‘நி யூட் கல்ச்சர்’ - அதாவது, நிர்வாணக் கலாசாரம் - பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால், உங்களுக்கு ஏறக்குறைய ஐம்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்று அர்த்தம்! உலக மயமாக்கல், ‘க்ளோபல் வில்லேஜ்’ போன்ற நவீன தத்துவங்களின் ‘பின் நவீனத்துவ’ விகார வடிவம் இந்த நியூட் கல்ச்சர்!
வளரிளம் குழந்தைகள், பதின்பருவத்து விடலைகள், திருமணத்துக்காகக் காத்திருக்கும் யுவன்,-யுவதிகள், அன்புக்காக ஏங்கும் இல்லத்தரசிகள் என்று பலரும் இன்று இந்த நியூட் கல்ச்சரின் பிரதிநிதிகளாக விளங்குகிறார்கள், இதன் கொடூர முகம் பற்றித் தெரியாமலேயே! அது தெரியவரும்போது, உயிரை மாய்த்துக்கொள்ளும் தவறான முடிவை எடுத்துவிடுகிறார்கள்.
பெண்கள் - வயது வித்தியாசமின்றி - தற்கொலை செய்துகொள்ளும் செய்திகளை நாளாந்தம் பார்க்கிறோம், கேட்கிறோம், படிக்கிறோம்! ஆனால், அச்செய்திகள் மீதான ஆர்வம், அந்த மரணங்களின் பின்னணியை ஆராய்வதில் இல்லாமல் போய்விடுகிறது. அப்படி ஆராய்ந்து பார்ப்போமேயானால் கணிசமான உயிர்கள் பறிக்கப்பட்டதற்கு இந்த நியூட் கல்ச்சரே காரணம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
‘எங்களிடம் இன்பம் பெறுவதற்காக ஆண்கள் அன்பைக் கொட்டுகிறார்கள்; அவர்களது அன்பைப் பெறுவதற்காக நாம் இன்பத்தைக் கொட்டுகிறோம்’ - நியூட் கல்ச்சரின் பயங்கரம் தெரியாத ஒர் இளம் மாணவி அதற்குக் கொடுக்கும் வரைவிலக்கணம் இது! ஜீரணிக்க முடியவில்லை, அல்லவா?
நியூட் கல்ச்சர் என்றால் என்ன?
தமது நிர்வாணத் தோற்றத்தை (பெரும்பாலும்) தனது காதலனுக்கு படம் பிடித்து அனுப்புவதே நியூட் கல்ச்சரின் அரிச்சுவடி! காதல் வயப்பட்ட இளம் பெண்கள், மாணவிகள் தம் காதல் மீதும் காதலன் மீதும் முழு நம்பிக்கை வைத்திருப்பதை உறுதிசெய்வதற்கு அச்சாரமாக தமது நிர்வாணப் படங்களையும் வீடியோக்களையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள் அல்லது பகிர்ந்துகொள்ளப் பணிக்கப்படுகிறார்கள். ‘காதலை நிரூபிக்க நிர்வாணப் படத்தைக் கேட்கிறானே?’ என்ற சந்தேகம் கிஞ்சித்தும் இன்றி ஒரு சில நொடிகளில் தனது அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ளத் துணிகிறார்கள் பெண்கள்! இன்றைய காதலர் சமூகம் தமது தார்மீகக் கடமையாக எண்ணி இதைச் செய்யத் தொடங்கியிருப்பது, இதன்பாலான ஈர்ப்பின் வீரியத்தை வெளிக்காட்டுகிறது.
பிரச்சினை என்னவென்றால், இப்போது இலங்கையிலும் இந்தக் கலாசாரம் பரவத் தொடங்கிவிட்டது என்பதுதான்!
பாதிக்கப்படுபவர்கள் யார்?
2015ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வெவ்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட மாணவியர் தமது அந்தரங்க / நிர்வாணப் புகைப்படங்கள் இணையதளங்களில் கசிந்திருப்பதாக ‘க்ராஸ்ரூட்டட் ட்ரஸ்ட்’ என்ற அமைப்பில் புகார் செய்திருக்கின்றனர். இச்செய்தி நிச்சயம் பதின்பருவப் பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர் மனங்களைக் கிலிகொள்ளவே செய்யும்.
பதிவுசெய்யப்பட்ட புகார்கள் மட்டும்தான் இவை என்றால், வெட்கத்தாலும், பயத்தாலும், இப்படியொரு அமைப்பு இருப்பது பற்றி அறியாமையாலும் இன்னும் எத்தனை மாணவியர் தமக்குள்ளேயே போட்டு மூடியிருப்பர்? எத்தனை பேர் அதனுடன் சேர்த்து தம்மையும் மண்ணுக்குள் மூடியிருப்பர்?
மாணவியர் மட்டுமல்ல! இளம் பெண்கள், இல்லத்தரசிகள் எனப் பலரும் வயது, நிலை என்ற எந்த வித்தியாசமும் இன்றி நியூட் கல்ச்சருக்குப் பலியாகி வருகின்றனர்.
கலவியின்பால் ஆர்வம் சற்று அதிகமுள்ள பெண்கள் தமது அந்தரங்க உறுப்புக்களைப் படம் பிடித்து அனுப்புகிறார்கள், ‘கண்டுபிடித்துவிட முடியாது’ என்ற நினைப்பில்! ஆனால், படங்கள் அல்லது வீடியோக்கள் அனுப்பப்பட்ட கணினி, இணையதள இணைப்பு போன்றவற்றை ஆராய்ந்து அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பெண்ணை ஒரு சில நாட்களில் மடக்கிவிடுகிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்!
ஏன், எப்படி நடக்கிறது இந்த அக்கிரமம்?
பல காரணங்கள் உண்டு என்றாலும், அடிப்படை என்னவோ காதல்தான்!
காதல் பூத்ததும் ஆண்- பெண் பேதம் மறந்த நிலையில் காதலனை முழுமையாக நம்பும் பெண்கள் தமது அந்தரங்கத்தைப் படமாக அனுப்பி வைக்கிறார்கள். அவனும் அதை பத்திரமாகவே வைத்திருக்கிறான். ஆனால், என்றோ ஒருநாள் அவர்களுக்குள் பிரிவு முளைவிடும்போது அவளைப் பழிவாங்கும் ஆபத்து, அவனது கைக்கெட்டிய தூரத்திலேயே இருக்கிறது!
கணவனைப் பிரிந்த இளம் பெண்கள், அலைபேசியில் இதுபோன்ற பாதுகாப்பான (?) வடிகால்களைத் தேடிச் சென்று சிக்கிக்கொள்கிறார்கள்.
இதுபோன்ற நிர்வாணப் படங்கள், வீடியோக்களை வாங்குவதற்கென்றே சில இணையதளங்கள் உண்டு. இவ்வாறான படங்களைத் தங்கள் இணையதளத்தில் பகிர்வதற்கு அவை கொடுக்கும் விலை என்ன தெரியுமா? அந்த இணையதளத்தின் சீவிய கால உறுப்பினர் என்ற தகுதியை மட்டுமே!
பெண்ணையும் அவளது கௌரவத்தையும் அறியாத சிலர், இதையே வேலையாகச் செய்து வருகிறார்கள். தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் நிர்வாணப் படம் கிடைத்துவிட்டால் போதும். அதை வைத்துக்கொண்டு, ‘உனது தோழியர் எவரதும் நிர்வாணப் படத்தைத் தந்துவிட்டால் நீ தப்பித்துவிடுவாய். இல்லையேல் உனது மானம் கப்பலேறும்’ என்று மிரட்டுகிறார்கள். அந்த மிரட்டலுக்குப் பணிந்தாலும், பணியாவிட்டாலும் அந்தப் பெண்ணின் படம் இணைய மேடை ஏறுவது சர்வ நிச்சயம்!
இதில் மிகப் பரிதாபமானது என்னவென்றால், ஒரு பெண்ணின் நிர்வாணப் படம் இல்லாமலேயே தன்னிடம் இருப்பதாகச் சொல்லி தங்களது காரியத்தைச் சாதித்துக்கொள்கிறார்கள் சில கயவர்கள்!
தனது காதலனை நம்ப வைப்பதற்காக அனுப்பப்படும் தனது நிர்வாணப் புகைப்படம், கண்டவர்களும் சுய இன்பம் காண்பதற்கான கருவியாகப் பயன்படும் என்பதைப் பெண்கள் கனவிலும் நினைத்துப் பார்ப்பதில்லை!
இன்னொரு முக்கிய காரணமும் உண்டு
இரு பாலினரையும் நமது சமூகத்தில் வளர்க்கும் விதமும் இந்தக் குற்றங்களுக்கு குறைந்தபட்சத் துணை செய்கிறது என்பது மற்றொரு அதிர்ச்சி! வயதுக்கு வந்த பெண்ணை ஆண்களுடன் குறைந்தபட்ச நட்பேனும் பாராட்ட விடாமல் செய்யும் சமூகத் தளை, வளரிளம் பெண்களை இத்தகைய படுகுழியில் தள்ளிவிடுகிறது. மேலும் கலவியின்பால் நாட்டமுள்ள பெண்கள் அதற்கான வாய்ப்புகள் கிடைக்காததாலும் இதுபோன்ற மோசடிப் பேர்வழிகளிடம் விழுந்துவிடுகிறார்கள்.
எது எப்படியானாலும், தமது சுயவிருப்பின் பேரிலேயே தமது அந்தரங்கத்தைப் பிற ஆண்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
யார் அடைகிறார்கள் இலாபம்?
காதலில் தோற்ற ஆண்கள் பழிவாங்கிவிட்டதாகத் திருப்தியடைந்தபோதும், இதன் பின்னணியில் ஒரு பாரிய வலையமைப்பே இருக்கிறது.
ஆபாசப் படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் தரவேற்றி, ஆண்களைச் சூடேற்றிக் குளிர்காயும் இணையதளங்கள், தமது இணையத்துக்கான ‘ட்ரெஃபிக் ரேட்’டை உயர்த்திக்கொள்கின்றன. இதன்மூலம் உள்ளாடை விளம்பரம் முதல் வயாக்ரா விளம்பரம் வரை இந்த இணையதளங்களில் குவிகின்றன. இதன்மூலம் இணையதளங்கள் சம்பாதிப்பது மாதத்துக்கு ஆயிரக்கணக்கான டொலர்கள்!
மேலும், பெண்களின் உடல் பாகங்களைக் குறிப்பிடும் கொச்சையான வார்த்தைகளை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றிவிடுகிறார்கள். இதனாலும் இந்த இணையதளங்களுக்கான கேள்வி அதிகமாகிவிடுகிறது. இதன்மூலமும் தங்களது தளத்தின் பண மதிப்பைக் கூட்டிக்கொள்கின்றன இந்தத் தளங்கள்!
உலகளாவிய ரீதியில் பிரபலமாக விளங்கும் ஆபாச இணையதளங்கள் பலவற்றிலும் ‘இலங்கை’ என்ற ஒரு தனிப் பிரிவே தரப்பட்டிருக்கிறது. இதில், ஸ்மார்ட்ஃபோன்கள் வாயிலாகப் பிடிக்கப்பட்ட மேற்படி ‘காதலுக்காகத் தம்மையே துறந்த’ பெண்களின் படங்கள், வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. இது, இலங்கைப் பெண்களின் அந்தரங்கத்துக்கு சர்வதேச அளவில் எவ்வளவு வரவேற்பு (?) இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
எப்படித் தடுப்பது அல்லது தவிர்ப்பது?
நிர்வாணக் கலாசாரத்தைத் தடுப்பதற்கு பல்வேறு சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மேலும், அந்த சட்டதிட்டங்கள் எளிமையானவையாகவும், உணர்வுபூர்வமாக அணுகக்கூடியதாகவும், பயமுறுத்தாததாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
தற்போது நம் நாட்டில் இணையக் குற்றங்களைத் தடுப்பதற்கான ஒரு தனிப் பிரிவு இருக்கவே செய்கிறது. ஆனால், பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் தமது புகார்களைப் பதிவு செய்ய விரும்பினால், அவர்கள் தமது பெற்றோருடனேயே சமுகமளிக்கவேண்டியிருக்கிறது. இது, பாதிக்கப்பட்ட பெண்ணைப் பெரும் அசௌகரியத்துக்குள்ளாக்குகிறது. இதில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம்.
பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் நிச்சயமாக பாடசாலை மாணவியராகவே இருக்கமுடியும். அப்படியாயின், அவர்கள் தமது நம்பிக்கைக்குரிய ஆசிரியையுடன் வந்து புகார் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்படவேண்டும். இதற்கு, பாடசாலைகளில் ஆசிரியர் - மாணவர் உறவு வலுவுடையதாக இருக்கவேண்டியதும் தவிர்க்கப்பட முடியாத காரணியே! இதுபோன்ற விடயங்கள் ஊடகங்களில் கசியாமல் பார்த்துக்கொள்ளப்பட வேண்டியதும் அவசியமே!
அதேவேளை, பாதிக்கப்பட்ட பெண் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், அவர் தனித்துப் புகாரளித்து சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யலாம்.
ஆனால்... இந்த விடயத்தில் தடுப்பதை விடத் தவிர்ப்பதுதான் சற்று எளிதானதாக இருக்கும். தமது பிள்ளைகளுடன் - குறிப்பாக, பதின்பருவத்துப் பிள்ளைகளுடன் - நெருங்கிய உறவைப் பேணுவது பெற்றோரது கடமையாக இருக்க வேண்டும். ஸ்மார்ட்ஃபோன்களைப் பிள்ளைகளிடம் இருந்து பறித்தெடுத்தால் பிரச்சினை முடிந்தது என்று நினைப்பீர்களானால் அதைப் போன்ற ஒரு அறிவிலித்தனம் வேறெதுவும் இருக்க முடியாது!
வயது வந்த பெண் பிள்ளைகளைத் தொட்டுப் பேசுவதைத் தவிர்க்க நினைக்கும் தந்தையர் தமது எண்ணத்தைச் சற்று மீள்பரிசீலனை செய்வது அவசியம்! பாலியல் பற்றியோ, பகிடிவதை பற்றியோ, வீதியோர ரோமியோக்கள் பற்றியோ பிள்ளைகள் பேசும்போது அவற்றைத் தவிர்க்க நினைக்கும் பெற்றோரின் மனோபாவம் மாற வேண்டும்.
‘எந்த விடயம் பற்றியும் என் பெற்றோருடன் பேசலாம், விவாதிக்கலாம்’ என்ற வெளி உருவாக்கப்படுமிடத்து பிள்ளைகளின் சுய பாதுகாப்பு குறித்துப் பெரிதும் கவலைகொள்ள வேண்டியிராது.
ஆண் பிள்ளைகளின் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
ஒருவேளை தனது மகன், நண்பி அல்லது காதலி ஒருத்தியின் நிர்வாணப் புகைப்படத்தைக் கசியவிட்டு அது கண்டுபிடிக்கப்பட்டால், ‘படத்தை அனுப்பிய பெண்ணைக் கண்டியுங்கள்’ என்றும், ‘அந்தப் பெண் ஒழுக்கமானவளாக இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது’ என்றும், ‘இப்படியெல்லாம் படத்தை அனுப்பும் அந்தப் பெண் எப்படிப்பட்டவளோ?’ என்று விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். அந்தப் பெண் வைத்திருக்கும் நம்பிக்கையை தங்கள் மகன் உடைத்துவிட்டதை முதலில் ஒத்துக்கொள்ள வேண்டும். தங்கள் மகன் மீது அந்தப் பெண் கொண்டிருக்கும் காதலின் அளவைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவோ, தவிர்க்கவோ ஆண்- பெண் இருபாலரதும் பெற்றோரும் ஒன்றிணைந்து செயற்படுவது தவிர்க்கப்பட முடியாதது.
பெண்ணின் கௌரவத்தை, அவளது ஆளுமையைத் தங்கள் மகன்களிடம் தெளிவுபடுத்தவேண்டியது ஒவ்வொரு தாயினதும் கடமை என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது.
ஆண்- பெண் பால் பேதமே இந்தப் பிரச்சினையின் அடி நாதம் என்பதால் பால் சமத்துவத்தை நம் பிள்ளைகளிடம் புரியவைப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். இதில் கல்வித் துறையும் கவனம் செலுத்த வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM