(ஆர்.ராம்)
வடக்கில் படைத்தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதற்காக மாவட்ட ரீதியாக மக்கள் பிரதிநிதிகள், இராணுவ அதிகாரிகள், அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்கள் கூட்டாக அப்பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்து அவற்றை விடுவிப்பது குறித்து கலந்துரையாடல்களை நடத்துவதென தமிழ்த் தேசியக் கூடடமைப்பிற்கும் பாதுகாப்புத்தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம் எதிர்வரும் 19ஆம் திகதி முல்லைத்தீவிலும், 20ஆம் திகதி காலை யாழ்ப்பாணத்திலும், மலையில் கிளிநொச்சியிலும் இச்செயற்பாடு நடைபெறவுள்ளது.
கேப்பாபுலவில் மக்களின காணிகளை மீள கையளிப்பதற்கு படைத்தரப்பு தயாரக இருக்கின்ற அதேநேரம் மாற்று இடத்திற்கு செல்வதற்காக சிறிது கால அவகாசத்தை வழங்குமாறும் அத்தரப்பினரால் கோரப்பட்டுள்ளது.
அதேநேரம் பாலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக காணிகள் தேவைப்படுமாயின் அக்கோரிக்கையை பரிசீலனை செய்ய தயாராக இருப்பதாக அறிவித்துள்ள கூட்டமைப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி விவகாரத்திற்கு விரைவில் முடிவு கட்டப்படும் எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் பாதுகாப்புத் தரப்பின் உயர்மட்டக ்குழுவினருக்கும் இடையில் வடக்கு கிழக்கில் படையினர் ஆக்கிரமித்துள்ள காணிகளை பொதுமக்களிடத்தில் மீளக்கையளித்தல் தொடர்பிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை முற்பகல் 11மணிக்கு பாதுகாப்புச் செயலாளருடைய அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இச்சந்திப்பில் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா, யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் தேசியப்பட்டில் பாராளுமன்ற உறுப்பினரான திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவும் பங்கேற்றிருந்தனர்.
பாதுகாப்பு தரப்பில் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இராணுவத்தளபதி கிஷாந்த டி சில்வா உட்பட இராணுவ, கடற்படை, விமானப்படைகளின் உயர்மட்ட அதிகரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்திப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்ட எதிர்க்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்
ஜனாதிபதியுடனான சந்திப்பு
நானும், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து வடக்கில் நீடித்துக்கொண்டிருக்கும் காணிப்பிரச்சினைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம்.
அத்தோடு காணிகளை விடுவிக்க கோரி மக்கள் தொடர்ச்சியாக நடத்தி வரும் போராட்டங்கள் , காணிகளை விரைவில் விடுக்கவேண்டிய தேவை குறித்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம்.
காணிகளை வைத்திருக்க தற்போது என்ன தேவையுள்ளது
அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம்(நேற்று) பாதுகாப்புச் செயவாளர் இராணுவத்தளபதி மற்றும் முப்படைகளின் உயர்அதிகாரிகள் ஆகியோருடன் சந்திப்பை நடத்தியிருந்தோம். இதன்போதும் அதே விடயங்களை நாம் வலியுறுத்தினோம். குறிப்பாக யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளிடத்தில் ஆயதங்கள் இருந்தன. அவற்றைப் பயன்படுத்தி இராணுவதளங்கள் தாக்கப்படலாம் என்பதன் நிமித்தம் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டன.
தற்போது யுத்தம் நிறைவுக்கு வந்து விட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளும் இல்லை. அவர்களின் ஆயுதங்களும் இல்லை. அதேநேரம் யுத்தம் நடைபெற்ற போது விடுதலைப்புலிகள் வசமிருந்த காணிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை விடவும் மேலும் காணிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவ்வாறான காணிகள் மக்கள் பரம்பரையாக வாழ்ந்த காணிகள். மக்களுக்குச் சொந்தமான காணிகள். சில காணிகள் அரசாங்கத்தின் காணிப்பத்திரம் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகள். அவற்றை மக்களிடத்தில் மீளவும் கையளிப்பது உங்களின் கடமை.
அந்த காணிகளில் அவர்கள் வாழ்வதற்கு உரித்துடையவர்கள். அந்த உரிமையை மறுப்பது தவறானது. ஆகவே அக்கணிகளை மீளவும் மக்களுக்கு வழங்க வேண்டும் என பாதுகாப்புத் தரப்பினரிடத்தில் வலியுறுத்தினோம்.
முடிவெடுக்கும் அதிகாரம் எம்மிடத்தில் இல்லை
அதற்குப்பதிலளித்த இராணுவத்தளபதி, நாங்கள் பலத்காரமாக எந்தவிதமான காணிகளையும் வைத்திருக்க கூடிய அதிகாரம் இல்லை. காணிகள் விடுவிப்பு குறித்து முடிவெடுக்க வேண்டியது சிவில் அதிகாரத்தினை கொண்டிருப்பவர்களாவர்.
ஜனாதிபதியும் , பாதுகாப்புச் செயலாளரும் காணிகளை விடுவிக்கச் சொன்னால் அதனை விடுவிக்க வேண்டியது எமது கடமையாகும். அதனைமீறி நாம காணிகளை வைத்திருப்பதற்கு அதிகாரமில்லை. அவர்கள் கட்டளையிட்டால் காணிகளை விடுவிப்பதற்கு தயாராகவுள்ளோம் என்றார்.
மக்கள் பிரதிநிதிகளின் வலியுறுத்து
அதற்குப் பின்னர் தற்போது வடக்கில் முல்லைத்தீவில் கேப்பாபுலவு, மன்னாரில் முள்ளிக்குளம், கிளிநொச்சியில் நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் வலிகாமம் வடக்கு ஆகிய பகுதிகளில் காணப்படும் காணி விவகாரங்கள் தொடர்பாகவும் மக்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக அதிகாரிகளிடத்திர் குறிப்பிட்டோம். எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்தினார்கள்.
கேப்பாபுலவு விவகாரமும் கால அவகாசமும்
கேப்பாபுலவில் ஒரு தொகுதி காணிகளை கையளிப்பதற்கு இராணுவத்தினர் தயாராகவிருப்பதாக தெரிகின்றது. ஆனால் முக்கியமாக இராணுவ தளம் அமைந்திருக்கின்ற பிரதேசத்தில் அவர்களுக்கான முகாம் மற்றும் ஏனைய வசதிகள் அவர்களுக்கு உள்ளதாக அறிகின்றோம். இருப்பினும் அந்தக் காணிகள் தமக்கு சொந்தமான காணிகள். தனிப்பட்ட முறையில் பரம்பரையாக வாழ்ந்த காணிகள். ஆகவே அவற்றில் மீண்டும் குடியேற வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைக்கின்றார்கள்.
இவ்வாறான நிலையில் இராணுவத்தினர் அக்காணியில் இருந்து விலகுவதற்கு தயாராகவுள்ளனர். இருப்பினும் தமக்கு கால அவகாசம் தேவையாகவுள்ளது. தமது இராணுவ தளத்தை மாற்றியமைப்பதற்கு தேவையான பணத்தைப் பெற்று மாற்றிடத்திற்குச் செல்வதற்கு காலம் அவசியமாகவுள்ளதாக கூறியுள்ளார்கள்.
மாவட்ட ரீதியாக கூட்டங்கள்
இந்த விடயம் சம்பந்தமாக அங்குள்ள இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக எமது பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, எம்,ஏ.சுமந்திரன் ஆகிய மூவரும் எதிர்வரும் 19ஆம் திகதி அங்கே பிரச்சன்னமாகவுள்ளனர்.
அத்துடன் முல்லைதீவு அரசாங்க அதிபர். இராணுவ அதிகரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இராணுவத்தளம் உள்ள பகுதிக்குள் சென்று அந்த பகுதியை பார்வையிட்டு அவற்றை எவ்வாறு மீள விடுவிக்கலாம் என்பது குறித்து முடிவுகள் எடுக்கவுள்ளனர்.
வலிகாமம் வடக்கினைப் பொறுத்தவரையில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குள் ஏறத்தாழ 4500ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாது இருக்கின்றது. அதனைத்தவிர 750ஏக்கர் காணிகள் யாழ்மாவட்டத்தில் ஏனையபகுதிகளில் விடுவிக்கப்படாதுள்ளன. அவற்றையும் விடுவிக்க வேண்டுமென நாம் வலியுறுத்தினோம்.
அதன்போது கணிசமான காணிகளை விடுவித்திருக்கின்றோம். ஏறத்தாள வலிகாமத்தில் மாத்திரம் 2800ஏக்கருக்கும் அதிகமான காணிகளை விடுவித்திருக்கின்றோம். மேலும் காணிகளை விடுவிப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் பிரகாரம் அச்செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் எம்,ஏ.சுமந்திரன் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள், யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் எதிர்வரும் 20ஆம் திகதி காலை குறித்த பகுதிகளை நேரடியாக பார்வையிடுவதோடு எந்தெந்த காணிகளை விடுவிப்பது என்பது குறித்த கலந்துரையாடப்பட்டு தீர்மானிக்கப்படவுள்ளது.
அவ்விதமாகவே கிளிநொச்சியிலும் காணிகளை மீளவும் விடுவிப்பது குறித்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பாரர்ளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள், இராணுவ அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கி 20ஆம் திகதி மாலை கூட்டம் நடைபெற்ற தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.
மன்னார் முள்ளிக்குளம் காணி விவகாரம் குறித்து இவ்விதமாக அரசாங்க அதிபர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் கூட்டம் நடைபெற்று முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. வுவனியாவிலும் இவ்விதமாக காணப்படும் பிரச்சினைகள் குறித்து கூட்டமொன்றுநடைபெற்று தீர்மானிக்கப்படவுள்ளது. குறித்த இரண்டு மாவட்டங்களில் நடைபெறும் கூட்டங்களுக்கான திகதிகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
மீண்டும் கலந்துரையாடல்
இவ்விதமான கூட்டங்கள் நடைபெற்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டதன் பின்னர் நாங்கள் மீண்டும் பாதுகாப்புச் செயலாளர் அலுவலகத்தில் கூடவுள்ளோம். அதன்போது வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் காணப்படும் காணிப்பிரச்சினைகள் தொடர்பான முழமையான பட்டியலைத் தயாரிக்கவுள்ளோம். குறித்த கூட்டத்திற்கு அரசாங்க அதிபர்களையும் அழைத்து நாம் கலந்தாலேசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என தீர்மானித்திருக்கின்றோம்.
ஜனாதிபதி மீதான எதிர்பார்ப்பு
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமையவே இன்றை(நேற்று) சந்திப்பு நடைபெற்றிருந்தது. ஆகவே காணிவிவகாரம் தொடர்பில் அவரின் முழுமையான ஒத்துழைப்புக்கள் எமக்கு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.
பலாலி விமான நிலைய காணித்தேவை சாதகமாக பரிசீலிப்பதற்கு தயார்
காணிப்பிரச்சினை என்பது மிகவும் சிக்கலானதொன்றாகும். ஏமது மக்கள் இருபத்தைந்து முப்பது வருடங்களாக தமது காணிகளுக்குச் செல்லமுடியாது தவிக்கின்றார்கள். இந்த நிலைமை தொடரமுடியாது. உதாரணமாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் விமானநிலையத்தை அமைப்பதற்கு காணிகள் தேவைப்படுமாகவிருந்தால் அதனை பரிசீலிப்பதற்கு தயாரக இருக்கின்றோம்.
அக்காரணத்தின் நிமித்தம் ஏனைய காணிகள் விடுவிக்கப்படுவது தமாதப்பட வேண்டிய அவசியமில்லை அதனை நாம் வலியுறுத்தியுள்ளோம். இன்று இந்த விடயத்தை ஆரம்பித்திருக்கின்றோம். விரைவில் இவ்விடயத்திற்கு ஒரு முடிவு கட்டுவோம்.
அடுத்த தடவை கிழக்கு காணி பிரச்சினைகள்
கிழக்கு மாகாணத்திலும் இவ்விதமான காணிப்பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவை தொடர்பாக அடுத்த தடவை சந்திப்பு நடைபெறுகின்ற போது அதிக கவனம் செலுத்தவுள்ளோம் அம்மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து அவ்விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடவுள்ளோம்.
வர்த்தமானி அறிவித்தல்கள் குறித்தும் விரைவில் பேச்சு
சமீபத்தில் நாங்கள் அறிந்த வரையில் மக்கள் குடிபெயர்ந்த காணிகள் மாத்திரம் அல்ல பல்வேறு காணிகளும் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வன பகுதியாக பிரகடனம் செய்யும் நிலைமைகள் காணப்படுகின்றன. அது சற்று வேறுபட்ட பிரச்சினையொன்றாகும். வனஇலக்கா மட்டுமல்ல தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தினாலும் அவ்விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமையை நாம் அறிந்து கொண்டுள்ளோம். அவ்விடயம் சம்பந்தமாக நிச்சமாக நாம் பேச்சுவார்த்தையை நடத்துவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM