(ரொபட் அன்டனி)
நாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உண்மையான நோக்கத்துடன் எண்ணினால் ஒரே நாளில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
காரணம், கடந்த காலங்களில் பேச்சு நடத்தப்பட்டு உருவாக்கப்பட்ட பல தீர்வு விடயங்கள் உள்ளடங்கிய ஆவணங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சரியானதை பயன்படுத்த முடியும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த கலந்துரையாடலின்போது சுமந்திரன் எம்.பியும் பாராளுமன்றத்தில் பிரசன்னமாகி இருந்தார்.
இந்நிலையில் அது தொடர்பில் வினவியபோதே சுமந்திரன் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
வரவு - செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்ததும் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த ஒரு தினத்தில் சகல அரசியல் கட்சிகளுடனும் தேசிய பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், அதிகாரப் பகிர்வு தொடர்பான இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
13ஆம் திருத்தச் சட்டத்துக்கு உட்பட்ட அதிகாரப் பகிர்வுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தெரிவித்திருந்தார்.
அதேபோன்று பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து சுயாதீனமாக சுதந்திர மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியை ஸ்தாபித்து செயற்படுகின்ற டலஸ் அழகப்பெருமவும் இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க தயாராக இருப்பதாகவும், ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மேலும் குறிப்பிடுகையில்,
75ஆவது சுதந்திர தினத்தின்போது தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று ஜனாதிபதி ரணில் அறிவித்திருந்தார். அது தொடர்பாக நான் சில விடயங்களை பாராளுமன்றத்தில் அவரது கவனத்துக்கு கொண்டுவந்தேன்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் ஒரே நாளில் சகல தரப்பினரும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால், இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியும். ஆனால், அதற்கு நேர்மையுடன் ஆளுந்தரப்பும் முன்வர வேண்டும்.
இங்கு அந்த நேர்மைத்தன்மையே அவசியமாகின்றது. அதாவது இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று நேர்மையாக எண்ணினால் அல்லது நினைத்தால் அதனை ஒரே நாளில் அமர்ந்து பேச முடியும். அதனடிப்படையில் தீர்வு காண முடியும்.
காரணம், இதற்கு முன்னர் பேச்சுவார்த்தை நடத்தி வரையப்பட்ட பல தீர்வுத்திட்ட ஆவணங்கள் காணப்படுகின்றன.
2000ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பிராந்தியங்கள் ஒன்றியம் என்ற அடிப்படையிலான தீர்வுப் பொதியை கொண்டு வந்தார்.
அதனை கொண்டு வரும்போது அவருடன் மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, நிமால் சிறிபால டி சில்வா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இருந்தனர்.
அன்று ஐக்கிய தேசிய கட்சி அந்த தீர்வுப் பொதியை முழுமையாக எதிர்க்கவில்லை. மாறாக, அதில் காணப்பட்ட ஒரு நிலைமாறுகால ஏற்பாட்டை மட்டுமே எதிர்த்தது.
எனவே, அந்த திட்டத்தை வேண்டுமானால், பயன்படுத்தலாம். அதேபோன்று 2017ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் ஒரு தீர்வு முன்மொழியப்பட்டது.
அதுமட்டுமன்றி, 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் திஸ்ஸ விதாரண தலைமையில் அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் குழு இணைந்து ஒரு தீர்வுத் திட்டத்தை உருவாக்கியது.
இவ்வாறு கடந்த காலங்களில் பல பேச்சுவார்த்தைகளில் முன்னெடுக்கப்பட்ட யோசனைகள் அடங்கிய ஆவணங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சரியானதை நடைமுறைப்படுத்த முடியும்.
எனவே, இதற்கு மூன்று மாதங்கள் தேவை இல்லை. அதிக நாட்களும் தேவையில்லை. ஒரு நாள் முழுவதும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால், இந்த பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வுத் திட்டத்தை அமுல்படுத்த முடியும்.
எனவே, அதற்கு எதிர்பார்ப்பு அவசியமாகிறது. அதாவது ஆளும் தரப்பு இதனை இதயசுத்தியுடன் நேர்மையான முறையில் செயற்படுத்த வேண்டும். அவ்வாறு ஆளும் தரப்பு எண்ணினால், நினைத்தால், நிச்சயமாக இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM