பஷிலுக்காக எடுத்த 3 தீர்மானங்கள் முழு நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது - கம்மன்பில

Published By: Digital Desk 5

12 Nov, 2022 | 12:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இரசாயன உரத்தை தடை செய்தால் விவசாய புரட்சி செய்யலாம் என்ற தவறான ஆலோசனையை வழங்கியது யார் என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தற்போதாவது நாட்டு மக்களுக்கு குறிப்பிட வேண்டும். 

பொதுஜன பெரமுன அரசாங்கம் பஷில் ராஜபக்ஷவிற்காக எடுத்த மூன்று தீர்மானங்கள் முழு நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. 

விவசாயத்துறைக்கு ஏற்படுத்திய தாக்கம் கோட்டய ராஜபக்ஷவின் ஆட்சியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் வெள்ளிக்கிழமை (11) மாலை இடம்பெற்ற இலங்கை மக்கள் கூட்டணியின் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கும்,எமக்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.

இரசாயன உரம் இறக்குமதி மற்றும் பாவனையை தடை செய்யும் வகையிலான பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க போவதாக அவர் குறிப்பிட்டார்.

சேதன பசளை திட்டம் சிறந்தது,ஆயினும் அதனை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டும்,ஆகவே இரசாயன உரம் இறக்குமதி மற்றும் பாவனை ஒரே தடவையில் தடை செய்யும் தீர்மானத்தை பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.

ஜனாதிபதி எது குறிப்பிட்டாலும் 'ஆம் சேர்,உங்கள் தீர்மானம் அருமை' என அனைத்திற்கும் புகழ்பாடும் தரப்பினர் ஜனாதிபதியிடம் இரசாயன உரத்தை தடை செய்தால் நீங்கள் உலக மட்டத்தில் பெருமையாக பேசப்படுவீர்கள், விவசாயத்தில் புரட்சி செய்யலாம் என புகழ்பாடினார்கள்

தவறான புகழ்பாடல்களுக்கு கவனம் செலுத்திய முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இரசாயன உரத்தை தடை செய்தார்.

சேதனை பசளை திட்டம் ஆரம்பம் தோல்வியடைந்த போது,மீண்டும் இரசாயன உரத்தை இறக்குமதி செய்து,சேதனை பசளை திட்டத்தை கட்டம் கட்டமாக செயற்படுத்துமாறு கொழும்பு மாவட்ட அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் அழுத்தமாக வலியுறுத்திய போது,விவசாய பிரதேச அமைச்சர்கள் ' சேதன பசளை திட்டத்தை இரத்து செய்தால்,ஜனாதிபதியின் ஆத்ம கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படும்,ஆகவே இரசாயன உரத்தை மீண்டும் இறக்குமதி செய்ய கூடாது என மீண்டும் புகழ்பாடினார்கள்.

இரசாயன உரம் தடை செய்யப்பட்டதால் விவசாயத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணியாக அமைந்துள்ளது.

இரசாயன உரத்தை தடை செய்தால் விவசாய புரட்சி செய்யலாம் என்ற தவறான ஆலோசனையை வழங்கியது யார் என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தற்போதாவது நாட்டு மக்களுக்கு குறிப்பிட வேண்டும்.

விவசாயத்துறைக்கு ஏற்பட்ட தாக்கம் கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியை முழுமையாக முடிவுக்கு கொண்டு வந்தது.

அமெரிக்க பிரஜையான பஷில் ராஜபக்ஷ இரட்டை குடியுரிமையுடன் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பதவி வகிக்க வேண்டும் என்பதற்காக ராஜபக்ஷர்கள் அரசியல் ரீதியில் தவறான தீர்மானங்களை எடுத்தார்கள்.பஷில் ராஜபக்ஷவிற்காகவே அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

எவ்விதமான பொருளாதார ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளாமல் 2019ஆம் ஆண்டு வரிச்சலுகை வழங்கப்பட்டது.

தூரநோக்கமற்ற வகையில் வழங்கப்பட்ட வரிச்சலுகையினால் அரச வருமானம் பெருமளவில் இழக்கப்பட்டது,அதன் தாக்கத்தை தற்போது எதிர்க்கொள்கிறோம்.

2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலின் வெற்றியை இலக்காக கொண்டு வரி சலுகை வழங்கப்பட்டது,சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத 1இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கல்,60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கல் என்ற மூன்று தவறான தீர்மானங்கள் பஷில் ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்திற்காக எடுக்கப்பட்டது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று பஷில் ராஜபக்ஷவை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே பல பில்லியன் ரூபா அரச வருமானம் இழக்கப்பட்டது.

பொருளாதாரத்தை முழுமையாக இல்லாதொழித்த பொதுஜன பெரமுனவினர் தற்போது மீண்டும் எழுவதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டை வலம் வருகிறார்கள்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் பொதுஜன பெரமுன படுதோல்வியடையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் இடம்பெற்றால்தான் பொருளாதார...

2024-03-29 15:38:29
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37