மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுமதி அளித்த உயர் அதிகாரிகளும் அதன் பிண்ணியிலுள்ள அரசியல் பிரமுகர்களும் யார் என்பது வெளிவரவில்லை. இவை வெளிக் கொணரப்பட வேண்டும். கிழக்கின் முதலமைச்சரும், வெளிநாட்டு மூலதன ஊக்குவிப்பு அமைச்சரும் இவைகள் தங்களுக்கு தெரியாதென கைவிரிக்கின்றனர். இது நாடகமா? யதார்த்தமா? என்பது மக்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் விமர்சிப்பதோடு நின்று விடக் கூடாது என மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதி. வண. கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்று வருகின்ற செயற்பாடுகள் நல்ல மனம் கொண்டவர்களுக்கு உகந்ததாக இல்லை. இச்செயற்பாடுகள் காலப்போக்கில் இம் மாவட்டத்தை அழித்தும், ஒழித்தும் விடக்கூடும். இது சம்பந்தமாக ஆயர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் ஆயர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண நிர்வாகத்தின் கீழ் தொழிற்சாலைகள் ஆரம்பிப்பதற்கு அதிகாரம் அளிப்பதும், காணி அதிகாரமும் உரித்தாக்கப்பட்டுள்ளது. ஒரு தொழிற்சாலை அமைப்பதற்கு இவ் இரு அனுமதியும் அவசியம். இவ் அனுமதிகளை வழங்க வேண்டிய முதலமைச்சர் தனக்கு இவ் விடயம் தெரியாது எனக் கூறுவது ஒரு வியப்பான காரியம். இவ் இரு அனுமதிகளும் இல்லாது தொழிற்சாலை கட்டுப்பட முடியாது. ஆனால் கட்டப்படுகிறது. ஆதலால், அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பதே நிஜம்.
அரசு, கிழக்கின் பாரிய தொழிற்சாலையான காகித தொழிற்சாலையை அழிய விட்டுவிட்டு பராமுகமாக இருக்கிறது. அதே நேரத்தில், மக்களை அழிக்கும் மதுபான தொழிற்சாலைக்கு அனுமதியும் ஊக்குவிப்பும் அளித்ததை நினைத்து கவலையடைய வேண்டியுள்ளது. இவ் அரசு மக்களை காப்பாற்றி அவர்களின் அந்தஸ்தையும் கௌரவத்தையும் உயர்த்த முற்படாது போல் தோன்றுகிறது.
எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது காலத்தையும் நேரத்தையும், செயல்களையும் அதன் விளைவுகளையும் விமர்சிப்பதிலேயே கடத்துகின்றனர். இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடாகாது. மக்களின் சேவகர்கள் மக்களுக்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளையே செய்ய வேண்டும். விமர்சிப்பதை மக்கள் கேட்பார்கள். அது அவர்களுக்கு தற்காலிக சந்தோசத்தை அளிக்கும்.
ஆனால் மக்கள் அதனால் மேம்பாடு அடைவார்களா என்பது சிந்திக்க வேண்டிய விடயம். பாரிய அளவிலான இறால் பண்ணைகைளை அரச செலவில் ஆரம்பித்து மக்களுக்கு இனாமாக வழங்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் முன் வந்த போது அத்திட்டம் வேண்டாம் என்று போராடினீர்கள், எதிர்த்தீர்கள் அது போன்று மதுபான தொழிற்சாலை வேண்டாம் என்கிறீர்கள்.
எல்லாவற்றையும் எதிர்ப்பதும் விமர்சிப்பதும் இலகுவானது. பிழையானதை எதிர்ப்பதில் தவறேதும் இல்லை. மக்களுக்கு தொழில் வாய்ப்பை, இலாபத்தை, சௌகரிய வாழ்க்கையை வழங்கவும் அபிவிருத்தி காணவும் திட்டங்கள் வேண்டும். அவைகள் உங்களால் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதவி வகித்த எம்மவர்கள் செய்த சேவைகள் நினைவு கூரத்தக்கவைகள். நல்லையா மாஸ்டர், இராஜன் செல்வநாயகம், தேவநாயகம், சொல்லின் செல்வன் இராஜதுரை அந்த வகையில் மறக்க முடியாதவர்கள். உங்கள் பதவிக் காலத்தையும், நீங்கள் தொடங்கிய வேலைத்திட்டங்களையும் அவைகளால் வழங்கப்படும் பொருளாதார சமூக நல அபிவிருத்திகளையும் கணக்கிட்டு பாருங்கள். உங்கள் பெறுபேறுகளை நீங்களே அறிய முடியும்.
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியை கிராமம் கிராமமாக பங்கீடு செய்வதற்கே பாராளுமன்ற உறுப்பினர் பதவி என மட்டுப்படுத்தலாகாது. வடக்கு மாகாணத்த்தை பாருங்கள் அங்கு வெளிநாட்டு தூதுவர்களும் புலம் பெயர் அமைப்புக்களும் தங்கி நின்று அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுகிறார்கள். இங்கு கிழக்கு வெறிச்சோடிப் போய் கிடக்கிறது
கிழக்கில் காணி வழங்கும் அதிகாரம் மாகாண சபைக்கு உரியது. வாகரைப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் கொழும்பில் உள்ள கோட்டுச் சூட்டுப் போட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் பட்டி தொட்டியெல்லாம் பிரசாரம் செய்கிறார். அவர் கூறியதில் உண்மைகள் நிறைந்துள்ளது. அவர் யாருக்கும் விலை போகாதவர், பல் இழிக்காதவர்.
ஐக்கியத் தேசியக் கட்சியின் அரசியல் வாதிகள் தமது உழைப்பிலே அக்கறை காட்டுகிறார்கள். அவர்களுடைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க வாழைச்சேனை காகித தொழிற்சாலையை மூடி விடும் படலத்தை ஆரம்பித்துள்ளார்.
அப்படி மூடும் போதுஇ அக் காணிகளை கையகப்படுத்த அயலில் உள்ள ஆயிரம் ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். தொழிற்சாலைக்கு பொறுப்பான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இதற்கு உடந்தையா? உதவியா? என்று புரியவில்லை. சீன அரசு இதன் புனருத்தாரணத்திற்கு சகல உதவிகளை வழங்க காத்திருக்கும் போது அமைச்சரும் பிரதமரும் அர்த்தமற்ற செயற்பாடுகளில் இறங்கியிருப்பது ஏன் என்று தெரியவில்லை.
மட்டக்களப்பின் ஒரு சில உயர் அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் மட்டக்களப்பை விழுங்கி ஏப்பம் விடக்காத்திருப்பது போல் தெரிகிறது. இவர்களுக்கு எதிராக மக்கள் ஜனநாயக ஆர்ப்பாட்டத்தையும் ஊர்வலத்தையும் ஏற்படுத்த வேண்டும். அவர்களின் உருவப் பொம்மைகளை வீதியில் போட்டு எரிக்க வேண்டும் அப்போது தான் அவர்கள் திருந்துவார்கள். அத்தோடு இம் மாவட்டத்தையும் விட்டு அகலுவார்கள்.
ஊடகவியலாளர்கள் சாதாரணமாக மக்களின் குறை நிறைகளையும் அவர்களுக்கு ஏற்படும் இன்ப துன்பங்களையும் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுபவர்கள். மதுபான தொழிற்சாலையால் அவ் இரு ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டிருக்கலாம் என்று மக்கள் சந்தேகப்ப டுகிறார்கள். உண்மையை வெளிக்கொணர முயற்சிக்கும் ஊடகவியலாளர்களை தாக்குவது என்பது ஒரு மிலேச்சத்தனமான செயல்.
தாக்கியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. அரசும் அரச உயர் அதிகாரிகளும் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று அவ்வூடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM