காலத்தின் சோதனைக்கு காஸ்ட்ரோவின் மரபு தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழவே செய்கிறது. ஆனால், அவர் வரலாற்றின் சரியான பக்கத்திலேயே நின்றிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. சோசலிசம் அல்லது மரணம் என்பதே பிடல் காஸ்ட்ரோவின் பிரசித்தி பெற்ற அறைகூவல். சோசலிசத்தைக் கைவிட மறுத்த அவரை 90 வயதில் மரணம் தழுவிக் கொண்டது.
பத்து வருடங்களுக்கு முன்னர் சுகவீனம் காரணமாக பதவியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி 2016 நவம்பர் 25 காலமானதையடுத்து வரலாற்றில் அவருக்குரிய இடம் குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை உலக ஊடகங்களில் காணக்கூடியதாக இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தனிச்சிறப்புக்குரிய புரட்சித் தலைவர்களில் ஒருவர், நீண்டகாலம் ஆட்சியதிகாரத்தில் இருந்த தலைவர், லத்தீன் அமெரிக்காவின் இறுதிப் புரட்சிவாதி, உறுதி குலையாத ஏகாதிபத்திய எதிர்ப்பு வழிகாட்டி, இறுதி மூச்சு வரை சோசலிச நம்பிக்கைகளைக் கைவிடாத உயர்ந்த தலைவர் என்ற புகழஞ்சலிகள் தொடக்கம் இடதுசாரி ஏதேச்சாதிகாரி, கொடிய சர்வாதிகாரி, மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் அரசியல் எதிரிகளையும் மூர்க்கத்தனமாக ஒடுக்கிய கொடுங்கோன்மையாளர் என்ற வசைபாடல்கள் வரை அந்த விமர்சனங்கள் அவற்றைச் செய்பவர்களின் அரசியல் சிந்தனைகளின் போக்கில் பல்வேறு வண்ணங்களில் அமைந்திருக்கின்றன. ஹவானா பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துக்கொண்ட பிறகு 1950 களின் முற்பகுதியில் இளம் கிளர்ச்சிவாதியாக தோழர்களுடன் சேர்ந்து நடத்திய இராணுவ முகாமொன்றில் மீதான தாக்குதல் தோல்வியில் முடிந்ததையடுத்து சிறையிலடைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது காஸ்ட்ரோ, வரலாறு தன்னை விடுதலை செய்யும் என்று கூறியிருந்தார். அவ்வாறு அவர் நம்பிக்கை கொண்டிருந்த வரலாற்றில் அவரை எவ்வாறு சூழமைவு படுத்துவது என்பதே இன்று எழுந்திருக்கின்ற பெருவாரியான விமர்சனங்களின் மையப் பொருளாக விளங்குகிறது.
கியூபாவின் புரட்சியுடன் மாத்திரம் நின்றுவிடாமல் ஆபிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்ட இயக்கங்களினதும் இடதுசாரிக்கிளர்ச்சிகளினதும் உந்துசக்தியாக விளங்கியவர் என்று கூறப்படுகின்ற காஸ்ட்ரோ, உலகில் நடந்திருக்கக்கூடிய சகல விடுதலைப் போராட்டங்கள் தொடர்பிலும் ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடித்தாரா என்ற கேள்வியுடன் முன்வைக்கப்பட்டிருக்கும் விமர்சனங்கள் இன்றைய தருணத்தில் முக்கியமாக நோக்கப்பட வேண்டியவையாகும்.
கடந்தவாரம் காஸ்ட்ரோவின் மறைவிற்கு பிறகு பல தமிழர்களினால் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள் காஸ்ட்ரோவின் கியூபா இலங்கைத் தமிழர் உரிமைப்போராட்டத்தைப் பொறுத்தவரை ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்கவில்லை என்ற குற்றச்சாட்டை மையமாகக் கொண்டிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக, இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டமீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுயாதீனமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவந்த தீர்மானங்களுக்கு கியூபா எதிராக வாக்களித்து இலங்கை அரசாங்கத்துக்கு சார்பாக நடந்துக்கொண்டது என்பதே அந்தத் தமிழர்களின் மனக்குறை. உலகம் பூராகவும் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கு ஒருமைப்பாட்டை வெளிகாட்டவேண்டிய கடமையைக் கொண்ட "சோசலிச கியூபா" இலங்கையில் ஒடுக்குமுறையாளர்களின் பக்கத்திலேயே நின்றிருக்கிறது என்றே அந்த சமூக ஊடகப்பதிவுகள் சுட்டிக்காட்டியிருந்தன.
இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தின் போதோ அல்லது அந்த இறுதிக் கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவாவில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட போதோ பிடல் காஸ்ட்ரோ கியூபாவில் ஆட்சியதிகாரத்தில் இருக்கவில்லை. அவ்வாறு அவர் பதவியில் இருந்திருந்தாலும் கூட கியூபா ஜெனீவாவில் வித்தியாசமான முறையில் நடந்து கொண்டிருக்கும் என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை.
புரட்சிகளைச் செய்தும் விடுதலைப் போராட்டங்களை நடத்தியும் ஆட்சியதிகாரத்துக்கு வந்த அரசியல் இயக்கங்களும் சரி, தலைவர்களும் சரி புவிசார் அரசியல் யதார்த்த நிலைவரங்களை (Geo Political Realities ) அடிப்படையாகக் கொண்டே சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களில் அணுகுமுறைகளைக் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். இந்த அணுகுமுறைகளில் இருக்கக்கூடிய தார்மீக நெறிப்பிறழ்வினால் உலகின் பல பாகங்களில் நியாய பூர்வமான உரிமைப் போராட்டங்கள் பாதிக்கப்பட்ட பல உதாரணங்களை எடுத்துக்கூற முடியும். அந்தப் பிறழ்வை எதுவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதெனினும், துரதிஷ்டவசமாக அதுவே நியதியாகிப் போய்விட்டது.
அன்றைய புவிசார் அரசியல் யதார்த்த நிலைவரங்களுக்குப் பொருத்தமான முறையில் காஸ்ட்ரோ செயற்பட்டிருக்காவிட்டால், கியூபாவை சோசலிசக் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற ஒரு நாடாகக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கலாம். உலக விவகாரங்களில் இத்தகைய அணுகுமுறைகளை காஸ்ட்ரோ மாத்திரமல்ல, சீனாவின் மாஒசேதும் கூட கடைப்பிடித்திருந்தார். இந்தக் கருத்தியலின் அடிப்படையிலேயே இலங்கைப் பிரச்சினையில் கியூபா எடுத்துவந்திருக்கக் கூடிய நிலைப்பாடுகளை நோக்க வேண்டியிருக்கிறது. இப்படிக் கூறும் போது அதை நியாயப்படுத்த முயற்சிப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்ளத்தேவையில்லை. இந்த புவிசார் அரசியல் நியதியினால் பெரிதும் பாதிக்கப்பட்ட உலகப் போராட்டங்களில் இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்டமும் ஒன்று.
ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மைத் தேசிய இனங்கள் அவற்றின் போராட்டங்களுக்கு உறுதுணையாக அமையக்கூடியதாகவே அயலுலக அரசியல் நிலைவரங்கள் அமையவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் நம்புவதும் இயல்பானதே. அதில் தவறு இல்லை. இதற்கு நெல்சன் மண்டேலா சம்பந்தப்பட்ட இரு உதாரணங்களை இங்கு கூறமுடியும்.
ஆபிரிக்காவில் இன ஒதுக்கலுக்கு எதிரான கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்தின் உறுதியான ஆதரவாளராக காஸ்ட்ரோ விளங்கினார். தென்னாபிரிக்க ஜனாதிபதியாக மண்டேலா வந்த பிறகு அவர் கியூபாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணினார். அது தொடர்பில் அமெரிக்காவில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அது குறித்து கருத்துத் தெரிவித்த மண்டேலா "கியூபாவுடனான எமது உறவுகள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பது தொடர்பிலான அறிவுரை கடந்த 40 வருடங்களாக இனஒதுக்கல் ஆட்சியை ஆதரித்தவர்களிடமிருந்து வருகிறது. எமது மிகவும் நெருக்கடியான நேரங்களில் எம்மைப்பற்றி ஒருபோதுமே கவலைப் படாதவர்களிடமிருந்து வருகின்ற அறிவுரைகளை எந்தவொரு கௌரவமான மனிதரினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று உறைப்பாகக் கூறினார். மண்டேலா ஒரு தடவை வாஷிங்டனுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது தொலைக்காட்சி கலந்துரையாடலொன்றில் அவரிடம் "கேணல் மும்மர் கடாபி மோசமான ஆட்சியாளராக இருந்த போதிலும் நீங்கள் அவரை ஏன் ஆதரிக்கிறீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் "இன ஒதுக்கல் கொள்கையைக் கடைப்பிடித்த வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான எமது விடுதலைப் போராட்டத்தை கடாபி உறுதியாக ஆதரித்து நின்றார். அதனால் மாத்திரமே அவரை நாம் ஆதரிக்கின்றோம்" என்று பதிலளித்திருந்தார். அவரின் மேற்கூறப்பட்ட இரு பதில்களும் உணர்த்துகின்ற செய்தியை புரிந்துகொள்வதில் எவருக்கும் சிரமமில்லை.
அதேவேளை எல்லாக் காலத்துக்குமே பொருத்தமான தலைவர் என்றோ அரசியல் இயக்கமென்றோ எதுவும் நிரந்தரமாக இருந்துவிடவும் முடியாது. ஒரு அரசியல் தலைவரின் பங்களிப்பை அவர் வாழ்ந்த காலகட்டத்தின் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டே மதிப்பிட வேண்டும்.
காஸ்ட்ரோவை இருபதாம் நூற்றாண்டின் லத்தீன் அமெரிக்காவின் காலனித்துவ எதிர்ப்பு பேராட்டங்களின் அரசியல் மற்றும் அறிவுஜீவித்துவ பின்புலத்தில் வைத்து நோக்க வேண்டுமே தவிர, இருபத்தோராம் நூற்றாண்டின் கண்களின் ஊடாகப் பார்க்கலாகாது. காஸ்ட்ரோவின் மரணத்தை கடந்த நூற்றாண்டின் கெடுபிடி (cold war) யுத்த கால கோட்பாட்டுப் பகைமையின் உச்ச நிலையை உருவகித்து நின்ற ஒரு புரட்சிகரக் கொரில்லாத் தலைவரின் விடைபெறுதலாகவே நோக்கவேண்டும். காஸ்ட்ரோ ஒரு கிளர்ச்சித் தலைவராக உருவாகுவதைச் சாத்தியமாக்கிய சூழ்நிலைகளையும் உலகின் மேற்கு அரைக்கோளத்தில் கம்யூனிஸக் கொள்கைகளைப் பின்பற்றிய முதன்முதலான ஒரு நாட்டுக்கு தலைவராக அவர் வரக்கூடியதாக இருந்த சூழ்நிலைகளையும் அடிப்படையாக வைத்தே அவரை மதிப்பிட வேண்டும். கரிபியன் பிராந்தியத்துக்கோ அல்லது இன்று நாம் அபிவிருத்தியடைந்துவரும் உலகம் என்று அடையாளப்படுத்துகின்ற பிராந்தியங்களுக்கோ ஜனநாயகம் சென்றடைந்திராத ஒரு காலகட்டத்தில் கியூபாவில் அமெரிக்காவுக்கு ஆதரவானகொடுங்கோன்மை அரசாங்கம் ஒன்றுக்கு எதிரான புரட்சியை காஸ்ட்ரோ வழிநடத்தி வெற்றிக்கு இட்டுச் சென்றார். சுகவீனம் காரணமாக பத்து வருடங்களுக்கு முன்னர் காஸ்ட்ரோ பதவியில் இருந்து விலகியதையடுத்து சகோதரர் ராவுல் ஜனாதிபதியாக பதவியேற்று ஆட்சி நடத்தி வருகின்ற போதிலும், இன்றைய நவீன கியூபா என்பது காஸ்ட்ரோவினால் கட்டியெழுப்பப்பட்டதேயாகும். சோவியத் யூனியனுடனான அவரின் கூட்டு உலகை அணுவாயுதப் போரின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தியது.
கியூபாவுக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதித்த அமெரிக்கா 1961 ஜனவரியில் இராஜ தந்திர உறவுகளையும் துண்டித்துக்கொண்டது. அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனத்தின் (சி.ஐ.ஏ) ஆதரவுடன் சுமார் 1400 கியூப அஞ்ஞாதவாசிகள் காஸ்ரோவின் ஆட்சியை தூக்கியெறியும் நோக்குடன் படகுகளில் சென்று கியூபாவின் தென்கரையோரத்தில் உள்ள பிக்ஸ் குடாவில் அந்த வருடம் ஏப்ரலில் ஆக்கிரமிப்பு முயற்சியொன்றை மேற்கொண்டனர். ஆனால் அது தோல்வியிலேயே முடிவடைந்தது. அந்தத் தோல்வி, கியூபாவை ஆக்கிரமிக்கும் யோசனைகளை கைவிடுவதற்கு அமெரிக்காவை நிர்ப்பந்தித்தது. எனினும், காஸ்ட்ரோவுக்கு எதிராக சதி முயற்சிகளை வாஷிங்டன் கைவிடவில்லை. கியூபாவில் அவர் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் பத்து ஜனாதிபதிகள் பதவியில் இருந்திருக்கிறார்கள். அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதைப் போன்று உலகில் வேறு எந்தவொரு நாட்டுத் தலைவருக்கும் எதிராக கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதில்லை. அமெரிக்காவில் வாழும் கியூப அஞ்ஞாதவாசிகளினால் அல்லது அமெரிக்க அரசாங்கத்தினால் 630 க்கும் அதிகமான கொலைச் சதி முயற்சிகள் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக ஒரு கணக்கு உண்டு.
கியூபாவில் சோவியத் அணுவாயுத ஏவுகணைகள் நிலை வைக்கப்பட்டிருப்பதாக 1962 அக்டோபர் 22 அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி அறிவித்ததையடுத்து மாஸ்கோவுக்கும் வாஷிங்டனுக்கும் இடையேயான கெடுபிடி யுத்தத்தின் மிகப்பெரிய நெருக்கடிவெடித்தது. கியூபாவைச் சுற்றி கடற்படை முற்றுகையை அமெரிக்கா மேற்கொண்டதையடுத்து அணுவாயுதப் போர் அபாயம் ஏற்பட்டது. ஆனால், ஒருவார காலமாக முன்னெடுக்கபட்பட்ட தீவிர இராஜதந்திர முயற்சிகளையடுத்து அன்றைய சோவியத் தலைவர் நிகிட்டா குருஷேவ் கியூபாவில் இருந்து அணுவாயுத ஏவுகணைகளை விலக்கிக் கொண்டார். கியூபாவில் காஸ்ட்ரோ ஆட்சியை வீழ்த்துவதற்கு அதற்குப் பிறகு முயற்சிகளில் ஈடுபடுவதில்லை என்ற அமெரிக்க உறுதிமொழியையடுத்தே சோவித் யூனியன் அவ்வாறு அணுவாயுத ஏவுகணைகளை விலக்கிக் கொள்ள இணங்கியதாகவும் கூட கூறப்பட்டது.
மனித உரிமைகளை மீறுபவர் என்றும் அரசியல் எதிரிகளைக் கொலை செய்தவர் என்றும் மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிக்காமல் கருத்துவெளிப்பாட்டுக்குச் சுதந்திரத்தை மறுத்தவர் என்றும் காஸ்ட்ரோவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அவரின் மரணத்துக்குப் பின்னரும் கூட, கடந்த ஒரு வாரமாக அத்தகைய குற்றச்சாட்டுக்களுடன் கூடிய விமர்சனங்கள் பெருவாரியாக வந்த வண்ணமிருக்கின்றன. ஆனால் அவரோ தனது அத்தகைய நடவடிக்கைகளை 'புரட்சி நீதி என்பது சட்ட வாசகங்களை அடிப்படையாகக் கொண்டதல்ல, தார்மீக நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதே' என்று கூறி நியாயப்படுத்துவதற்குத் தயங்கவில்லை. கம்யூனிஸ்ட் புரட்சிகளைச் செய்த சகல தலைவர்களுக்கும் எதிராக இதே குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. இன்றும் அவை பலத்த விவாதத்துக்குரிய சர்ச்சைகளாகவே விளங்குகின்றன.
காஸ்ட்ரோ தனது நாட்டில் கட்டியெழுப்பிய சோசலிசம் குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள் உண்டு. ஆனால், அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்த அவரின் கொள்கைகளின் விளைவாக உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ளதையும் விட கியூபா சமூகம் ஒப்பீட்டளவில் கூடுதலான அளவுக்கு சமத்துவமானதாக அல்லது ஏற்றத்தாழ்வு குறைந்ததாக விளங்குகின்றது என்பதை மறுதலிக்க இயலாது. கியூபாவின் மிகச்சிறப்பான சுகாதாரப் பராமரிப்பு முறையும் கல்வி முறையுமே அவரது மரபுகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவையாகும். உலகின் தனவந்த நாடுகளுக்கு நிகரானதாக கியூபா மக்களின் ஆயுட்காலமும் படிப்பறிவு வீதமும் காணப்படுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடனும் கூட முன்னுதாரணமான சுகாதாரப் பராமரிப்பு முறை சாத்தியமானதே என்று அவரின் தலைமையின் கீழான கியூபா உலகிற்கு காட்டியது. ஆபிரிக்காவின் பல நாடுகளை கொடிய நோய்கள் படுமோசமாகக் பாதித்த வேளைகளில் எல்லாம் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் உதவிக்குச் செல்லத் தயங்கிக் கொண்டிருந்த நிலைமைகளுக்கு மத்தியில் காஸ்ட்ரோவின் கியூபா தனது மருத்துவர்களையும் பணியாளர்களையும் தாராளமாக அனுப்பி அந்த மக்களை காப்பாற்றியிருக்கிறது.
மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்காவில் மாத்திரமல்ல உலகம்பூராகவுமே இடதுசாரி விடுதலை இயக்கங்களுக்கும் எதிர்காலப் புரட்சிகளுக்கும் உத்வேகம் தருகின்ற ஒரு புரட்சித் தலைவராக காஸ்ட்ரோ விளங்கினார். உலகில் சோசலிசப் பரீட்சார்த்தம் தோல்வி கண்டுவிட்டது என்று கூறப்படுகின்ற போதிலும் கூட, சோசலிசக் கொள்கைகளில் இறுதிவரை நம்பிக்கை கொண்டிருந்தவர் காஸ்ட்ரோ. அவரைப் பொறுத்தவரை புரட்சி என்பது எதிர்காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் இடையிலான சாகும் வரையிலான ஒரு போராட்டம்
1953 ஆம் ஆண்டு கியூபாவின் கிழக்கு நகரான சன்டியாகோவில் தான் தனது தோழர்களுடன் காஸ்ட்ரோ புரட்சியைத் தொடங்கினார். இறுதியில் 1959 ஆம்ஆண்டு புரட்சி வெற்றி பெற்றதையடுத்து சாண்டியாகோவின் நகர மண்டபத்தில் இருந்தே வெற்றிப் பிரகடனத்தை செய்தார். பிறகு தனது போராளிகளுடன் தலைநகர் ஹவானாவுக்கு அவர் வாகன பவனியாக வந்த பாதையின் ஊடாக அவரின் அஸ்தி அதே நகருக்கு இப்போது எடுத்துவரப்பட்டுள்ளது. இடைவழியில் மத்திய கியூபாவில் உள்ள சான்ர கிளாரா நகரில் காஸ்ட்ரோவின் தோழர் ேசகுவேராவின் நினைவாலயத்தில் அஸ்தி கடந்தவாரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
கியூபாவின் சுதந்திர தலைவர் ஜோஸ் மார்ட்டி அடக்கம் செய்யப்பட்ட மயானத்தில் காஸ் ட்ரோவின் அஸ்தி இன்று கல்லறையில் வைக்கப்படுகின்றது. காலத்தின் சோதனைக்கு காஸ்ட்ரோ மரபு தாக்கிப்பிடிக்குமா என்ற கேள்வி எழவே செய்கிறது. ஆனால், அவர் வரலாற்றின் சரியான பக்கத்திலேயே நின்றிருக்கிறார் என்பது மாத்திரம் உண்மை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM