இந்தியாவுடனான போட்டிக்கு முன் ஷக்கிப் வெளியிட்ட அதிர்ச்சி தரும் கருத்து

Published By: Digital Desk 5

02 Nov, 2022 | 01:29 PM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இந்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மகுடம் சூடுவது தமது அணியின் இலக்கு அல்ல என பங்களாதேஷ் அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான குழு 2 சுப்பர் 12 சுற்று உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ள நிலையில் நெற்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் வெளியிட்டுள்ள இந்தக் கருத்து அனைவரினதும் புருவங்களை அகல விரிக்கச் செய்துள்ளது.

இந்தியாவின் குறிக்கோள் உலகக் கிண்ணத்தை வென்றெடுப்பது என்பதை அறிந்திருக்கும் சகலதுறை வீரர் ஷக்கிப் அல் ஹசன், கிண்ணத்தை விட எதிரணியினரின் தோள்களில் அழுத்தம் சுமத்துவதை குறியாக கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

'இந்த போட்டியில் வெற்றிபெறுவதற்கு அனுகூலமான அணி இந்தியாவாகும். அவர்கள் உலகக் கிண்ணத்தை வென்றெடுக்கவே இங்கு வருகை தந்துள்ளனர். நாங்கள் உலகக் கிண்ணத்தை வென்றெடுக்க இங்க வரவில்லை' என்றார் ஷக்கிப் அல் ஹசன்.

'உங்களுக்கு சூழ்நிலை தெரியும். இந்தியாவுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்றால் அது தழைகீழ் வெற்றியாகத்தான் இருக்கும். எனினும் இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுக்க நாங்கள் முடிந்த மட்டும் முயற்சி செய்வோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.

குழு 2இல் இடம்பெறும் இந்தியாவும் பங்களாதேஷும் தலா 2 வெற்றிகள், ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளைப் பெற்று நிகர ஓட்ட வேக அடிப்படையில் முறையே 2ஆம், 3ஆம் இடங்களில் இருக்கின்றன.

இவ் வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரண்டு குழுக்களிலும் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியான தென் ஆபிரிக்கா குழு 2இல் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

வலிமைமிக்க எதிரணி என கருதும் உணர்வுகளுடன் விளையாடாமல் சிறந்த அணுகுமுறைகளில் கவனம் செலுத்தி திறமையாக விளையாடுமாறு தனது வீரர்களை ஷக்கிப் அல் ஹசன் வலியுறுத்தியுள்ளார்.

'நாங்கள் எந்தவொரு தனி எதிராளியைப் பற்றியும் கவனம் செலுத்த விரும்பவில்லை. எங்களது திட்டத்தைப் பின்பற்றி விளையாடவே விரும்புகிறோம்.

'ஒரே அணி என்ற உணர்வுடன் சகலதுறைகளிலும் முழு ஆற்றல்களை வெளிப்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துவோம்.

'எஞ்சியுள்ள எங்களது இரண்டு போட்டிகளிலும் நாங்கள் திறமையாக விளையாடவேண்டும். இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ நாங்கள் வெற்றிபெற்றால் அது தலைகீழ் பெறுபேறாகத்தான் இருக்கும்.

'இரண்டு அணிகளும் எங்களைவிட பலம்வாய்ந்தவை. நாங்கள் சிறப்பாக விளையாடினால், அன்றைய நாள் எங்களுடையதாக இருந்தால், எங்களால் வெற்றிபெற முடியாது என்பதற்கு எவ்வித காரணமும் இல்லை. அயர்லாந்து, ஸிம்பாப்வே போன்ற அணிகள், இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளை வெற்றிகொண்டதை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவ்வாறே எங்களாலும் செய்யமுடிந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்' என ஷக்கிப் அல் ஹசன் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியாவின் ஏனைய நகரங்களில் போன்று அடிலெய்டிலும் பங்களாதேஷ் இரசிகர்கள் பெருமளவில் குவிவார்கள் என ஷக்கிப் கருதுகிறார். எவ்வாறாயினும் எதிரணி (இந்தியா) இரசிகர்கள் அரங்கில் நிறைந்து வழிவார்கள் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

'அவர்கள் எங்கு சென்று விளையாடினாலும் இந்தியாவுக்கு நல்ல ஆதரவு கிடைப்பதால், அரங்கம் நிறைந்து வழியும் என நான் நினைக்கிறேன். அத்துடன் சிறந்த ஒரு போட்டியாக இது அமையும் எனவும் கருதுகிறேன்' என ஷக்கிப் அல் ஹசன் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31