மகிந்த அரசு செய்யாத மிக மோசமான செயலை நல்லாட்சி அரசு செய்கிறது : வடக்கு விவசாய அமைச்சா் ஐங்கரநேசன்

Published By: Priyatharshan

10 Feb, 2017 | 03:49 PM
image

நாசுக்கான முறையில் இனிப்பு தடவிய நஞ்சுகளாக அபிவிருத்தி என்று சொல்லி சொல்லி  எங்களிடம் இருக்கின்ற அத்தனை அதிகாரங்களையும் பறிக்கின்ற நடவடிக்கைகளுக்கு தற்போதைய அரசு தயாராகி வருதுடன் பறித்துக்கொண்டும் இருக்கின்றாா்கள் என வடக்கு மாகாண விவசாய அமைச்சா் பொ. ஜங்கரநேசன் தெரிவித்தார்.


இரணைமடு பாரிய நீா்பாசன திட்ட முகாமைத்துவ அலுவலக கட்டிட திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவா் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

புதிய அரசியலமைப்பு திருத்தம்  பற்றி பேசப்பட்டுக்கொண்டே, எம்மிடம் இருக்கின்ற அதிகாரங்களையும் பறிக்கின்ற  நிகழ்ச்சி நிரலுக்குள் இந்த அரசு சென்றுகொண்டிருக்கிறது.

நான் இந்த அரசியலில் இருக்கின்றவன் என்ற அடிப்படையில் வெளிப்படையாகவே கூறுவேன் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தன்னுடைய அரசாங்கத்தில் போர்தான் தொடுத்தாா், சத்தங்களும்,வெடிச்சத்தங்களும்தான் முழங்கிகொண்டிருந்தன. ஆனால் அந்தச் சந்தர்ப்பங்களில் இவ்வாறான அதிகாரப் பறிப்புக்கள் அதாவது மாகாண சபைகளுக்கோ, தமிழ் மக்களுக்கோ இருக்கின்ற அதிகாரங்களை பறிக்கின்ற நிகழ்ச்சி நிரல்கள் இவ்வாறு இடம்பெறவில்லை.

இன்று மிகவும் நாசுக்கான முறையில் இனிப்புத் தடவிய நஞ்சுகளாக அபிவிருத்தி என்று சொல்லி சொல்லி  எங்களிடம் இருக்கின்ற அத்தனை அதிகாரங்களையும் பறிக்கின்ற நடவடிக்கைகளுக்கு தற்போதைய அரசு தயாராகி வருகின்றது. பறித்துக்கொண்டும் இருக்கின்றாா்கள்.


இந்த அரசாங்கத்தின் பெயரில் நல்லாட்சி என்ற சொல் ஒட்டிக் கொண்டிருப்பதால், பெரும்பாலானவர்கள் இந்த அரசாங்கம் நல்லதையே செய்யும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மைநிலை அவ்வாறு இல்லை. கடந்த அரசாங்கம் துப்பாக்கி வேட்டுகள் முழங்க, முழங்க எல்லாவற்றையும் செய்தது. அதனால், அந்த அரசாங்கம் எங்களுக்குப்பாதகமாகச் செயற்படுகிறது என்று நாங்கள் யாருக்கும் விளக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.

ஆனால், இந்த அரசாங்கம் சத்தமில்லாமல், மிகவும் நாசூக்காகச் சட்டங்களின் மூலம் எங்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் பறிக்க எத்தனிக்கிறது. 


நாங்கள் இராணுவத்துக்காக நிலங்களைப் பறிக்க வேண்டாம் என்று போராடுகின்றோம். ஆனால்,அரசாங்கம் இப்போது இரணைமடுக் குளத்துக்கு அருகாமையில் 300 ஏக்கர் காணியைத் தாவரவியல் பூங்கா அமைப்பதற்குத் தருமாறு கோருகிறது.

இது ஒரு வகையில் மறைமுகமாக முன்னெடுக்கப்படும் நிலப்பறிப்பு. தாவரவியல் பூங்கா வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. நிலங்களை அபகரிக்காமல் பூங்கா அமைத்து நிர்வகிக்கும் பொறுப்பை மாகாண சபையிடம் தாருங்கள் என்றுதான் கேட்கிறோம்.

ஆனால், தமிழ்மக்களுக்கு மாகாண சபைகளினூடாக வழங்கப்பட்ட அற்பசொற்ப அதிகாரங்களைக்கூட விட்டுவைக்க நல்லாட்சி அரசாங்கம் தயாராக இல்லை.


பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து உள்ளுராட்சி சபைகளுக்கு இருந்த கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவது உட்பட பல அதிகாரங்களை நகர அபிவிருத்தி அதிகாரசபை தன்வசம் எடுத்துக் கொண்டுள்ளது.

புதிய அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கும் என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டு, இன்னொரு புறம் அவசரம் அவசரமாக மாகாணங்களின் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள மிகக் குறைந்த அதிகாரங்களையும் இரகசியமான முறையில் பறித்து வருகிறது. இது தொடர்பாக நாம் விழிப்பாக இல்லாவிட்டால் அரசியல் ரீதியாகத் தமிழ்மக்கள் மிகப்பெரும் தோல்வியைச் சந்திக்க வேண்டி ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்