைபாட்டை ஆராய்வதற்காக குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தது. நாம் பல சந்தர்ப்பங்களில் கூடி ஆராய்ந்து இறுதியில் பிரதமர் மற்றும் ஏனைய உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை தயாரித்துள்ளோம். எமது நிலைப்பாட்டை பிரதமரும் ஏனைய கட்சியினரும் ஆதரித்துள்ளனர்..
இந்த நிலையில் எமது யோசனைகளாக சில மாற்றங்களை முன்வைத்துள்ளோம். அதாவது இப்போது முன்வைக்கவுள்ள அரசியலமைப்பு மாற்றம் புதிய அரசியலமைப்பு என்று கூறப்பட்டுள்ளது. அதில் புதிய என்பதை நீக்குவதற்கும் , அதேபோல் முதல் இரண்டு சரத்துக்களை நீக்குவதற்கும் , நிலையியல் கட்டளைக்கு அமைய இந்த யோசனைகளை முன்னெடுக்கவும் கூறியுள்ளோம். நான்காம் ஐந்தாம் பக்கங்களில் உள்ள 20தொடக்கம் 24 வரையிலான சரத்துகளை நீக்குதல், மூன்றில் இரண்டு பெரும்பான்மை, அதேபோல் மக்கள் கருத்துக்கு விடப்பட்டு தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற விடயங்களை முன்வைத்துள்ளோம். ஆகவே நாம் அதிகமாக ஜனநாயகத்துக்கு முன்னுரிமை வழங்கி ஒரு யோசனையை முன்வைத்துள்ளோம்.
முக்கியமாக ஜனாதிபதி தெரிவித்ததைப்போல நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுதல் அதனுடன் பாராளுமன்ற அதிகாரங்கள் பலப்படுத்தப்படல் அதே சந்தர்ப்பத்தில் ஒற்றையாட்சி முறைமை பாதுகாக்கபடுதல், தேர்தல் முறைமையில் முறையான மாற்றத்தை கொண்டுவருதல் உள்ளிட்ட விடயங்கள் சரியாக கையாளப்பட வேண்டும்.
நாளை (இன்று) பாரளுமன்றம் கூடும் சந்தர்ப்பத்தில் இந்த அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாடு முன்வைக்கப்படும். அதன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் விவாதிக்கப்படும். அதன்போது சகல கட்சிகளினதும் ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை கருத்தில் கொள்ளப்படும். அதன் பின்னர் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுவதுடன் சிவில் அமைப்புகளின் கருத்துக்கள் மற்றும் மக்கள் கருத்து என்பவற்றை உள்ளடக்கி இறுதி வரைபை உருவாக்கப்படும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான டிலான் பெரேரா கூறுகையில்,
இந்த அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரும் சந்தர்ப்பத்தில் நாட்டின் ஒற்றையாட்சி முறைமைக்கும் பெளத்த கொள்கைக்கும் பாதிப்பு ஏற்படும் ஒன்றாகவும், நாட்டின் தேசிய ஒற்றுமையை பாதிக்கும் விடயமாகவும் அமையும் என பலர் இனவாத ரீதியிலும் அச்சத்திலும் கருத்துகளை முன்வைத்துள்ளனர். ஆனால் இப்போது கொண்டுவர தீர்மானித்துள்ள அரசியலமைப்பு திருத்தத்தில் அவ்வாறான எந்தவொரு அச்சுறுத்தலான செயற்பாடுகளும் இல்லை.
இப்போது மாற்றம் செய்யவுள்ள அரசியலமைப்பு திருத்தத்தில் நாட்டின் ஒற்றையாட்சி பலப்படுத்தப்படும். அதேபோல் பெளத்த சிங்கள கொள்கை எந்த விதத்திலும் பாதிக்காத வகையிலும் ஏனைய மத இன உரிமைகளை பலப்படுதப்படும் வகையிலும் அமையும். அத்தோடும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் எந்தவொரு சாத்தியமும் இல்லை. குறிப்பாக அதிகாரப்பகிர்வு தொடர்பில் 13ஆம் திருத்தத்திற்கு அப்பால்சென்ற அதிகாரபகிர்வு வழங்கப்போவதும் இல்லை.
ஒற்றையாட்சி பலப்படும் ஒரு அரசியலமைப்பு திருத்தமே இதுவாகும். . ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 13ஆம் திருத்த சட்டத்தை ஒருபோதும் எதிர்க்கவில்லை. 13 ஆம் திருத்தமானது நாட்டின் ஒற்றையாட்சிக்கு எந்த விதத்திலும் பாதிப்பும் இல்லை. அதை தெரிந்துகொள்ளாத சிலர் பொய்யான கருத்துக்களை பரப்புகின்றனர். அதற்கு அக்கறை காட்ட தேவையில்லை. குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த திருத்தத்தை கொண்டுவரும் நிலையில் சர்வதேச நாடுகளின் ஆலோசனைகளை உள்ளடக்க எந்த விதத்திலும் தயாராக இல்லை.
இலங்கையில் தனித்துவமான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். மேலும் நாம் முன்வைத்துள்ள இந்த யோசனைகளை ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிரணிக் கட்சிகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டுள்ளன. அதேபோல் கட்டயாமாக ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். ஆகவே ஆரோக்கியமான வகையில் நாட்டையும் மக்களையும் ஐக்கியப்படுத்தும் வகையில் இந்த அரசியலமைப்பு மாற்றத்தை உருவாக்குவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM