ஒவ்வொருவரும் கூறும் கருத்துக்களை கேட்டு விலகிச் சென்றுவிட்டால் சீனாவுடன் ஒப்பந்தம் செய்து துறைமுகத்தினை விற்பனை செய்துவிடுவார்கள். அவ்வாறின்றி நாட்டின் வளங்களை பாதுகாப்பதே எமது அரசாங்கத்தின் நோக்கம். அதற்காக மஹிந்த செய்த பாவத்தின் கடனையும் நாம் செலுத்த வேண்டியுள்ளது என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும் பிரதமரும் அரசாங்கத்தை ஒற்றுமையாக முன்நகர்த்திச் செல்கின்றார்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சி விலகிச் செல்ல மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தன்னுடைய சகோதரரான அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ரெஜி ரணதுங்கவின் புதல்வராயின் துறைமுகத்தை விற்பனை செய்வதற்கெதிராக நேரடியாக பாதையில் இறங்கி எதிர்ப்பினை வெளியிடுவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க வெளியிட்ட கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவர் என்னுடைய சகோதரர் என்பது உண்மை. தற்சமயம் அவர் பொது எதிர்க்கட்சி என்றொன்றில் அங்கம் வகிக்கின்றார். இன்று துறைமுகங்கள் அமைச்சர் என்ற வகையில் நானும் என்னுடைய குழுவினரும் முன்னர் ஏற்படுத்திய ஒப்பந்தத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம். நாடென்ற வகையில் துறைமுகத்தை பாதுகாப்பதற்கு நாம் என்றும் முன்னிற்போம். இதனை எனது தந்தையார் கண்டிருந்தால் மிகவும் சந்தோசப்பட்டிருப்பார்.
என்னுடைய தந்தை இந்நாட்டு வளங்களை பாதுகாப்பதில் அக்கறை செலுத்தியவர். இந்நாட்டு வளங்களை பாதுகாப்பதே என்னுடைய பிரதான குறிக்கோளாகும். இன்று நான் அமைச்சர் என்ற வகையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு விற்பனைச் செய்யும் திட்டத்திலிருந்து விலகியிருந்தால் எமக்கு காட்டிய முதல் ஒப்பந்த பிரதியே கைச்சாத்திடப்பட்டிருக்கும்.
இந்த அரசாங்கத்தை நிறுவியவன் என்ற வகையில் எமக்கு அதிகளவு இலாபம் கிட்டும் வகையில் ஒப்பந்தத்தை கைச்சாத்திடவே முயற்சிக்கின்றேன். நானும் துறைமுக அதிகார சபையின் தலைவர்இ உப தலைவர் உள்ளடங்கிய அத்தியட்சகர் ஆகியோர் துறைமுகத்தினை பாதுகாப்பதையே குறிக்கோளாக கொண்டு செயற்படுகின்றோம்.
மேற்படி திட்டத்தில் பெருமளவு வெற்றிகண்டுள்ளோம். தற்காலத்தில் துறைமுகத்தில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாம் முதலில் கைச்சாத்திடவிருந்த ஒப்பந்தத்திற்கும் எதிர்காலத்தில் நாம் கைச்சாத்திடவுள்ள ஒப்பந்தத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டை எதிர்வரும் காலத்தில் நான் உங்களுக்கு காண்பிப்பேன்.
அப்பொழுது இப்படி பேசுபவர்களிற்கு வெளியில் இறங்க இயலாது. நாட்டில் நல்லதொன்று நடக்கையில்இ நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முற்படுகையில் அரசியல் இலாபமீட்ட முற்பட வேண்டாமென நான் கூறுகின்றேன். நாம் நாட்டை நல்வழிப்படுத்தவே முயற்சிக்கின்றோம்.
ஜனாதிபதி என்னை வெளியே போகச் சொன்னால் நான் வெளியே செல்வேன். அவ்வாறின்றி ஒவ்வொருவரும் கூறுவதைப் போன்று பதவி விலகுவதற்கு நான் ஒன்றும் கைப் பாவையல்ல.
நான் இங்கு செய்துள்ளவற்றை இவ்வாறு பேசும் ஒருவரேனும் செய்யவில்லை. அவர்கள் இருந்திருந்தால் தற்சமயம் துறைமுகத்தை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டிருப்பார்கள்.
மஹிந்த செய்த பாவத்தையே நாம் இன்று போக்குகின்றோம். மஹிந்த சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டு துறைமுகத்தினை அவர்களுக்கு கொடுக்க முயற்சித்தார். என்னாலும் இவற்றிலிருந்து விலகி சீன நிறுவனத்துடன் கைச்சாத்திட்டு ஐம்பது இலட்சம் அல்லது எண்பது இலட்சத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றிருக்கலாம். அதுவே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாகும்.
கடந்த காலத்தில் அமைச்சர்கள் இதனையே செய்தார்கள். அன்று அவர்கள் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின் பிரதியின் விளைவையே நாம் தற்காலத்தில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாம் இந்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். துறைமுக அதிகார சபையை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைத்துள்ளோம்.
அதனால் இன்னுமொரு துறைமுக அதிகார சபையை ஏற்படுத்த இடமளிக்க மாட்டோம். அதுவே எமது கொள்கையாகும். இவ்வனைத்து காரணிகளையும் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளோம். எம்முடைய கோரிக்கைகளிற்கு ஜனாதிபதி தொடர்ச்சியாக உதவுகின்றார். அமைச்சர்கள் என்ற வகையில் அரசாங்கம் தவறிழைக்கும் பொழுது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதிகாரம் எமக்குள்ளது.
மஹிந்தவின் காலத்தில் இவ்வாறு பேசுகின்ற எந்தவொரு அமைச்சராவது பேசுவதற்கு இருந்தார்களா? இல்லை. பூனை குட்டிகள் போன்று கொடுப்பதை உண்டுவிட்டு வீடுகளிற்குச் சென்றார்கள். இன்று எமக்கு நிலையான அரசாங்கமொன்றுள்ளது. நாம் நாட்டை முன்னேற்றுகின்றோம். ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் பொறுப்புடையவர்களாக உள்ளார்கள்.
எனவே ஒவ்வொருவருக்கும் நாட்டின் வளங்களை விற்பனை செய்வதற்கு நாம் இவ்வரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை. நாம் முதலீட்டாளர்களை வரவழைத்து எமக்கு நன்மை பயக்கும் வகையில் முதலீடுகளை மேற்கொள்வதையே செய்கின்றோம்.
மஹிந்த ஒரு போதும் என்னுடைய தந்தையை கவனிக்கவில்லை. என்னுடைய தந்தை பாராளுமன்ற உறுப்பினராகவே இறந்தார் என்பது உங்களிற்கு நினைவிலிருக்கும். அவர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராவார். கம்பஹாவிற்கு சேவையாற்றும் பொருட்டே அவர் பாராளுமன்றிற்கு வந்தார்.
அவருக்கு அமைச்சு பதவி கிடைக்கவில்லை. இன்று அவற்றை பலர் மறந்துள்ளார்கள். ஏனெனில் அக்காலத்தில் ஒரு சிலர் அமைச்சு பதவிகளை ஏற்றிருந்தார்கள். இவற்றுக்கு எதிர்ப்பு வெளியிட்டமையினாலேயே நான் மஹிந்தவிடமிருந்து முதலாவதாக வெளியேறினேன். நான் ரெஜி ரணதுங்கவின் மகன் என்பதை என் அம்மா நன்கறிவார்.
என்னுடைய அம்மா யார் என்பதை நாம் நன்கறிவோம். எங்களுடைய குடும்பத்தில் 6 சகோதரர்கள் உள்ளார்கள். 6 சகோதரர்களும் வெவ்வேறான முறையில் அரசியலில் ஈடுபடுகின்றோம். கட்சிகளை பகிர்ந்துக் கொண்டு நாம் அரசியலில் ஈடுபடவில்லை. நாட்டின் தேவையின் பொருட்டே நான் அரசியலில் ஈடுபடுகின்றேன். இதில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.
என்னால் இலகுவில் வீட்டிற்குச் செல்ல முடியும். என்னை விமர்சிப்பவர்களின் தேவையாதெனில் என்னை வீட்டிற்கு அனுப்பிவிட்டு துறைமுக ஒப்பந்தத்தினை கைசாத்திட்டு அதன் ஒரு பகுதியை மஹிந்த ராஜபக் ஷ விற்கு வழங்குவதாகும். நான் அவர்களிடத்தில் ஏமாற மாட்டேன். இச்செயற்பாட்டிற்கு நான் முழுமையாக எதிர்ப்பு வெளியிடுகின்றேன் என கூறி வீட்டிற்கு சென்ற ஒரு காலம் எனக்கும் இருந்தது.
இன்று நான் அவ்வாறு செய்தால் இவ்வனைத்து ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டு துறைமுகம் முழுமையாக விற்கப்பட்டிருக்கும். எனவே நாம் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். நான் என்னுடைய போராட்டத்தை கைவிடவில்லை. மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய இன்னும் பல காரணிகள் உள்ளன. அதன் பொருட்டு ஜனாதிபதி உதவுகிறார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM