குப்பையில் வீசப்பட்ட அதிர்ஷ்டச் சீட்டுக்கு ஒன்றே கால் கோடி ரூபா பரிசு

Published By: Devika

03 Jan, 2017 | 01:35 PM
image

குப்பையில் வீசப்பட்ட லொத்தர் சீட்டு ஒன்றுக்கு இலங்கை மதிப்பில் ஏறக்குறைய ஒன்றே கால் கோடி ரூபா பரிசு விழுந்த சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.

ஜோவேன் ஜொனிசன் (37) என்ற பெண் லொத்தர் சீட்டு வாங்கும் பழக்கம் உடையவர். சிறு சிறு பரிசுகளும் அவருக்குக் கிடைத்திருக்கின்றன.

கடந்த 28ஆம் திகதி அவர் வாங்கிய ஒரு சீட்டுக்கு பரிசு எதுவும் கிடைக்காததால் அதைக் குப்பையில் வீசிவிட்டார். ஆனால், மூன்று நாட்களின் பின் கடந்த 31ஆம் திகதி, புதிய சீட்டொன்றை வாங்கச் சென்றவருக்கு ஆச்சரியம் + அதிர்ச்சி காத்திருந்தது.

ஆறுதல் பரிசுக்குரிய டிக்கெட்டுகள் குறைவாக இருந்தமையால் ஒட்டு மொத்த ஆறுதல் பரிசான சுமார் 66 ஆயிரம் பவுண்ட்கள் அவர் வாங்கியிருந்த சீட்டுக்குக் கிடைத்திருந்தது.

இதைக் கண்டதும் பதைபதைத்துப் போன ஜோவேன், தனது வீட்டுக்கு அருகே இருந்த குப்பைத் தொட்டிக்கு தலைதெறிக்க ஓடிச் சென்றார். தெய்வாதீனமாக நத்தார் விடுமுறையால் குப்பை அள்ளப்படாததால், தொட்டியில் இருந்த குப்பைகளைக் கிளறி அந்த அதிர்ஷ்டச் சீட்டைக் கண்டெடுத்தார்.

பரிசுப் பணத்தை வாங்கிவிட்ட மகிழ்ச்சியில் இருக்கும் ஜோவேன், தனது பதினைந்து வருடக் காதலரைத் திருமணம் செய்யப் போகிறாராம், இரண்டு குழந்தைகளுடன்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right