(நெவில் அன்தனி)
நெதர்லாந்துக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 2 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் இந்தியா 56 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
விராத் கொஹ்லி, அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் அணியின் கட்டுப்பாட்டான பந்துவீச்சும் இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட விரும்பிய இந்தியா 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீரர் கே. எல். ராகுல் 9 ஓட்டங்களுடன் 3ஆவது ஓவரில் ஆட்டமிழந்தபோதிலும் அதன் பின்னர் 3 துடுப்பாட்ட வீரர்கள் அரைச் சதங்களைக் குவித்து இந்திய அணியைப் பலப்படுத்தினர்.
அணித் தலைவர் ரோஹித் ஷர்மா 39 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைப் பெற்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி இந்தியாவின் வெற்றியில் பிரதான பங்காற்றிய விராத் கோஹ்லி மீண்டும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது தொடர்ச்சியான தடவையாக ஆட்டமிழக்காமல் அரைச் சதத்தைக் குவித்தார்.
ரோஹித் ஷர்மாவுடன் 2ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்த விராத் கோஹ்லி, பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் சூரியகுமார் யாதவ்வுடன் 48 பந்துகளில் மேலும் 95 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
44 பந்துகளை எதிர்கொண்ட விராத் கோஹ்லி 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
சூரியகுமார் யாதவ் 25 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களைப் பெற்றார்.
180 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நொக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் நெதர்லாந்து துடுப்பாட்ட வீரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
டிம் ப்ரிங்ள் (20), கொலின் அக்கர்மன் (17), மெக்ஸ் ஓ'டவ்ட் (16), பாஸ் டி லீட் (16), ஷரிஸ் அஹ்மத் (16), போல் வென் மீக்கெரென் (14 ஆ.இ.) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் அவர்களால் கணிசமான ஓட்டங்ளைப் பெரும் அளவிற்கு துடுப்பாட்டத்தில் தாக்குப்பிடிக்கமுடியவில்லை.
பொறுப்பற்ற மற்றும் தவறான அடி தெரிவுகள் என்பனவே அவர்களது ஆட்டமிழப்புகளுக்கு காரணமாகின.
இந்திய பந்துவீச்சில் புவ்ணேஷ்வர் குமார் 2 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
அவரைவிட அக்ஸார் பட்டேல் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: சூரியகுமார் யாதவ்.
இந்தப் போட்டி முடிவுடன் குழு 2க்கான அணிகள் நிலையில் 2 வெற்றிகளுடன் இந்தியா +1.425 என்ற நிகர ஓட்ட வேகத்துடன் 4 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
தென் ஆபிரிக்கா ஒரு வெற்றி, ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளுடன் 3 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடத்தில் இருக்கிறது. அதன் நிகர ஓட்ட வேகம் +5.200ஆக இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM