தாஜுதீன் கொலை தொடர்பில் ஆதரமாக இருந்த சி.சி.டி.வி காணொளி தெளிவில்லாத காரணத்தால் தகவல்களை பெறமுடியாமலுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
மேலும்,பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மர்ம மரணம் தொடர்பிலான சி.சி.ரி.வி.கண்காணிப்பு கமரா பதிவுகளை அமெரிக்காவின் எப்.பி.ஐ., எம்.பி.எஸ் அல்லது இங்கிலாந்தின் ஸ்கொட் லன்ட் யார்ட் சட்ட விஞ்ஞானம் தொடர்பிலான ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி பரிசோதனைக்கு உட்படுத்துவது சிறந்ததாக அமையும் என கொழும்பு பல்கலைக்கழகம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸிடம் நேற்று அறிக்கை ஒன்றூடாக இந்த விடயத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞான பிரிவு அறிவித்தது.
தாஜுதீன் விவகாரத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ள சீ.சீ.ரி.வி. காட்சிகள் தொடர்பில் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞான பிரிவு ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் 14 நாட்களுக்குள் அது தொடர்பிலான அறிக்கையை மன்றுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் தேவை ஏற்படும் பட்சத்தில் வெளி நாட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதற்கும் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவு பிறப்பித்த நிலையிலேயே நேற்று அவ்வறிக்கை சமர்பிக்கப்பட்டது.
நீதிமன்ற விடுமுறையின் பின்னர் மன்றின் நடவடிக்கைகள் நேற்று முன் தினம் முதல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இடையீட்டு மனுவொன்றூடாக வஸீம் தாஜுதீன் விவகாரம் தொடர்பிலான வழக்கினை நேற்று மீண்டும் திறந்த மன்றுக்கு விசாரணைக்கு எடுத்தபோதுகொழும்பு பல்கலைக்கழக்த்தின் கணினி விஞ்ஞான பிரிவு இந்த அறிக்கையை சமர்ப்பித்தது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கையளிக்கப்பட்ட சீ.சீ.ரி.வி.காட்சிகளில் சந்தேகத்துக்கு இடமான வாகனம் ஒன்று உள்ளது. எனினும் அந்த காட்சிகளின் தெளிவின்மை மற்றும் எமது ஆய்வுகூடத்தில் உள்ள தொழில் நுட்ப கட்டுப்பாடுகள் காரணமாக அந்த வாகனத்தின் இலக்கத் தகட்டைக் கூட சரியாக அடையாளம் காண முடியாதுள்ளது.
நாரஹேன்பிட்டி மற்றும் கிருளப்பனை ஆகிய பகுதிகளில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படும் அந்த நான்கு சீ.சி.ரி.வி.காட்சிகளையும் நாம் சோதனைக்கு உட்படுத்தினோம். எனினும் வீதி விளக்குகளின் வெளிச்சம் மற்றும் வாகனத்தின் வெளிச்சத்துக்கு மத்தியில் பதிவாகியுள்ள இந்த வீடியோ காட்சிகளில் இலக்கத் தக்கட்டை தெளிவாக அடையாளம் காண முடியாதுள்ளது.
அத்துடன் டப்ளியூ.பீ.கே.யூ - 6543 என்ற சந்தேகத்துக்கு இடமான வாகனத்தில் பயணிப்பவர்களை அடையாளம் காண முடியாதுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2015 டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற வஸீம் தாஜுதீன் விவகாரம் தொடர்பிலான வழக்கின் போது, குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி விமலசிரி ரவீந்திர நீதிமன்றுக்கு சமர்ப்பித்த மேலதிக விசாரணை அறிக்கையில்
' நாம் முன்னெடுத்த விஷேட விசாரணைகளுக்கு அமைவாக நாரஹேன்பிட்டி பிரதான சந்தி மற்றும் கிருளப்பனை சந்தி ஆகியவற்றில் உள்ள சீ.சீ.ரி.வி. கண்காணிப்பு கமராக்கள் ஊடாக இந்த விவகாரத்துடன் தொடர்புபட்ட சில பதிவுகளை மீட்டுள்ளோம்.
அவை தற்போது மேலதிக ஆய்வுகளுக்காக கொழும்பு பலக்லைக்கழகத்தின் கணினி விஞ்ஞான ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த சீ.சி.ரி.வி. காட்சிகளில் தெளிவிண்மை காரணமாகவே அவற்றை நாம் ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்.
அதில் குறிப்பிட்ட நேரத்தில் அந்த இரு சந்திகளிலும் தாஜுதீனுடையது என சந்தேகிக்கத்தக்க வகனம் அங்குமிங்கும் பயணிக்கின்றது. இவ்வாறு இரு சந்தர்ப்பங்கள் பதிவில் உள்ளன. அத்துடன் அந்த காரினைப் பின் தொடர்ந்து மேலும் ஒரு வாகன தொடரணி வேகமாக பயணிப்பதும் எமது அவதானிப்புக்கு உட்பட்டுள்ளது. எனினும் தெளிவற்ற அந்த படங்களை வைத்து ஸ்திரமான ஒரு முடிவினை எம்மால் எடுக்க முடியாமல் உள்ளது. உண்மையில் அந்த கார் வஸீமுடையதா, பின்னால் தொடர்ந்து வரும் வாகனத் தொடரணி யாருடையது மற்றும் அதில் உள்ளவர்கள் யார் போன்ற கேள்விகளுக்கு விடை காணவே மேலதிக ஆய்வுகளுக்கு அந்த கண்காணிப்பு கமரா பதிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நான்கு மணி நேர பதிவினைக் கொண்ட அந்த சீ.சி.ரீ.வி. பதிவுகள் நான்கு இறுவட்டுக்களாக ஆய்வுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளன. அதன் அறிக்கை கிடைத்ததும் அது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க முடியுமாக இருக்கும். என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அப்போது உத்தரவுகளைப் பிறப்பித்த கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ்,' குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைகளை இந்த மன்று கவனத்தில் கொள்கின்றது. கடந்த 2015.03.09 ஆம் திகதி முதல் இந்த வழக்கு எனது வழி நடத்தலில் விசாரிக்கப்படுகின்றது. அவ்வப்போது தேவையான அனைத்து உத்தரவுகளையும் நான் பிறப்பித்து வருகின்றேன். கடந்த 9 மாதங்களாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் குறைந்த காலப்பகுதிக்குள் நிறைவேற்றத் தக்கதாகவே அமைந்திருந்தன. எல்லா உத்தரவுகளையும் ஒறு மாதத்துக்குள் நிறைவேற்றும் விதமாகவே நான் வழங்கி வந்தேன்.
இந் நிலையில் கைப்பற்றப்பட்ட சீ.சி.ரி.வி. கட்சிகள் தொடர்பிலான ஆய்வறிக்கை இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. அதன்படி அந்த அறிக்கையினை அடுத்து வரும் 14 நாட்களுக்குள் மன்றில் சமர்ப்பிக்க கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞான நுட்பப் பிரிவுக்கு நான் கட்டளை பிறப்பிக்கின்றேன். இந்த கால அவகாசம் போதாது என அவர்கள் கருதினால் மன்றில் முன்னிலையாகி போதுமான கால அவகாசத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த அறிக்கையை முன் வைப்பதற்காக குறித்த சீ.சீ.ரி.வி. காட்சிகளை ஆராய இலங்கையில் உள்ள தொழில் நுட்பங்கள் போதுமானதாக இல்லையெனில் வெளி நாட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்துமாறு நான் ஆலோசனை வழங்குகின்றேன். அவ்வாறு வெளி நாட்டு தொழில் நுட்பம் தேவைப் படின் அது தொடர்பில் அந்த 14 நாட்களுக்குள் அறிவித்து அனுமதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.' என உத்தரவிட்டிருந்தார்.
தாஜுதீன் கொலையுடன் சம்பந்தப்பட்ட சி.சி.டி.வி காணொளியின் தரவுகளை மேலதிக பரிசோதனைக்காக கொழும்பு பல்கலைக்கழகத்திடம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM