ஏம்.எஸ்.தீன்
ஜனாதிபதிக்கு இருக்கின்ற நிறைவேற்று அதிகாரத்தை குறைப்பதற்காக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 22ஆவது திருத்த சட்டம் 179வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்ட மூலத்திற்கான வாக்களிப்பில்; அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தவிர ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.
இந்தச்சட்ட மூலத்துக்கான வாக்களிப்பின் போது சுமார் 40பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருக்கவில்லை. அதிலும் குறிப்பாக ஆளும் கட்சியைச் சேர்ந்த 20பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்ட மூலத்திற்கு நிறைவேற்றப்பட்ட போது பாராளுமன்றத்தில் இருக்கவில்லை.
இவர்கள் பஷில் ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டு இருந்ததாகவும் அதன்காரணமாகவே பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆயினும், இரட்டைப் பிரஜா உரிமையுள்ளவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும், பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவும் வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே தாம் தொடர்ந்தும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
22ஆவது சட்டமூலத்தின் மூலமாக ஜனாதிபதிக்கு இருக்கின்ற நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்படுவது மட்டுமல்லாது அந்த அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கும், அரசியலமைப்பு பேரவைக்கும் மாற்றப்படுவதாகவும் இருக்கின்றது.
இதேவேளை இரட்டைபிரஜா உரிமையுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்று இருபதாவது திருத்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம் இந்திருத்தச் சட்டம் மூலமாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
22ஆவது திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்போகின்ற பேச்சுக்கள் இடம்பெற்ற போது அதற்கு பொதுஜன பெரமுன எந்த விதத்திலும் ஆதரவு வழங்காது அதை தோற்கடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டது.
அது மட்டுமல்லாது இச்சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படும் இறுதிநேரம் வரை நிறைவேற்றப்படுவதற்கான ஆதரவு ஆளுங் கட்சி தரப்பினரிடம் காணப்படவில்லை. குறிப்பாக பொதுஜன பெரமுனவின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாகல காரியவசம், பஷில் ராஜபக்ஷவை இலக்கு வைத்தே இச்சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமக்கே உரித்தான பாணியில் ஆளுந்தரப்பினருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பின்னரே ஆதரவு வழங்குவதற்குரிய உத்தரவை சமல் ராஜபக்ஷ ஆளுந்தரப்பினருக்கு வழங்கினார்.
ஆளுங்கட்சி உறுப்பினர்களிதும், எதிர்க்கட்சி உறுப்பினர்களினதும் ஆதரவுடன் இந்தச் சட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு சமூகம் அளித்திருக்கவில்லை. இச்சட்டம் மூலத்திற்கு ஆதரவாக சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோர்களும் வாக்களித்திருந்தனர். இதேவேளை சட்டம் மூலத்pற்கு எதிராக பொதுஜன பெரமுனவின்; பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறிருக்க தனிநபர் ஒருவருக்கு முழுமையான அதிகாரங்கள் சென்றடைவதற்கும், தனிநபர் ஒருவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்துவதற்கும், இரட்டைப் பிரஜா உரிமையுள்ள ஒருவர் பாராளுமன்றத்துக்கு செல்வதற்கும் குறிப்பாக பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு செல்வதற்கும், அவர் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டு நாட்டினுடைய பொருளாதாரம் வீழச்சியடைவதற்கும் காரணமாக இருந்தது 20ஆவது திருத்தம் தான்.
இந்த திருத்தமே இலங்கையின் அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத வடுவாக இருக்கின்றது. அந்த வடுவில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கெடுத்துக் கொண்டார்கள் என்பது முஸ்லிம் அரசியல் வரலாற்றில் படிந்த கறையாகும்.
பொதுஜன பெரமுன ஆட்சி அமைத்த போது முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியினுடைய தீர்மானம், கட்டுப்பாட்டையும் மீறி அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட வரவு - செலவு திட்டம் மற்றும் இருபதாவது திருத்தச் சட்டமூலங்களுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.
தற்போது முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களும் 22ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வழங்கியிருக்கின்றார்கள். இதனை அவதானிக்கின்ற போது முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமின்றி அரசியல் கட்சிக்கும் அரசியல் ரீதியான கொள்கைகள் கிடையாது என்பது அப்பட்டமாகிறது.
பொருளாதார வீழ்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருப்பதன் காரணமாகவும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து போட்டியிடுவதன் மூலமாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற முடியாத ஒரு நிலை ஏற்படும் என்பதனை பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம், ஹரிஸ், தௌபீக்; போன்றவர்கள் மிகத் தெளிவாக உணர்ந்து இருக்கின்றார்கள்.
இதன் காரணமாக அவர்கள் இந்த 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு தலைவரோடு இணைந்து வாக்களித்தது மாத்திரமல்லாமல் ஒரு சில விவகாரங்களில் தலைவரோடு இணைந்து செயல்பட்டு கொண்டிருப்பதாக கட்சியின் செயலாளர் சட்டதரணி நிசாம் காரியப்பர்; தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இவ்வாறு இப்போது பயணிப்பதற்கு காரணம் பொதுத்தேர்தலில் தாம் தோற்று விடுவோம் என்ற பயமேயன்றி வேறு எதுவும் இல்லை. ஏனென்றால் அரசாங்கம் எல்லா வகையிலும் வீழ்ச்சி கண்ட ஒரு நிலையில் அந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு தேர்தலில் போட்டியிட்டால் மக்களின் ஆதரவு கிடைக்காது என்பது சாதாரணமானவர்களுக்கும் தெரிந்த அரசியலாகும். இந்த கணிப்பினை அவர்கள் மிகத் தெளிவாக தற்போதைய சூழ்நிலையில் அறிந்ததன் காரணமாக தாங்கள் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையோடும், கட்சியோடும் இணைந்து செயல்படும் நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றார்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரில் முஷாரப்; 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு வாக்களிக்காத நிலையில் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல் ரஹீம் அலி சப்ரி மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர்கள் இச்சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். இவர்கள் மக்கள் காங்கிரஸின் தலைவரோடு இணைந்து செயல்படாமல் தனித்தனியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அதனால் இந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸினுடைய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் அடுத்து வருகின்ற தேர்தலில் அக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இல்லாத ஒரு நிலையே உள்ளது. இதனால் அவர்கள் பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டுமாக இருந்தால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ{க்கு பதிலாக வேறு கட்சிகளின் நாட வேண்டியிருக்கின்றது.
குறிப்பாக ஏனைய முஸ்லிம் கட்சிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட வேண்டும் அல்லாது போனால் பேரினவாதக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட வேண்டிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான் அலிசப்ரி ஆகியோர்கள் மீண்டும் கட்சியுடன் இணைவதற்கான வாய்ப்புகள் தென்படுவதாகவும் தெரிவிக்கின்றன. அத்தகைய வாய்ப்புகளை பாராளுமன்ற உறுப்பினர் முஷாப்பின் ஆதரவாளர்கள் கூட ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய முயற்சிகளை எடுக்கலாம்.
எது எவ்வாறு இருந்துவிட்ட போதிலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் ஏற்கனவே இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு அமைச்சர் பதவிகளை பெற்று அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு தமக்கான அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம். கிழக்கு மாகாணத்திற்கு தனியாக அரசியல் கட்சியும், தலைவரும் வேண்டுமென்ற நிலைப்பாட்டை முன்வைத்து முஸ்லிம் காங்கிரஸ{க்கு எதிராகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு எதிராகவும் மக்களை திசை திருப்பலாம் என்று அவர்கள் வகுத்த திட்டங்கள் அத்தனையும் தற்போதைய சூழ்நிலையில் தவிடு பொடியாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM