மனிதனின் ஆதி மூதாதையர் படிமம் சீனாவில் கண்டுபிடிப்பு!

Published By: Devika

31 Jan, 2017 | 01:22 PM
image

மேலே நீங்கள் காண்பது நமது மூதாதையரின் ஆதி வடிவம்தான்! கூர்ப்பு விதியின்படியே இன்றைய மனிதன் உருவெடுத்தான் என்பது மனிதத் தோற்றுவாய் குறித்த விஞ்ஞானிகளின் விளக்கம். அதாவது, புல்லாகி, பூடாகி, புழுவாகி, மரமாகி... கடைசியாய் மனிதன் தற்போதைய தோற்றத்தைப் பெற்றிருக்கிறான்.

இதை உறுதிப்படுத்தும் வகையில், சீனாவின் கடற்படுகையின் அடியில் சேற்றில் புதைந்திருந்த இந்த உயிரினத்தின் படிமம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் வயது சுமார் 540 மில்லியன் ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரையில் உலகில் கண்டெடுக்கப்பட்ட உயிரினப் படிமங்களுள் மிக மிகப் பழைமையானது இது!

இந்தப் படிமத்தை ‘சக்கரைட்டஸ்’ - அதாவது ‘சுருங்கிய சாக்கு’ என்ற பெயரில் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

நமது மூதாதையர்களாக நாம் கருதும் குரங்குகள் கூட சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான் உருவாகியிருக்கின்றன. எனவே, அதற்கும் முந்தைய நமது மூதாதையர்களாக இந்த உயிரினத்தைச் சொல்ல முடியும். இதன் அடிப்படையில், மனிதன் தோன்றுவதற்கு அடிப்படையாக விளங்கிய உயிரினம் இதுவாகக்கூட இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கைப்பையைப் போன்ற தோற்றம் கொண்ட இந்த உயிரினம் முத்துக்கள் போன்ற அமைப்பினால் ஆன பென்னாம்பெரிய வாயைக் கொண்டிருக்கிறது. மேலும், மேற்புறத்தில் நான்கு சிறு குடைகள் போன்ற அமைப்பும் காணப்படுகின்றன. இவை அதன் கண்களாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதைப்போன்ற சுமார் நாற்பது படிமங்கள் மத்திய சீனாவின் ஷாங்ஸி மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுமார் பதினைந்து படிமங்கள் கடலுக்கடியில் உள்ள செறிவான உப்பால் அழியாமல் இருப்பதாகவும் தெரிவித்திருக்கும் விஞ்ஞானிகள், இவற்றை ஆராய்ந்தால் மனித உருவாக்கத்தின் மிக முக்கியமான பல காரணிகள் வெளித்தெரியவரும் என்று நம்புகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right