புதிய அரசியலமைப்புக்காக சர்வஜன வாக்கெடுப்பைக் கோரும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சர்வஜன வாக்கெடுப்பின் பின்னர் பிரதமர் பதவியில் மஹிந்தவா ரணிலா அமரவேண்டும் என்பதனையும் தீர்மானிக்கவேண்டும் என்று சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
காரணம் புதிய அரசியலமைப்புக்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினால் நிச்சயம் அரசாங்கம் ஆட்டம்காணும். மஹிந்தவின் அரசாங்க கவிழ்ப்பு முயற்சியும் சாத்தியமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தை 2017 ஆம் ஆண்டில் கவிழ்க்கவேண்டும் என்ற மஹிந்த ராஜபக்ஷவின் பொறியில் எதிர்க்கட்சி தலைவர் சம்மந்தன் மற்றும் மங்கள சமரவீர , சந்திரிகா குமாரதுங்க, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சிக்கிவிட்டனர்.
சர்வஜன வாக்கெடுப்பு குறித்த இவர்களின் நோக்கம் நல்லதாக இருக்கலாம். ஆனால் அதன் விபரீதத்தன்மை புரியாமல் சர்வஜன வாக்கெடுப்பைக் கோருகின்றனர்.
மேலும் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் வகையிலான அரசியலமைப்பில் திருத்தத்தை செய்வதே தற்போதைய நிலைமையில் பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு விவகாரம் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு நிலைமை என்பன குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரெரா இந்த விடயம் குறித்து குறிப்பிடுகையில்,
நீண்டகாலத்துக்குப் பின்னர் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எனவே அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விரைந்து இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காணவேண்டியது அவசியமாகும்.
இந்நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தி தீர்வைக்காணலாம் என ஐக்கிய தேசிய கட்சி கூறிவருகின்றது. ஐக்கிய தேசிய கட்சி மட்டுமன்றி எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மங்கள சமரவீர மனோ கணேசன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் சர்வவஜன வாக்கெடுப்பு அவசியம் என்று கூறிவருகின்றனர்.
ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது புதிய அரசியலமைப்பை கொண்டுவராமல் அரசியலமைப்பு திருத்தத்தை முன்னெடுத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
காரணம் புதிய அரசியலமைப்பை தயாரித்து சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்றால் அது அரசியல் காரணங்களுக்கு உட்படுத்தப்பட்டு தோல்வியடையும் நிலைமை ஏற்படலாம். இதன்மூலம் 2017 ஆம் ஆண்டு ஆட்சியை கவிழ்ப்பேன் என்று கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூற்று சாத்தியமாகும் நிலை ஏற்படும்.
அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் என்று உறுதிபட கூறுகின்றமையின் காரணமாகவே அரசாங்கத்தை கவிழ்ப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கூறுகிறார். இதனை புரிந்துகொள்ளாத சம்மந்தன் மங்கள சந்திரிகா ரவூப் ஹக்கீம் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மஹிந்த ராஜபக்ஷவின் பொறியில் சிக்கிவிட்டனர் என்றே கூறவேண்டும்.
இவ்வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தபடவேண்டும் என்று கோரினார். அது அவர் உயரிய நோக்கத்துடன் கூறிய விடயமாக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு விடயத்தை புரிந்துகொள்ளவேண்டும்.
அதாவது புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பைக் கோரும் எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் சர்வஜன வாக்கெடுப்பின் பின்னர் பிரதமர் பதவியில் மஹிந்தவா ரணிலா அமரவேண்டும் என்பதனையும் தீர்மானிக்கவேண்டும். காரணம் புதிய அரசியலமைப்புக்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினால் நிச்சயம் அரசாங்கம் ஆட்டம்காணும். மஹிந்தவின் அரசாங்க கவிழ்ப்பு முயற்சியும் சாத்தியமாகும் அபாயம் உள்ளது. இதனை சர்வஜன வாக்கெடுப்பை கோரும் தரப்புக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது மிகவும் முக்கியமான கட்டத்துக்கு வந்துள்ளது. அதாவது பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்ற கட்டத்துக்கு சுதந்திரக் கட்சி வந்துள்ளது. எனவே புதிய அரசியலமைப்புக்கு செல்லாமல் தற்போதைய அரசியலமைப்பை திருத்துவதே பொருத்தமாக அமையும்.
மாறாக சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்றால் நிலைமை மோசமாகிவிடும். சிறிலங்கா சுதந்திரக் கட்சி இந்த விடயத்தில் மிகவும் உறுதியாக இருக்கின்றது. எம்மிடம் இது தொடர்பில் தெளிவான நிலைப்பாடு உள்ளது. சர்வஜன வாக்கெடுப்பை கோருகின்றவர்களின் நோக்கம் நல்லதாக இருக்கலாம். ஆனால் அதன் விபரீதத்தன்மை புரியாமல் சர்வஜன வாக்கெடுப்பைக் கோருகின்றனர். இந்த விடயத்தில் அரசியல் கள நிலையை புரிந்துகொண்டு செயற்படவேண்டியது அவசியமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM