எதிர்வரும் 9,10,11ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த அரசியலமைப்பு சபையின் உப குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதத்தை நடத்துவதில்லை என வழிநடத்தல்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையுடன் இணைத்தே உபகுழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதத்தை நடத்துவதெனவும் அதற்குரிய பொருத்தமான காலத்தை தீர்மானிப்பதற்காக மீண்டும் இம்மாதம் மூன்றாம் வாரத்தில் கூடுவதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பை வரைவதற்காக அரசியலமைப்பு சபையினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அனைத்துக்கட்சிகளையும் உள்ளடக்கியவாறு நியமிக்கப்பட்ட 21உறுப்பினர்கள் கொண்ட வழிநடத்தல் குழு நேற்று காலை 10.30மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூடியது. இதன்போதே மேற்கண்டவாறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
அக்கூட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வழிநடத்தல் குழுவினால் அடிப்படை உரிமைகள், நீதித்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிதி, பொதுச் சேவை, மற்றும் மத்திய அரசாங்கம், மாகாண சபைகளுக்கிடையிலான தொடர்பு ஆகிய ஆறு விடயங்களையும் கையாள்வதற்காக தனித்தனியான உபகுழுக்களை நியமித்திருந்தது.
அந்த உபகுழுக்கள் அறிக்கைகளை சமர்ப்பித்திருந்த நிலையில் அவ்வறிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் 9,10,11ஆம் திகதிகளில் விவாதம் நடத்துவதெனவும் 5,6ஆம் திகதிகளில் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிப்பது குறித்து ஏக தீர்மானத்திற்கு வருவதற்காக வழிநடத்தல் குழு கூடி ஆராயும் எனவும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற அரசியலமைப்பு சபை அமர்வின் போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அரசியலமைப்பின் வழிநடத்தல் குழுவானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று கூடியிருந்தது. இதன்போது வழிநடத்தல் குழவின் இடைக்கால அறிக்கையை எதிர்வரும் 10ஆம் திகதி அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிப்பது குறித்து ஆராயப்பட்டது.
இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கலந்துகொண்டிருந்த அமைச்சர்களான சுசில் பிரேம ஜெயந்த, நிமல்சிறிபால டி சில்வா ஆகியோர் தமது பங்காளிக்கட்சிகளுடன் இடைக்கால அறிக்கை தொடர்பாக கலந்துரையாடி ஏக முடிவொன்று இதுவரையில் எட்டப்படவில்லை. ஆகவே அதற்காக மேலும் கால அவகாசம் வழங்குமாறு கோரியிருந்தனர்.
இதேகருத்தையே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டு எதிரணியின் தலைவருமான தினேஷ்குணவர்த்தனவும் வலியுறுத்தினார். குறிப்பாக அவசரப்பட்டு இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்காது பொறுமையாக ஆராய்ந்து அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய பின்னர் அதனை சமர்ப்பித்து விவாதிக்கலாம் எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.
இச்சமயத்தில் குறிக்கிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தமிழ் முற்போக்கு கூட்டணியினராகிய நாமும், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து எமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் கூட்டு அறிக்கையொன்றை வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிப்பதாக தீர்மானித்திருந்தோம் இருப்பினும் அப்பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதால் கால அவகாசம் தேவையாகவுள்ளது என்றார்.
இந்நிலையில் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளின் ஏகமனதாக இணக்கப்பாடு இன்றி அதனை அரசியலமைப்புச் சபையில் சமர்ப்பிக்க முடியாது. அதேநேரம் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படாது வெறுமனே உபகுழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக விவாதிப்பதில் பயனில்லை. ஆகவே இடைக்கால அறிக்கையையும் சமர்ப்பித்து அதனுடன் இணைத்தே உபகுழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதத்தை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சில உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து இடைக்கால அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான பொருத்தமான காலம் குறித்து தீர்மானிப்பதற்காக இம்மாதம் மூன்றாம் வாரத்தில் மீண்டும் வழிநடத்தல் குழு கூடுவதெனவும் 9, 10, 11ஆம் திகதிகளில் இடைக்கால அறிக்கைகள் குறித்த விவாதங்களை நடத்துவதில்லை எனவும் வழிநடத்தல் குழு அங்கத்தவர்களால் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM